
Date: 17 JANUARY 2018
Time uploaded in London- 6-17 am
Compiled by S NAGARAJAN
Post No. 4625
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 160 முதல் 164
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கண்ணதாசன் பாடல்கள்
பாரதியைக் கண்டேன்
வானவெளி வீதியிலே
பாரதியைக் கண்டேன்
வைத்தவிழி வாங்காமல்
வார்த்தபடி நின்றேன்
மோனவெளி வீதியிலே
மூச்சடங்கி நின்றான்,
மூன்றுதமிழ் ஆய்ந்தகவி!
முன்நடந்து சென்றேன்
கூனலிளம் வெண்ணிலவின்
குளிர்முகத்து நடுவே
குத்துகிற மீசையையும்
கூர்விழியும் கண்டேன்,
தேனமுதப் பாவலனின்
சிந்தையிடை ஏதோ
தீராத துன்பநிலை
சிந்துவதைக் கண்டேன்
(வேறு)
நான்:-
ஏடா பாரதி! என்னடா சுகமா?
என்ன சிந்தனை? எதிலே நாட்டம்?
பாரதி:-
வாடா தம்பி! வாழ்க நீ பாண்டியா!
வாட்ட முகத்தின் நாட்டம் கேட்டியோ?
பாடா இயற்கை பாடுதல் கேட்டுப்
பாடிப் பாடிநான் படைத்தவை பற்பல!
வாடா மலர்களை வழங்கினேன்; எனினும்
வாடி வாடிநான் மறைந்ததை அறிவாய்!
இன்று மண்டபம் எழிலுறக் கட்டுவர்
இருபதாயிரம் பேர்கள் திரட்டுவர்
கொன்று போட்டுஎன் பிணத்தினி லேறுவர்
கொட்டு முரசெனப் பாடல்கள் பாடுவர்
அன்று சோற்றுக் காதார வானவர்
ஆரு மில்லை! அடாஇவர் உன்னையும்
தின்று தீர்த்தபின், தேமது ரத்தமிழ்
செய்த வன்எனத் திருவிழாக் கூட்டுவார்!
இந்த மூடரின் ஏற்ற முரைத்தயான்
ஏர்பி டித்தொரு நிலத்தை உழுதனோ?
மந்த புத்தியில் மன்னவர் நந்தமிழ்
மாந்தர்! தம்பி! நீ இவர்களை நம்பியே
சொந்த வாழ்வினைத் துறந்தொரு காரியம்
துளியும் செய்ய வேண்டுவ தில்லைகாண்!
எந்த நாளிலும் தமிழன் என்பவன்
இளித்த வாயனாய் இருப்பதே புண்ணியம்!
(நீண்ட கவிதை தொடரும்)
கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***