
Written by London Swaminathan
Date: 24 MARCH 2018
Time uploaded in London – 7-15 am
Post No. 4846
Pictures shown here are taken by london swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

திருமுட்டம் என்றும், ஸ்ரீமுஷ்ணம் என்றும் அழைக்கப்படும் தலம் வைணவக் கோவிலும் சிவன் கோவிலும் இடம்பெற்ற தலம் ஆகும். இங்குள்ள வராஹ அவதாரக் கோலம் கொண்ட பூவராக- அம்புஜவல்லி தாயார் கோவில் மிகவும் பிரபமானது. இதே கோவிலில் குழந்தை அம்மன் சந்நிதி என்று ஒன்றும் இருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை ஆகும்.
மார்ச் மாத (2018) முதல் வாரத்தில் இக்கோவிலுக்குச் சென்றேன். சில முக்கிய விஷயங்களை மட்டும் காண்போம்:-
கண்டவர் வியக்கும் அற்புதமான அழகிகளின் சிலைகள் உடைய கோவில் இது. ஒரு பெண்ணின் ‘பின்னல்’ தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போலச் சிலை ஒன்றைக் கண்டதில்லை.
இன்னும் ஒரு புதுமை– அரச மரம், நித்ய புஷ்கரணி என்னும் குளம், பூவராஹ சுவாமி ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதாகும்.
வராஹ அவதாரம், விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்களில் ஒன்று. இங்கே இரண்டு கைகளையுமிடுப்பில் வைத்துக் காட்சி தருகிறார்.
திரு என்ற அடைமொழி இருந்தும் ஆழ்வார்களால் பாடப்பெறாத தலம் இது.

பெரிய சாது சந்யாசிகளுடன் தொடர்புடையது இத்தலம். காஞ்சி காமகோடி பீடத்தின் 25-ஆவது சங்கராசார்யார் இந்த ஊரில் அவதரித்தார்; அஹோபில மடத்தின் மூன்றாவது பட்டத்து அழகிய சிங்கர் இவ்வூரில் சமாதி அடைந்தார்
மத்வாசார்யார் தண்ட தீர்த்தத்தை இவ்வூரில் தோற்றுவித்தார். இங்கு நடக்கும் விழாவுக்கு கர்நாடகத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
திருமுட்டத்திலும் விருத்தாசலம் சிவன் கோவிலிலும் வாசல் அருகில் உள்ள சிறிய நாட்டிய சிலைகள் சிதம்பரம் 108 நடன கரணங்களை நினைவு படுத்துவதோடு இரண்டும் ஒரே சிற்பி கட்டியவை என்பதையும் காட்டி நிற்கிறது.
நாயக்கர், ஹோய்சாள (புலிகடிமால்) மன்னர்களின் பேராதரவு பெற்ற இக்கோயில் அவர்களுடைய கால கட்டிடக் கலையை காட்டுகின்றன.
எல்லா நாயக்கர் கோவில்களிலும் உள்ளதைப் போலவே ஆயிரம் கால் மண்டபம் 16 கால் மண்டபம் ஆகியனவும் உண்டு.

வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் சப்த மாதர் சந்நிதியும், அரச மரமும் குழந்தைப் பேறு இல்லாதோருக்கு வரமளிக்கும் இடமாகக் காட்சி தருகிறது.
வானளாவிய கோபுரத்தின் ஏழு நிலை மாடங்களும் ஒன்பது கலசங்களும் வண்ணச் சிலைகளும் வருவோரை ‘வா வா’ என்று அழைப்பது போல உள்ளது.
புருஷசூக்த மண்டபம் எனப்படும் 16 கால் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் யாளியும் மெருகூட்டுகின்றன.
இங்கு செல்லுவோர் ஆற அமர இருந்து சிலைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்க்க வேண்டும். வாசலில் சதுரம் சதுரமான கட்டங்களில் உள்ள நடன மாதர் கோலங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க வேண்டும்.
இங்குள்ள மூலவரின் சிறப்பு– அது சாளக்கிராமத்தினால் ஆன ஸ்வயம்பு என்பதாகும்
ஸ்வயம்பூ என்றால் – மனிதனால் செதுக்கப்படாத- ‘தான் தோன்றி’ என்று பொருள்.
சாளக்கிராமம் என்பது கடல் வாழ் உயிரினங்களின் வடிவம் பதிந்த கல் படிமங்கள் (fossils) ஆகும். இவை பல கோடி ஆண்டுகள் பழமை உடைத்து என்பதும் இதனால் பூமியின் வரலாறு துலங்கும் என்பதும் விஞ்ஞானம் படித்தோருக்கு விளங்கும்

கடல் வாழ் உயிரினங்களான சங்கு நத்தை முதலியவற்றின் சின்னங்களைத் திருமாலின் சங்கு சக்கரத்துடன் பக்தர்கள் ஒப்பிடுவர். இயற்கையிலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இறைமையைக் காண்பது இந்து மதத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற மஹத்தான தத்துவம்.
கோரைக் கிழங்கால் செய்யப்பட்ட லட்டு இந்தக் கோவிலின் சிறப்புப் பிரசாதம்- ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விநோதமான, சிறப்பான பிரசாதம்- இருப்பது இந்து மதக் கோவில்களின் சிறப்பு அம்சம்.
விருத்தாசலம் அருகில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் விழாக் காலத்தில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆண்டு தோறும் திருவிழாக் காலத்தில் சுவாமி எழுந்தருளி ஒரு மசூதியின் முன் நிற்கும்போது அவர்களும் மரியாதை செய்யும் சிறப்புடைத்து; இது ஆற்காட்டு நவாப் காலத்தில் துவங்கியது.
ஆண்டாள் சந்நிதி, உடையவர் சந்நிதி ஆகியன வைஷ்ணவர்கள் கொண்டாடும் சிறப்பு பெற்றவை.

இந்த ஊரில் ராமர், சிவன் கோவில்களும் உஅள.
திருமுட்டம் / ஸ்ரீமுஷ்ணம் என்றால் என்ன?
கேரளத்தில் ஒரு திருமுட்டம் கோவில் உளது; சபரிமலையில் திருமுட்டம் என்ற சொல் உளது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் முஷ்ணம் இல்லை; ஆகவே முற்றம்= முட்டம்= என்பதே முஷ்ணம் ஆயிற்றோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
சபரி மலையில் புனித முற்றம் (open, sacred court yard) உள்ள பகுதியை திரு முட்டம் என்பர்.
முற்றம்:– ஒரு கட்டிடம் அல்லது வீட்டுக்குள் இருக்கும் திறந்த வெளிப்பகுதி முற்றம் எனப்படும்.






–Subham–