
Date: 18 JANUARY 2018
Time uploaded in London- 5-41 am
Written by S NAGARAJAN
Post No. 4630
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 9
முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17
இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17
மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17
நான்காம் கட்டுரை எண் 4472 – வெளியான தேதி : 9-12-17
ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17
ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017
ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018
எட்டாம் கட்டுரை எண் 4597 – வெளியான தேதி : 9-1-2018
பரிச்சேதம், வஸ்துக்கள், சத்துக்கு ஆனந்தத்துவம் ஆகியவற்றின் விளக்கம்!
ச.நாகராஜன்
இனி பரிச்சேதம், வஸ்துக்கள், சத்துக்கு ஆனந்தத்துவம் பற்றித் தெரிந்து கொள்வோம்
*
ஐயா, பரிச்சேதம் என்றால் என்ன?
வரம்பு அல்லது பிரிவு அல்லது பாகம் எனலாம்.
தேச, கால, வஸ்து பரிச்சேதம் மூன்றும் இயற்கையில் தேகத்திற்கே தவிர பரிபூரனணாகிய பிரதியேகாத்மாவுக்கு பரிச்சேத திரயம் (திரயம் என்றால் மூன்று என்று பொருள்) இல்லை.
ஆகவே, தேசத்தினாலாவது,
காலத்தினாலாவது,
வஸ்துவினாலாவது
பிரிக்க அல்லது பாதிக்கப்படாதது எதுவோ அதுவே பிரம்மம்.
ஆத்மா சர்வ வஸ்துக்களுக்கும் ஆத்மாவாக இருக்கின்றபடியால் பரிச்சேதம் இல்லை.
வஸ்துக்கள் என்றீர்களே, அவைகள் எவை?
ஸஜாதீய பேதம்,
விஜாதீய பேதம்,
சுவகத பேதம் என்று இப்படி மூன்று வகை வஸ்துக்கள் உண்டு.
அவைகளின் விவரம் என்ன?
ஒரு மரத்திற்கு மற்றொரு மரம் ஸஜாதீய பேதம் ஆகும்.
மரத்திற்கு கல் என்பது விஜாதீய பேதம் ஆகும்.
ஒரு மரத்திற்கு அதன் இலை, பூ, காய், கனி முதலியன சுவகத பேதம் ஆகும்.
இந்த மூன்று வித பேதங்களும் ஆத்மாவுக்கு இல்லை.
ஆகவே ஆத்மாவுக்கு வஸ்து பரிச்சேதம் இல்லை.
அது எப்படி? ஒரே சைதன்னியமானது பிரம்ம சைதன்னியமாயும், ஈஸ்வர சைதன்னியமாயும், ஜீவ சைதன்னியமாயும் இருக்கும் போது ஸஜாதீய பேதம் இருக்கிறதல்லவா?
மேலும் ஆத்ம ஸ்வரூபம் பிரம்மம் என்றும், அநாத்ம ஸ்வரூபம் பிரபஞ்சம் என்றும் இரண்டு விதமாக இருக்கும் போது விஜாதீய பேதம் இருக்கிறதல்லவா?
அன்றியும், பிரம்மத்திற்கு சத், சித், ஆனந்தம் என்று மூன்று இருக்கின்றபடியால் சுவகத பேதமும் இருக்கிறதல்லவா?
இப்படி மூன்று வித பேதங்களும் இருக்கும் போது, பேதங்களே இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ஆகாயம் ஒன்றானாலும், உபாதி பேதத்தினால், மேக ஆகாயம் (மேகாசம்), மட ஆகாயம் (மடாகாசம்), கட ஆகாயம் (கடாகாசம்) என்ற பேதங்களைக் காண்பதைப் போல, சைதன்னியம் ஒன்றானாலும் மாயோபாதியினால் பிரம்மம் என்றும், ஈஸ்வரன் என்றும், அவித்தியோபாதியினால் கூடஸ்தன் என்றும் ஜீவன் என்றும் சொல்கிறோம்.
ஸஜாதீய பேதம் தோற்றமே தான்.
மேலும் கயிறன்றி அதில் பாம்பு என்கின்ற தோற்றம் எப்படி இல்லையோ அப்படி ஆத்மாவன்றி அநாத்மா இல்லை. ஆகவே விஜாதீய பேதம் இல்லை.
அதிஷ்டானத்தைத் தவிர ஆரோபிதம் என்பதெல்லாம் மித்தையே.
அதாவது பொய்யே. (மித்தை என்றால் பொய்)
ஆத்மா சாக்ஷி கூடஸ்தன்.
பாரமார்த்திகன்.
பிராக்ஞன்.
பிரம்மம்.
சச்சிதானந்த நித்தியன்.
ஏகன்.
பூரணன்.
ஆகவே சுவசுத பேதமில்லை.

அப்படியானால் ஆத்மா சத் ரூபன், சித் ரூபன், ஆனந்த ரூபன் என்று ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? ஒரே உபதேசம் போதாதா?
