
Picture: Students celebrate Forest Day
Date: 24 JANUARY 2018
Time uploaded in London- 5-54 am
Written by S NAGARAJAN
Post No. 4655
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் முதலாவது உரை
- இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்
ச.நாகராஜன்
இயற்கை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வல்லமை படைத்தது. மனிதன் அதன் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருந்தாலே போதும். அது வளமான பூமியை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அளிக்கும்.
அமெரிக்க விஞ்ஞானக் கழகத் தலைவரான க்ரெசி மாரிசன் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று ஆராயப் புகுந்தார். தனது ஆய்வின் முடிவில் இறைவன் இருக்கிறான் என்பதற்கு அவர் ஏழு காரணங்களை உலகினர் முன் வைத்தார். அதில் ஒன்று இயற்கையின் ஒப்பற்ற சமன்பாட்டுத் தத்துவம்.
இயற்கையில் காணும் ஒப்பற்ற சிக்கன அமைப்பைச் சற்று உற்றுக் கவனித்தபோது அது எல்லயற்ற, பரந்த ஒரு பேரறிவினால் இயக்கப்படுவதையும் அதில் முன்யோசனையும் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் இருப்பதையும் அவர் கண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில் சப்பாத்திக் கள்ளி வெகு விரைவில் பரவி பயிர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் தந்தது. விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் தேடி சப்பாத்திக் கள்ளியை மட்டும் தின்று வாழும் ஒரு வகைப் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்து வந்து ஆஸ்திரேலியாவில் விட்டார்கள். அவை அந்த விரும்பத்தகாத செடியை அழித்தன. சிக்கலும் தீர்ந்தது.

Forest on fire in California, USA
இது போன்று தாவரம் மற்றும் விலங்குக் கூட்டங்களிடையே இயற்கைக் கட்டுப்பாடுகளும் தடைகளும் தானே அமைந்துள்ளன. வேகமாகப் பெருக்கமடையும் பூச்சிகள், பிராணிகள் இவற்றின் உடலிலேயே அவற்றின் உருவையோ அல்லது வலிமையையோ கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதால் தான் மனிதன் இன்றும் வாழ முடிகிறது.
ஆக இந்த இயற்கை விதியை மனதிலே பதித்துக் கொள்ளாமல் பல்வேறு காரணங்களுக்காக இயற்கை அன்னை பாதுகாத்து வரும் யானை, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதும், அரிய பறவை இனங்களை உணவுக்காகவும் இதர காரணங்களுக்காகவும் வேட்டையாடு சுற்றுப்புறச் சூழ்நிலையை அழித்து விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.
இதை மனதில் கொண்டு வாழ்வோமாக!
***