
Date: 22 FEBRUARY 2018
Time uploaded in London- 7-53 am
Written by S NAGARAJAN
Post No. 4773
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஒன்பதாவது உரை
- 9. உத்வேகமூட்டும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு ச.நாகராஜன்
2016ஆம் மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்த்துக்கல் நாடு ஒரு பெரிய சாதனையைச் செய்தது. மே மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி முடிய நாடு முழுவதும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியால் மட்டுமே இயங்கியது.
இதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து இப்படிப்பட்ட எரிசக்தியினால் ஒரு நாடு முற்றிலுமாக இயங்கமுடியும் என்பதையும் நிரூபித்தது.
சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் அல்லது எரிசக்தியையே புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி அல்லது ஆற்றல் என்று கூறுகிறோம்.
காற்றினாலும், சூரிய ஒளியாலும் ஹைட்ரோ – ஜெனரேடட் மின்சக்தியாலும் ஒரு நாடு திறம்பட இயங்க முடியும் என்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து சோலார் பவர் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜேம்ஸ் வாட்ஸன், “இப்போது மிகவும் அதிசயக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு எதிர்காலத்தில், மிகவும் சாதாரணமான அன்றாட நிகழ்வு ஆகி விடும்” என்கிறார்.

நமது நாட்டிலும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்களைச் செய்வதைப் பார்க்க முடிகிறது.
ஆனால் இந்த விஞ்ஞான முன்னேற்றத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் ஏராளமான சூரிய ஒளியை, நாடு முழுவதும் வருடத்தில் நீண்ட நாட்கள் கொண்டிருக்கும் இந்தியா, மிகச் சிறந்த புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தும் வல்லரசாக, உயரும்.
புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலால் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்கள் ஏராளம் உள்ளன.
- பூமியை வெப்பமயமாக்கும் நச்சுப் புகை வெளியேற்றம் முற்றிலுமாகக் குறையும் அல்லது பெரிய அளவில் குறைந்து விடும்.
- உலக மக்களின் ஆரோக்கியம் மிகப் பெரிய அளவில் மேம்படும். நிலக்கரி மற்றும் இயற்கை வாயு தொழிலகங்களினால் காற்றிலும் நீரிலும் ஏற்படும் மாசின் அளவு குறையும். சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசினால் சுவாசக் கோளாறுகளும், மூளை சம்பந்தமான வியாதிகளும், மாரடைப்பும், கான்ஸரும் ஏற்படுகின்றன. இப்படி புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலின் பயன்பாடு இளவயதில் இறப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும். தொழிலகங்களில் மிக அரிதான வேலை மணி நேர இழப்பையும் தவிர்க்கும்.
இவற்றை உணர்ந்து புதுப்பிக்கப்படக் கூடிய
ஆற்றலைப் பெரிதளவு பயன்படுத்துவோம்; பூமியை வெப்பமயமாக்கும் அபாயத்திலிருந்து காப்போம்!
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 22, 2018புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியில் தலையாயது சூரிய சக்திதான். சூரிய ஒளி மிக்க இந்தியா இதில் முதன்மையான இடத்தைப் பெற முடியும்.
இதை 1957லேயே நமக்குச் சொன்னவர் Richard B.Gregg என்ற அமெரிக்கர். காந்தீய பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்த காந்தீய வாதியாகி இவர் நேரு வகுத்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை விமர்சித்து அதற்கு எதிராக A Philosophy of Indian Economic Development என்ற நூலை எழுதினார். இதில் நாம் இப்போதும் சூரிய சக்தியைத்தான் பயன்படுத்துகிறோம்- ஆனால் அதன் மகிமையை அறியவில்லை, அதனால் சரியானபடியும், தகுந்த அளவிலும் பயன்படுத்தவில்லை என்று விளக்கினார். வெப்ப நாடான இந்தியாவில் விழும் சூரிய ஒளியின் அளவையும் ஒருவாறு கணித்தார். இதை மேலும் எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும் விளக்கினார். நேரு காட்டிய பாதையில் பல்வேறு கஷ்டங்கள்தான் விளையும் என்று எடுத்துக்காட்டினார்.
இவர் சொன்னது 100% உண்மையாயிற்று.ஆனால் கனரகத் தொழில் மோகமும், அரசுத்துறையின்மீதான அதீதப் பற்றும், ஐந்தாண்டுத்திட்டத்தை விட்டால் வேறு வழியில்லை என்று கருதிய மனப்போக்கும் நேருவை ஆட்கொண்டிருந்த அந்தக் காலத்தில் மாற்றுக் கருத்துக்களைச் சீண்டுவாரில்லை. நேரு போல் காந்தீயப் பொருளாதாரக் கருத்துக்களை உதாசீனம் செய்த தலைவர் வேறு யாரும் இல்லை! அவருக்குப் பின் வந்த எந்தத் தலைவரும் இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் திறன் கூட இல்லாதவர்கள்.
நமது இன்றைய தலைவர்களுக்கும் சொந்தமாக எதுவும் தோன்றாது. மேலை நாடுகள் ஏதாவது செய்தால் அதையே பின்பற்றுவார்கள்.
ரிச்சர்ட் க்ரெக் எழுதியவை இன்றக்கும் பொருந்தும்! ஆனால் யார் படிப்பார்கள்-யார் கேட்பார்கள்?