ஆத்ம ஸ்வரூபமான சத்துவத்தை ஜகத்திலும்,
சித்துவத்தை ஜடங்களாகிய புத்தி ஆதிகளிலும்
ஆனந்தத்துவத்தை புத்திர, பாரி (மனைவி) ஆதிகளிலும்
அப்படியே, ஜகத் ஸ்வபாவமாயுள்ள அசத்துவத்தையும், புத்தி ஆதிகளிலுள்ள ஜடத்துவத்தையும், புத்திரபாரியாதிகளிலுள்ள துக்கத்துவத்தையும்,
சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மாவினிடத்திலும் பரஸ்பரம் விபரீதமாக ஆரோபிக்கிறபடியால் இந்த பிராந்தி நிவர்த்தியின் பொருட்டு சொல்லப்பட்டது.
நல்லது, சத் தானாகவே விளங்குகிறதா? அல்லது மற்றொன்றினால் விளங்குகிறதா?
சத்தே சித்தாகும்.
சத்தே சித்து. சித்தே சத்து.
அது தானாகவே விளங்குகிறது.
தானாக விளங்குகின்ற சத்துக்கு ஆனந்தத்துவம் எப்படி ஐயா?
சத்துக்கு இரண்டாவது வஸ்து இல்லை.
ஆகவே ஆனந்தத்துவம் பூரணமாக இருக்கிறது.
ஆகவே ஒன்றான சத்துக்கு இரண்டாவது இல்லாததினால் அத்வைதத்துவமும் உண்டாம்.
அதனால் பூரணத்துவமும் சித்தம்.
இப்படிப்பட்ட பரிபூரணானந்த ஆத்மாவுக்கு துக்கம் ஆகந்துகம்.
அந்த துக்கம் சரீரத்தினாலும்,
சரீரம் கருமத்தினாலும்,
கருமம் இராக, துவேஷாதிகளினாலும்,
ராகாதிகள் அபிமானத்தினாலும் வந்தது என்று அறிக!
அப்படி அறிந்து அந்த அஞ்ஞானத்தை ஞானத்தினால் நிவர்த்தியாக்க வேண்டும்.
அந்த ஞானமே விசாரத்தினால் உண்டாகிறதென்றும்,
ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபம் என்றும்,
தேகாதி பிரபஞ்சம் அந்த ஜட துக்க ரூபமானதென்றும்,
இந்த பிரபஞ்சமானது அத்தியாரோப்பியமென்றும்
விசாரித்து, தத்துவம் பத வாக்கியார்த்தத்தினால் உண்டாகும் ஞானத்தினால்,
“நானே பிரம்மம்” என்னும் தன்னுடைய பரோக்ஷ ஞானானுபவத்தினால்
சாக்ஷாத்காரமாகிய அபரோக்ஷ ஞானம் எதுவோ அதை அடைகின்றவனே
பரம குரு எனவும் பரமஹம்ஸர் என்றும் சொல்லப்படுகிறான்.
ஆகவே அனைவரும் ஆத்ம தத்துவத்தைக் கேட்டு, மனனம் செய்து,
தியானித்து, சாக்ஷாத்காரம் செய்து கொண்டு,
நித்திய சுத்த புத்த முக்த சத்திய பரமானந்த அத்துவய பிரம்மஸ்வரூபமாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஐயா! நன்றி. நன்றி. நன்றி. அருமையான அத்வைத சாரத்தை இவ்வளவு நல்ல முறையில் விளக்கியதற்கு மீண்டும் நன்றி.
நன்றி.
***
அத்வைத சார விளக்கம் முற்றிற்று.
***
அன்பர்கள் நிதானமாக, ஒவ்வொரு விஷயமாகப் படித்து, அதை ஆழ்ந்து சிந்தித்து, பல துணை நூல்களையும் படித்து அத்வைத ஆனந்தம் சித்திக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
***
முடிவுரை:
ஒரு சுவாரசியமான புத்தகம்.
சுமார் நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1898ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகம்.
கோயமுத்தூரைச் சேர்ந்த திரு எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவர்கள் எழுதிய ‘ஹிந்து பைபில்’ என்ற புத்தகம் எனக்குக் கிடைத்தது.
அதில் உபநிடதக் கருத்துக்கள், அத்வைத, த்வைத சார விளக்கம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.
அதில் இருந்த அத்வைத சார சங்க்ரஹ விளக்கத்தையே சற்று தமிழ் நடையை எளிதாக்கி, சில பிழைகளைத் திருத்தி, இறைவன் அருளால் ஒரு தொடராக அளிக்க முடிந்தது.
இந்தப் புத்தகத்தை வரவேற்று அந்தக் கால பத்திரிகைகள் – சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகள் – நல்ல மதிப்புரையைத் தந்துள்ளன.
நமது நன்றியை திரு எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்.
புத்தகம் மக்கி மறைந்து போகும் நிலையில் அதன் ஒரு சிறு பகுதியை அளிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்தத் தொடரை படித்த அன்பர்களுக்கு எனது நன்றி.
அன்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம்.
அன்பன் ச.நாகராஜன்
***