
Written by S Nagarajan
Date: 18 August 2018
Time uploaded in London – 7-19 AM (British Summer Time)
Post No. 5333
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பழனியில் போகர் சமாதி
அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்!
ச.நாகராஜன்
ஆறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாக விளங்குவது பழனி.
திருப்புகழில் 95 பாடல்கள் பழனி மலையில் பாடப்பட்டுள்ளன.
இங்குள்ள எண்ணி மாளாத அதிசயங்களை எண்ணி வியந்து அருணகிரிநாதர் திருப்புகழில் ‘அதிசயம் அநேகமுற்ற பழனி மலை’ என்று பாடி பழனி மலையைச் சிறப்பிக்கிறார்.
பழனி மலைக்குள்ள ஒரு சிறப்புக்குரிய காரணம் இங்கு போகர் வசித்தார் என்பதாகும்.
கொங்குமண்டல சதகம் 36ஆம் பாடல் போகர் வசித்த புண்ணிய பூமி என்று பழனியைக் கூறிச் சிறப்பிக்கிறது.
பாடல் வருமாறு:-

யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக் கலையுந்
தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்
போக ருடன்புலிப் பாணி முதலிய புண்ணியரெலா
மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- யோகம் வைத்தியம், ரசவாதம், நீண்ட ஆயுளைப் பெற வைக்கும் காயகல்பம், அட்டமாசித்தி ஆகியவற்றைக் கூறிய போகநாதர், புலிப்பாணி ஆகிய புண்ணியர்கள் வசித்துள்ள வைகாவூர் (பழனி) கொங்கு மண்டலத்தில் உள்ளதே.
பழனி கொங்கு மண்டலத்தில் உள்ள சிறந்த ஊர். இங்கு திருமாளிகைத் தேவர், கருவூர்ச் சித்தர், புலிப்பாணி போன்ற
புண்ணியர்களை மாணாக்கர்களாகக் கொண்ட பெரும் சித்தர் போகர்.
திருமாளிகைத் தேவர் சரிதத்தால் சைவ சமயப் பற்றுள்ளவராகவும் கருவூர்த் தேவர் நோக்கும் போது வாமாசாரமுடையவராகவும் இவர் கருதப்படுகிறார். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் (பெரிய கோயில்) அட்டபந்தன காலத்தில் இவர் அங்கு எழுந்தருளியிருந்தார். இதை
கொங்கு மண்டல சதகம் 34ஆம் பாடல் கூறுகிறது.
போகர் சீன தேசத்தவர் என்று கூறப்படும் வரலாறும் கூட உண்டு.
சீன தேசத்தவர் என்றாலும் கூட அவர் தமிழகத்தில் வாழ்ந்து இங்கேயே சமாதியில் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது.
அவரது சமாதி பழனி முருகன் கோவிலில் உள்ளதை அனைவரும் அறிவர்.
பழனி ஆண்டவர் சந்நிதி முன்பு போகர் ஒடுக்க மடம் என்றும் மலையடிவாரத்தில் புலிப்பாணி மடம் என்றும் இருக்கின்றன.

புலிப்பாணி பல திரட்டில் கீழ்க்கண்ட பாடல் வருகிறது:
தானான சிவகிரியிற் தண்டாயுதபாணி தாதாவைப் பூசித்தோர்
பிரமனிந்திரன்
தேனான போகருட னிவர்கள்மூவர் தெளிவாக முன்யுகத்தில்
மூவரப்பா
கோனான கலியுக யிருநூற்றைந்தில் கொற்றவனே புலிப்பாணி
பூசித்தேன்பார்
மானான அட்டசித்தி கோடாசத்தி மைந்தனே சித்தரிட நடனந்தானே.
பழனி மலை அதிசயங்களுள் சித்தர் பலர் இங்கு வாழ்ந்தனர் என்பதும் இன்னும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் முக்கியமான அதிசயமாகும்.
***