
WRITTEN BY S NAGARAJAN
Date: 22 August 2018
Time uploaded in London – 6-57 AM (British Summer Time)
Post No. 5349
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஏழாவது உரை
மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும்
ச.நாகராஜன்
ஒவ்வொருவரும் தான் வாழும் பகுதியில் உள்ள சமுதாயத்திற்கு இணங்கவும், தங்களது பொருளாதார வருமானத்திற்கு ஏற்றபடியும் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுற்றுப்புறத்தில் இருக்கும் இயற்கை ஆதார வளங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சேதப்படுத்தாமல் வாழ வேண்டும் என்ற அக்கறை நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. வரவேற்கத்தக்க நல்ல ஒரு மாறுதல் இது.
நீடித்த வாழ்வைத் தமக்கும் தமது சந்ததியினருக்கும் வழங்கும் இந்த வாழ்க்கைமுறையில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்
மூன்று ஆர் கொள்கைகள் (3 R’s Principle – Reduce, Reuse, Recycle) எனப்படும் குறை, திருப்பிப் பயன்படுத்து, மறு சுழற்சி செய் என்ற மூன்று கொள்கைகள் பிரதானமானவை.
வாழ்கின்ற இடத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த மூன்று ஆர் கொள்கை முக்கியமானது.
இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் நமது தேவைகளை எவ்வளவு குறைந்த பட்ச தேவையோ அதற்குத் தக அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்வில் பல பொருள்கள், தயாரிப்புகள் திரும்பப் பயன்படுத்துவதற்கு உகந்தவை. மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடிபவை. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் மறுசுழற்சி செய்வதன் மூலமும் சுற்றுப்புறச் சூழல் மேம்படும்.

இன்னொரு அற்புதமான நடைமுறை நகரத்தில் பயிரிடுதல் (Urban Farming) என்பதாகும். மெட்ரோ நகரங்கள் எனப்படும் பெரு நகர்களில் இது இப்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் வீட்டு மாடிகளில் தோட்டத்தை அமைப்பது, சிறு குழுவாகச் சேர்ந்து சமுதாய அளவில் ஒரு பண்ணையை அமைத்துப் பயிரிடுவது ஆகியவை வரவேற்கத்தக்க இன்றைய நவீன வாழ்க்கைமுறையாக மாறி வருகிறது. இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவையாக அமைகின்றன. இப்படி வீட்டு மாடிகளில் தோட்டங்களை அமைப்பதானது விளைநிலங்களின் தேவையை கிராமப்புறத்தில் குறைக்கவும் செய்கிறது.
மும்பை போன்ற பெரு நகரங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் மாடித் தோட்டங்களில் கறிகாய்களைப் பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்வது சுவையான ஒரு செய்தியாகும். இதனால் உத்வேகம் பெறும் இதர பெரு நகர சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு ஆர்வலர்கள் தாங்களும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கத் துவங்கி விட்டனர். இவற்றில் பல அரிய வகை மூலிகைகளும் வளர்க்கப்படுகின்றன. இதில் கிடைத்த வெற்றியால் இவர்கள் இதைப் பற்றிய கருத்தரங்கத்தையும், பயிற்சி முகாமையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதைப் பற்றி நன்கு அறிந்து நமது பகுதியில் நாமும் நகரில் பயிரிடுதல் என்னும் நல்ல திட்டத்தை ஆரம்பிக்கலாமே!
***