மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 24 (Post No.3761)

Written by S NAGARAJAN

 

Date: 27 March 2017

 

Time uploaded in London:-  6-31 am

 

 

Post No.3761

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 24

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 9

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம் :

 

49) பால பாரதி என்ற பத்திரிகையை வ.வே.சு ஐயர் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அதன் முதல் தலையங்கத்தில் அவர் மகாகவி பாரதியாரைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

 

 

“எம்பிராட்டிக்கு ஆயிரம் நாமங்கள் இருக்கையில் ‘பாரதி’ என்ற பெயரை ஏன் தெரிந்து கொண்டோமென்றால், அத் திருநாமம் எமது நண்பரும், இன்றைக்கு இருபது வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளிக்க முயன்ற புண்யாத்மாக்களில் ஓர் பிரமுகருமான காலம் சென்ற சி.ஸுப்ரஹ்மண்ய பாரதியின் ஞாபகம் இம்மாஸிகையைப் படிக்கும் அனைவர் மனதிலும் என்றும் அழியாமல் பசுமையாக இருந்து வரவேண்டுமென்றேயாகும்.

            -பாலபாரதி  1924  அக்டோபர்- நவம்பர்

 

 

இப்படி அருமை நண்பரின் நினைவைப் போற்றும் விதமாகத் தனது பத்திரிகைக்கு பெயர் வைத்த செய்தியை பால பாரதியின் முதல் தலையங்கம் தெரிவிக்கிறது.

 

 

50) இதே குமரி மலர் இதழில் க்ஷத்திரிய தர்மம்  என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

 

க்ஷத்திரிய தர்மம்

சி.சுப்பிரமணிய பாரதி  (1910)

 

நீண்ட கட்டுரையில் அரவிந்தரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது வருமாறு:-

“அரவிந்தர் முதலிய ரிஷிகள் நம்போலியர்க்குத் தெரியாத எதிர்காலச் செய்திகள் பலவற்றை அதி சுலபமாகத் தெரிந்து சொல்கிறார்கள்.

அவர்களுக்குப் புலப்படும் செய்திகளில் “பாரத நாட்டில் இனி அடுத்து நடைபெறப் போகும் தர்மம் க்ஷத்திரிய தர்மம்” என்ற செய்தியொன்றாகும்.

 

அரவிந்தர் மீது பாரதியார் எத்தகைய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை இந்த வரிகள் புலப்படுத்துகின்றன.

 

51) அடுத்து இவ்வுலக இன்பங்கள் என்ற பாரதியாரின் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின்  பிற்பகுதி கிடைக்கவில்லை என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வுலக இன்பங்கள்

சி.சுப்பிரமணிய பாரதி (1910)

 

 கட்டுரையின் முதல் ஐந்து பாராக்கள் காணக் கிடைக்கின்றன. முதல் மூன்று பாராக்களைப் பார்ப்போம்:-

    “நமது தேசத்தில் இப்போது சில நூற்றாண்டுகளாகத் துறவைப் பற்றிய பேச்சு அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டது.

     கண்டவனெல்லாம் ஞானம் பேசுகிறான்.

     ஒன்றரைக் காசின் பொருட்டாக உடலையும், ஆவியையும், தர்மத்தையும் விலைப்படுத்தக் கூசாத மனிதர்கள் கூட “எல்லாம் மாயை, இவ்வுலகமே பொய், க்ஷணத்தில் அழிவது இவ்வாழ்க்கை” என்று கிளிப் பிள்ளைகள் போலத் தமக்குத் தெரியாத விஷயத்தை எளிதாகச் சொல்லி விடுகின்றனர்.”

                              -‘கர்மயோகி’ புதுச்சேரி

                          புத்தகம் 1, இலக்கம் 2

                          1910, பிப்ரவரி, பக்கம் 58

இன்னும் சில கட்டுரைகளை அடுத்துக் காண்போம்

 

                           -தொடரும்

Leave a comment

Leave a comment