
Date: MARCH 19, 2018
Time uploaded in London- 5-10 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4829
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
மஹாபாரத மர்மம்
சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 1
ச.நாகராஜன்
மஹாபாரத மர்மங்கள் ஏராளம். அதை முழுதுமாக அறிந்து கொள்ள ஒரு ஆயுள் போதாது.
அது விளக்கும் அற்புத இரகசியங்களும் ஏராளம். விண்டுரைக்கும் மர்மங்களும் ஏராளம்.
அதில் ஒன்று தான் சூரிய தேஜஸின் ரகசியம்.
சாந்தி பர்வத்தில் 371,372,373,374,375 ஆகிய அத்தியாயங்களில் இதை முழுதுமாகப் படிக்கலாம்.
அத்தியாயம் 371 – நாகன் பிராம்மணரைக் கண்டு பேசியது
அத்தியாயம் 372 – நாகன் சூரியனிடத்துள்ள அதிசயங்களை பிராம்மணருக்குச் சொல்லியது
அத்தியாயம் 373 – சூரியன் தன்னிடம் பிரவேசித்த தேஜஸின் வரலாற்றைச் சொல்லியது
அத்தியாயம் 374 – பிராம்மணர் நாகனிடம் விடைபெற்றுச் சென்றது
அத்தியாயம் 375 – பிராம்மணருக்கும் நாகனுக்கும் நடந்த சம்வாதமான கதை உலகில் வந்த முறை
இந்த அத்தியாயங்களில் உள்ள சுவாரசியமான விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு காணலாம்.

தர்மாரண்யன் என்ற பெயர் கொண்ட பிராம்மணன் நாகராஜனான பத்மநாபன் என்ற நாகனைப் பார்க்கச் சென்றான்.
அவனைச் சந்தித்த பத்மன், அந்த பத்மன் நானே என்கிறான்.
உடனே பிராம்மணன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று வந்துள்ளேன் என்று கூறி, “சூரியனிடம் நீ ஆச்சரியமான எதையாவது பார்த்திருந்தால் அதைச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான்.
உடனே பத்மன், “சூரிய பகவானானவர் அநேக ஆச்சரியங்களுக்கு இருப்பிடம். அவராலேயே மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பிராணிகளும் பிரவிருத்திக்கின்றன.
அவருடைய ஆயிரம் கிரணங்களிலும் நன்றாக சித்தி பெற்ற முனிவர்கள் தேவர்களுடன் கூட, கிளைகளில் பட்சிகள் போல ஆஸ்ரயித்துக் கொண்டு வசிக்கின்றனர்.
அவரிடமிருந்து பெரிய வாயுவானது கிளம்பி அவரது கிரணங்களை ஆஸ்ரயித்துக் கொண்டு ஆகாயத்தில் விருத்தி அடைகின்றது.
அவரிடம் இதை விட மேலான ஆச்சரியம் என்ன இருக்கிறது? அந்த வாயுவைப் பிரித்து வர்ஷா காலங்களில் ஜலத்தைப் பொழிகிறார்.
இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?
அவருடைய மண்டலத்தின் மத்தியில் இருந்து கொண்டு அந்தர்யாமியானவர் பரமமான காந்தியினால் ஜ்வலித்துக் கொண்டு உலகங்களைப் பார்க்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?
அவருடைய பாதம் போன்ற சுக்கிரன் ஆகாயத்தில் மேகமாகி வர்ஷா காலங்களில் ஜலத்தை விடுகிறது.
தான் விட்ட ஜலத்தை எட்டு மாதங்கள் இழுக்கிறார்.
இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?
அவருடைய விசேஷமான தேஜஸினால் ஆத்மா நிலைத்திருக்கிறது.
பூமி ஓஷதியைத் தாங்குகிறது.
அவரிடம் ஆதியந்தம் அற்ற தேவர் இருக்கிறார்.
இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?
முற்காலத்தில் சூரியனைப் போலப் பிரகாசிக்கின்ற இன்னொருவர் காணப்பட்டார்.
அவர் சூரியனுக்கு எதிரே வந்தார்.
அவரை நோக்கி சூரியன் தன் கைகளைக் கொடுத்தார்.
அவரோ தன் வலக் கையைக் கொடுத்தார்.
பிறகு அவர் சூரிய மண்டலத்தில் பிரவேசித்தார்.
க்ஷண காலத்தில் அவர் தேஜஸ் சூரியனோடு கலந்தது.
சூரியன் யார், வந்தவர் யார் என்று எங்களுக்குச் சந்தேகம் வர சூரியனிடமே வேறொரு சூரியன் போல வந்த அவர் யார் என்று கேட்டோம்.

சூரியன் பதில் சொல்லத் தொடங்கினார்.
– தொடரும்