பாரதி போற்றி ஆயிரம் – 46 (Post No.4710)

DATE – 7 FEBRUARY 2018
Time uploaded in London- 7-31 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4710

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 285 முதல் 290

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

மும்மூர்த்திகள் மற்றும் பாரதிதாசன் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்

 

மும்மூர்த்திகள்

 

ஓங்குசீர் நண்பர் அரவிந்தர் – அவர்தம்

    உயர்ந்த தொண்டைப் போற்றிநல்ல

பாம்புடன் இணைத்து அரனார்க்கு – உற்ற

   பணியா பரணமாய்த் திகழ வைத்தார்!

பாங்குற சோலை நிழலாக – பாரதி

   பற்றிய துணைவரே அரவிந்தர்!

தீங்கிலா பாம்பு அரவிந்தர் – உறவைத்

   திருவுட னேற்றார் புதுவையிலே.

 

புதுவை வந்த மும்மணிகள் – அவர்களே

   பாரதி, வ.வே.சு. அரவிந்தர்!

குதுகல முடனே கடற்கரையில் – மூவரும்

   கூடிக் கருத்து பரிமாறி

சுதந்திரம் பற்றியும் கலந்துபேசி – நாட்டுத்

   தொண்டு புரிந்து வந்தனரே!

புதுவை நண்பராய் நெல்லையப்பர் – கிருட்டின

   மாச்சா ரியாரும் பழகினர்காண்!

 

பழகிய நண்பர் பலருடனும் – பாரதி

   பாரத சுதந்திரம் வேண்டிநின்றார்!

உழன்ற அரிஜன சீடனவன் – கனக்

   லிங்கம் களிப்புறப் பூணூலை

வழங்கி அவனுக் கணிவித்து – பாரதி

   பீடுறு புரட்சி செய்தார்காண்!

முழங்கி சுதந்திரம் வேண்டிநின்று – காளியைப்

   பணிந்து பாரதி பாடினார்காண்!

 

 

பாரதிதாசன்தொடர்பு

 

பாடிய பாரதி பாக்களிலே – “சுதந்திரப்

   பள்ளு தலைப்பு ஒன்றாகும்!

ஈடிலா திருமண நிகழ்ச்சியொன்றை – பாரதி

   உவந்து காணச் சென்றார்காண்!

நாடி வந்த ஓர்தாசன் – அவரே

   கனக சுப்புரத் தினமென்பார்!

பாடினார் பாரதி பாவொன்றை – அதனைப்

   பரிந்து கேட்டார் பாரதியார்!

 

பாரதி அந்தத் தாசனையே அங்கு

   பலர்முன் புகழ்ந்து போற்றினாரே!

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் – என்ற

   உணர்ச்சிப் பாடலை இசைத்தார்காண்!

தீரன் கனகசுப் புரத்தினமே – பாவேந்

   தரெனும் பாரதி தாசனாவார்!

ஆரமு துபாக்கள் தந்தவரம் – பாரதி

   தாசன் இனிய நண்பரானார்.

 

நண்பர் பாரதி தாசனுமே – அவரொடு

   நெருங்கிப் பழகி வாழ்ந்தாரே!

கண்ணின் மணிபோல் பாரதியின் – குடும்பம்

   தன்னைக் காத்து வந்தாரே!

தொண்டர் பாரதி புகழ்பரப்பும் – தொண்டினைத்

   தொடர்ந்து செய்தார் தாசனுமே!

அண்டி வந்த வறுமையை – நீக்கும்

   ஆருயிர நண்பராய்த் திகழ்ந்தார்காண்

          

                   (மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

 

 

Leave a comment

Leave a comment