
Written by S.
Nagarajan
swami_48@yahoo.com
Date: 14 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-36
Post No. 7095
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
தமிழ் இன்பம்
முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்! (Post No.7095)
ச.நாகராஜன்


குலோத்துங்க சோழன் சிறந்த தமிழ்ப் புலவன். புலவர்களை ஆதரித்த மாபெரும் மன்னவன். ஒட்டக்கூத்தர் அவனது அரசவைப் புலவர்.
ஒட்டக்கூத்தர் பால் அவனுக்குப் பெரும் மரியாதை உண்டு.
ஒரு நாள் குலோத்துங்கன் ஒரு செய்தியைக் கேட்டான். அதிசயமான செய்தி.
ஒரு பெண் தன் சோர நாயகனைக் காண விரும்பினாள். அவன் இருப்பதோ அக்கரை. இவள் இருப்பதோ இக்கரை.
ஆனால் காம வெப்பம் தாங்கவில்லை இளம் பெண்ணுக்கு.
அவனை உடனே சந்திக்க விரும்பினாள்.
ஆனால் நீர் வெள்ளம் பெருக்கோடியது. என்ன செய்வது. துணிந்தாள்.
நீரில் மிதந்தோடும் ஒரு பிணத்தைப் பிடித்தாள். அதைத் தெப்பமாகக் கொண்டு அக்கரை சேர்ந்தாள்.
தன் காதலனொடு கூடி மகிழ்ந்தாள்.
பின்னர் இக்கரை வர வேண்டுமே! நீந்தி வர ஆரம்பித்தாள்.
அவளது காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டது.
தன் காலில் இருந்த கொலுசினால் அதன் கன்னத்தில் ஓங்கி உதைத்தாள்.
முதலைப் பிடியிலிருந்து மீண்டு வந்தாள்.
இந்த செய்தியைக் கேட்ட குலோத்துங்கன் ஒட்டக்கூத்தரை வினவ அவர் பாடிய கண்டசுத்தி இது:
கரண்டகண் டத்தொனிக் கஞ்சிய மான்கருங் கங்குலிலே
திரண்ட வெள்ளத்திற் பிணமீது சென்றனள் செர்ந்தவளை
அரண்டலின் பங்கொடி மீளக்கராப் பற்றவங் கொலுசால்
குரண்டி கன்னத்தி லுதைத்தனன் காணங்கு லோத்துங்கனே
பொருள் : அம் குலோத்துங்கனே – அழகிய குலொத்துங்க அரசனே!
கரண்டம் – நீர்க்காக்கையின்
கண்டத் தொனிக்கு – குரல் ஓசைக்கு
அஞ்சிய – பயந்த
மான் – பெண்ணானவள்
கருங் கங்குலிலே – கருமையாகிய இருள் படர்ந்த இராக்காலத்தில்
திரண்ட வெள்ளத்தில் – பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில்
பிணமீது சென்றனள் – பிணத்தைத் தெப்பமாகக் கொண்டு சென்றால்
சேர்ந்தவளை – சோரநாயகனைக் கூடி
அரண்ட இன்பம் கொடு – வெருட்சியாகிய இன்பத்தை அனுபவித்து
மீள – மீண்டு வரும் போது
கரா பற்ற – அவளது காலை ஒரு முதலை பற்ற
அம் கொலுசால் – அழகிய தன் காலில் அணிந்த கொலுசினால்
குரண்ட கன்னத்தில் உதைத்தனள் – திரைந்த கன்னத்தில் உதைத்தாள்
பாடலைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்.
ஒருநாள் இருவரும் பயணம் மேற்கொண்ட போது ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார்.
இரண்டு அடிகளை முடித்தவுடன் கையை அசைத்து அவரை நிறுத்திய குலோத்துங்கள் மீதி இரண்டு அடிகளைத் தானே பாடி பாடலை முடித்தான்.
பாடல் இது தான்:
ஆடுங் கடைமணி நாவசையா மகில மெங்கும்
நீடுங் குடையைத் தரித்தபிரா னிந்த நீணிலத்தில்
பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங்கு லோத்துங்க சோழனென்றே யென்னைச் சொல்லுவரே.
பொருள் : ஒட்டக்கூத்தர் பாடியது:
ஆடும் கடைமணி நாவசையாமல் – அசையும் இயல்புள்ளதான மணியானது நாவசையாமல்
அகிலம் எங்கும் – உலகம் எங்கும்
நீடுங் குடையைத் தரித்த பிரான் – பெரிய குடையைத் தரித்து நிழலைச் செய்கின்ற பெருமான்
இங்கு அவரை நிறுத்திய குலோத்துங்கன் தான் பாட ஆரம்பித்தான் பொருள் கெடாமல்!
நீணிலத்தில் – இந்தப் பெரிய நிலத்தில்
புலவர் பாடும் புகழ் – புலவர் புகழ்ந்து பாடும்
ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தை – ஒட்டக்கூத்தரின் திருவடித் தாமரையை
சூடும் – சிரசில் அணிகின்ற
குலோத்துங்க சோழன் என்றே என்னைச் சொல்லுவரே – குலோத்துங்க சோழன் என்று என்னைச் சொல்லுவர்.
ஒட்டக்கூத்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இருக்குமா என்ன?
****

