மொட்டைச் சுவர், கட்டைச் சுவர், தட்டைச் சுவர், குட்டைச் சுவர் – (Post No.4051)

Written by London Swaminathan
Date: 4 July 2017
Time uploaded in London- 21-41
Post No. 4051

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹா வைத்யநாதய்யர் வாழ்க்கைச் சரிதத்தில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்.

 

“ஒரு வருஷம் ஐப்பசி மாதத்தில் வழக்கம் போல துலா ஸ்நானத்திற்காக சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் இருந்து மாயூரம் சென்று கட்டளை மடத்தில் இருந்து வந்தார். மஹா வைத்ய நாதய்யர் மற்றும் பல வித்துவான்கள் வந்திருந்தனர்.

 

மாயூரத்தில் அக்காலத்தில் கோயிற் பாடகரான ஒரு முதிய அந்தணர் இருந்தார். அவர் யாருடன் பேசினாலும் “அபயாம்பிகா கடாட்சம் உங்களுக்குக் உண்டாகட்டும்” என்பார். இதனால் அவர் பெயரே அபயாம்பிகா கடாக்ஷம் என்றாகிவிட்டது (அபயாம்பிகை என்பது மாயூரம் அம்மனின் பெயர்)

அவர் அடிக்கடி மடத்துக்கு வந்து போவார். சுப்பிரமணிய தேசிகர், அவருக்கு வருஷத்துக்கு முக்கால் பணம் சன்மானம் கொடுப்பார். அப்படி செய்யும்போதெல்லாம் மஹா வைத்திய நாதய்யருக்கு மட்டும் பத்து இருபது என்று சன்மானம் கொடுக்கிறீர்களே. நான் மட்டும் தாழ்ந்தவனா? அந்தப் பையன் வரும்போது அவனை என்னுடன் பாடச் சொன்னால் என் யோக்யதை உங்களுக்குத் தெரியவரும்” என்று சொல்வார். சுப்பிரமணிய தேசிகரும் நகைத்துக் கொண்டே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அனுப்புவார்.

 

மாயூரத்தில் எல்லோரும் கூடியிருந்த சமயத்தில் அபயாம்பிகா கடக்ஷமும் வந்து சேர்ந்தார். வழக்கம்போல ஸன்மானம் பெற்றுக்கொண்டர்.; பிறகு மஹா வைத்யநாதய்யருடன் சேர்ந்து பாடச் செய்தால் தம்முடைய மதிப்பு விளங்கும் என்றார். அங்கு அய்யர் இருந்தது அவருக்குத் தெரியாது. சுப்பிரமணிய தேசிகரும் புன்சிரிப்போடு இவர்களே மஹா வைத்யநதையர் அவர்கள் என்றார்.

 

அந்தப் பிராமணர் உடனே திடுக்கிட்டு எழுந்து போய்விடுவார்  என்று

நாங்கள் யாவரும் எண்ணினோம். ஆனால் அவரோ எழுந்து போகாமல், சிறிதும் அஞ்சாமல் “அப்படியா? நல்ல வேளை! இப்பொழுது அகப்பட்டுக் கொண்டாயா? பாடு பார்க்கலாம் என்றார். நானும் பாடுகிறேன். நான் பாடிக்காட்டும்படி பாடுவாயா என்று கேட்டுவிட்டு,

“மொட்டைச் சுவர், கட்டைச் சுவர்,  தட்டைச் சுவர், குட்டைச் சுவர்”  என்று தாம் வாய்க்கு வந்தவற்றைப் பல்லவியாக எடுத்துப் பாட ஆரம்பித்தார்

 

மஹா வைத்யநாதையர் சிரித்தார். உடனே அந்த முதியவர் என்ன சிரிக்கிறாய்? சிரித்துவிட்டால் ஏமாந்து போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? பாடு பார்க்கலாம். பேசாமல் ரூபாயை வாங்கி முடித்துக்கொண்டு போக மாத்திரம் தெரியுமா? நான் இல்லாத காலத்தில் வந்து பண்டார சந்நிதியை ஏமாற்றிப் பணம் வாங்குகிறாயா? எங்கே, இதைப் பல்லவியாக வைத்துப் பாடு பார்க்கலாம் என்றார். இவ்வாறு உத்ஸாகத்தோடு சொல்லிவிட்டு எல்லோர் முகத்தையும் பார்த்தார். உடன் இருந்த யாவரும் சிரித்தனர்.

உடனே அங்கிருந்த தியாகராஜ சாஸ்திரிகள், அந்தப் பிராமணரைப் பார்த்து ” ஓய், இங்கே வாரும். ஏன் அவரிடம் சென்று குழறுகிறீர்?  நீர் இங்கே வந்து பாடும்; நான் பாடிக் காட்டுகிறேன் என்று சொன்னார். அந்த முதியவரும் அப்படியே வந்து அசராமல் பாடினார். தியாகராஜ சாஸ்திரிகளும், அவர் பாடிய படியெல்லாம் பாடிக்காட்டினார். அவர் அபஸ்வரமாகப் பாடும்போதெல்லாம் சாஸ்திரிகளும் அபஸ்வரமாகப் பாடினார். இந்த விநோத நிகழ்ச்சியால் சபையில் இருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். ஒன்றும் தெரியாத ஸாதுவாகிய அபயாம்பிகா கடாக்ஷம், தமது  பாடல் இங்கே எடுபடாது என்று எண்ணி பேசாமல் எழுந்து போய்விட்டார்.

 

–சுபம்—

 

Leave a comment

Leave a comment