Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
Image of Varuna (sea)
வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.
மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.
சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.
அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.
ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.
என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.
Image of Mitra (sun)
பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-
அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;
உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று
நாமம்/பெயர்– சிவன், நாராயணன்
வாகனம் – ரிஷபம், கருடன்
நூல்கள் – ஆகமம், வேதம்
வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)
தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்
ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்
உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு
ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)
இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.
இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.
விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.
ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.
—சுபம்–