
Written by London swaminathan
Date: 1 May 2017
Time uploaded in London: -7-00 am
Post No. 3868
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
வள்ளுவன் தொடாத, பாடாத விஷயமே இல்லை. அவன் பாடிய குறள்களுக்கு பழங்காலத்தில் அறிஞர்கள் எழுதிய உரைகளைப் படித்தால்தான் நமக்கே அதன் ஆழமும் அகலமும் தெரியும்.
வள்ளுவன் குறளுக்கு பத்துப் பேர் உரை எழுதினாலும் அத்தனையும் நமக்குக் கிடைக்கவில்லை;
வள்ளுவன் தரும் சங்கீதச் செய்திகள்:–
1.ராகமும் பாடலும் ஒன்றோடொன்று பொருந்த வேண்டும் (குறள் 573)
2.குழலும் யாழும் இனிமையான கருவிகள் (குறள் 66)
இதில் ஏன் புல்லாங்குழலை முதலில் சொன்னார் என்றால் முதலில் குழல் வாசித்தபின்னர், அதை யாழிலே வாசிப்பது மரபு.
எடுத்துக்காட்டு:–
குழல்வழி நின்றது யாழே (சிலப்பதிகாரம்)
3.ஒரு குறளில் தோல் வாத்தியங்கள் பற்றிச் சொல்கிறார்:
அறைபறை அன்னர் கயவர் (குறள் 1076)
அறைபறை கண்ணார் (குறள் 1180)
ஏதேனும் செய்தியை அறிவிக்க இப்படி பறையைக் கொட்டி அறிவிப்பர். இவ்வாறு அறைந்து வெளியிடுவதால் அதை அறைபறை என்பர்.
இறந்தபோது கொட்டும் சாப் பறையையும் ஒரு குறளில் குறிப்பிடுவார் (1115)
இவ்வளவு இடங்களில், அவர் குழல், யாழ், பறை (புல்லாங்குழல், வீணை, மிருதங்கம்) பற்றிச் சொல்லுவதால் அவருக்கு ராகம் தாளம் எல்லாம் அத்துபடி என்பது விளங்கும்.

ராகமும் கீர்த்தனையும்
பண் என்னாம் பாடற் கியைபின்றேல் கண் என்னாம்ப்
கண்னோட்டம் இல்லாத கண்– (குறள் 573)
பொருள்:-
பாட்டுக்குப் பொருத்தமான ராகம் இல்லாவிடில் பயன் உண்டோ?
அருட் பார்வை இல்லாத கண் இருந்து என்ன பயன்?
இதில் பண் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்திய காலத்தில் இதன் பொருள் என்ன என்று பரிமேல் அழகர் உரை செப்பும்:
பண்களாவன- பாலை யாழ் முதலிய 103.
பாடல் தொழில்களாவன — யாழின் கண் வார்தல் முதலிய எட்டும்,
(வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், எள்ளல், பட்டடை. இவற்றை இசைக் கரணம் என்பர்
“எட்டு வகையின் இசைக்கரணத்து சில- 7-15
xxxx

பண்ணல் முதலிய எட்டும்,
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்பன; இவற்றைக் குறிக்கோள் என்பர் (சிலப்.7-5/7)
xxx
மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்துமிவை கிரியைகள் எனப்படும்.
எட்டில் முதலில் உள்ள ஐந்தாகக் காணப்படுகின்றன (சிலப் 3-26 உரை)
xxxx
பெரு வண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத் தாறுமாம்.
அதாவது பெரு வண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் என்ற மூன்றும் முறையே 6, 21, 49-ஆய் வரும் என்று சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறும்.
இவை எல்லாம் இன்றுள்ள சங்கீத மேதைகளுக்குக் கூட புரியுமா என்பது சந்தேகமே. ஆயினும் இசைத் தமி ழில் இவ்வளவு நுட்பமான சொற்கள் இருப்பதே அக்காலத்தில் சங்கீதத்துறை எந்த அளவுக்கு விரிந்து கிடந்தது — கடல் போலப் பரந்து கிடந்தது– என்பதை நமக்குப் புரியவைக்கும்.

உதவிய நூல்:-
திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு (பதிப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன்)
வாழ்க வள்ளுவன்; வளர்க தமிழ் இசை!!