
Date: 9 JANUARY 2018
Time uploaded in London- 6-39 am
Written by S NAGARAJAN
Post No. 4596
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 24
பாடல்கள் 142 முதல் 146
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதிதாசன் பாடல்கள்
பாரதியார் நாமம் வாழ்க (தொடர்ச்சி)
நிதி பெருக்கும் மனிதர்களும், நெடுந்தேச
பக்தர்களும், தலைவர் தாமும்
கதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்
என்பவரும் கவிதை யென்றால்
மிதி என்பார்! தமிழ்க் கவியைப் புதுவகையில்
மேலெழுப்பிக் கவிகள் நம்மைத்
துதி புரியும் வகை தந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
பேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை
தரவறியாப் பெரியோ ரெல்லாம்
பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்
வேண்டுவன பெறுதல் கண்டும்
ஏசிநின்றார், அவர் நாணத் தமிழ்க் கவிதை
உலகினிலே எசமான் ஆன
தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்
ஐரிஷ் மொழி வளரச் செய்தான்!
அயர்லாந்தில் அதன் பிறகே உணர்வுபெற
லாயிற்றென்றறிஞர் சொல்வார்!
பெயர்பெற்ற கவிதைகளின் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்
இசைந்திருந்த ஷேக்ஸ்பியரும்,
சொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்
நவீ ந்திரனும் சொந்த நாட்டில்
நல்லசெயல் செய்தார்கள்! நடைப் பிணங்கள்
மத்தியிலே வறுமை என்னும்
தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
வாழ்க எழிற் பாரதியார் திருநாமம்
வையமிசை எந்த நாளும்
வாழ்க தமிழ்! தமிழ்க் கவிதை!
தமிழ் நாட்டார் மகாவீ ரராக எங்கும்
வாழ்க அவர் வகுத்த நெறி வருங் கவிதா
மண்டலமும் கவிஞர் தாமும்!
வாழ்க நனி சமத்துவ நல் லிதயமதி வாய்ந்த
புகழ் நிலவு நன்றே.
(முற்றும்)
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***