
WRITTEN BY S Nagarajan
swami_48@yahoo.com
Date: 28 OCTOBER 2019
Time in London – 7-31 am
Post No. 7147
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாதுளங்கனிகள்! செம்மண் பூமி!! பரிமாற்றம்!!! – கலில் ஜிப்ரான்
மூலம் : கலில் ஜிப்ரான் – தமிழில் : ச.நாகராஜன்
மாதுளங்கனிகள் (The Pomegranates)

முன்னொரு காலத்தில் ஒரு மனிதன் தனது தோட்டத்தில் நிறைய மாதுள மரங்களை வளர்த்தான். அதிலிருந்து கிடைத்த நிறைய மாதுளங்கனிகளை ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் எடுத்து வெள்ளித் தட்டுகளில் வைத்தான்.
அவனது வீட்டு வாசலில் வைக்கப்பட்ட வெள்ளித் தட்டுகளில் இருந்த மாதுளங்கனிகளுடன் அவன் ஒரு குறிப்பையும் வைத்தான்.
“உங்களுக்கு நல்வரவு. ஏதாவது ஒரு கனியை எடுத்துக் கொள்ளலாம்.”
ஆனால் அங்கு செல்வோர் யாரும் அந்தக் கனிகளில் ஒன்றைக் கூடத் தொடவில்லை.
அந்த மனிதன் சற்று நினைத்துப் பார்த்தான்.
அடுத்த இலையுதிர்காலத்தில் வெள்ளித் தட்டுகளில் மாதுளங்கனிகளை வைத்த போது அவன் கூடவே ஒரு குறிப்பையும் வைத்தான்.
“இதோ, இங்கே பூமியில் கிடைப்பதிலேயே சிறந்த மாதுளங்கனிகள் உள்ளன. ஆனால் இவற்றை மற்ற எல்லா இடத்திலும் விற்கும் வெள்ளிப் பணத்தை விட அதிகமாகவே விற்கிறோம்.”
என்ன ஆச்சரியம், அண்டை அயலில் இருந்தோர், வருவோர் போவோர் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வந்து அங்கு வந்து அதை வாங்குவதற்காக நின்றனர்!
***

செம்மண் பூமி (The Red Earth)
அந்த மரம் மனிதனிடம் சொன்னது : “ஓ! மனிதா!! எனது வேர்கள் செம்மண் பூமியின் ஆழத்தில் உள்ளது.நான் உனக்கு எனது பழங்களைத் தருகிறேன்.”
மனிதன் உடனே மரத்திடம் சொன்னான் : “ஓ! மரமே!! நாம் எப்படி ஒன்று போல இருக்கிறோம்! எனது வேர்களும் செம்மண் பூமியில் ஆழத்தில் தான் உள்ளது. செம்மண் பூமி உனக்கு பழங்களை எனக்குத் தரும் சக்தியைத் தந்துள்ளது. அந்த செம்மண் பூமி உனக்கு நன்றி சொல்லி விட்டு அந்தப் பழங்களை வாங்கிக் கொள்ள கற்பிக்கிறது!”
***
பரிமாற்றம் (The Exchange)
முன்னொரு காலத்தில் ஒரு சாலை சந்திப்பில் ஒரு கவிஞனும் ஒரு முட்டாளும் சந்தித்தனர். இருவரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் பேசியது அனைத்தும் ஒருவருக்கொருவரிடம் அதிருப்தியையே ஏற்படுத்தியது.
அப்போது அந்த சாலையின் தேவதை அங்கே வந்து தனது கரங்களை அந்த இருவர் மீதும் வைத்தது.
அட, என்ன ஆச்சரியம், இருவரும் தங்கள் உடைமைகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.
இருவரும் பிரிந்தனர். ஆனால் சொல்வதற்கே விசித்திரமாக இருக்கிறது, கவிஞன் தனது கையில் ஒன்றுமே இல்லாதிருப்பதை உணர்ந்தான்; வெறுங்கையை மணலில் அளைந்தான்.
அங்கே அந்த முட்டாளோ தன் கண்களை மூடிக்கொண்டு ஒன்றுமில்லாதிருப்பதை உணர்ந்தான். அவன் இதயத்தில் நகரும் மேகங்கள் இருப்பதைக் கண்டான்.
***

கலில் ஜிப்ரானின் கவிதைகள் ஆழ்ந்த பொருளைக் கொண்டதாக இருக்கும்; சிந்திக்க வைக்கும். ஏராளமான உருவகச் சித்திரங்களை வசன நடையில் அவர் படைத்துள்ளார்.
^^^^^^^^

