ஆலயம் காக்க அனைவரையும் வணங்கிய பாண்டிய மன்னன்- 2 (Post No.10053)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,053

Date uploaded in London – 4 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! – 2

ச.நாகராஜன்

பராக்கிரம பாண்டியன் தென்காசிக் கோவில் கண்டு பாடிய பாடல்களில் இரண்டைச் சென்ற கட்டுரையில் கண்டோம். மீதியுள்ள நான்கு பாடல்கள் இதோ:-

சாத்திரம் பார்த்திங்கன் யான் கண்ட பூசைக டாநடத்தி

ஏத்தியன் பால்விசுவ நாதன்பொற் கோயிலென் றும்புரக்கப்

பார்த்திவன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடனங்

கோத்திரந் தன்னிலுள் ளார்க்கு மடைக்கலங் கூறினனே

சாத்திர ஆகமங்களில் மிக்க நம்பிக்கை உள்ளவன் பராக்ரம பாண்டிய மன்னன். அதை முதல் வரியில் காணலாம்.

“சாத்திரம் பார்த்து இங்கு நான் கண்ட பூஜைகள் நடத்தி ஏத்தி அன்பால் காசி விஸ்வநாதன் பொற் கோயில் ஒன்றைப் புரக்கப் பார்த்தேன். என் பெயர் கொற்கை பராக்ரம பாண்டியன். நான் கோவில் அன்பர்களுக்கு, கோத்திரம் தன்னில் உள்ளார்க்கு மிக்க அன்புடன்  அடைக்கலம் கூறுகிறேன்!” – ஒரு மாமன்னனின் பணிவு நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

அடுத்த பாடல்:-

சேலேறியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய்

லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்னம்

மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர் தம்

பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே

சேல் ஏறிய வயல்களைக் கொண்டது தென்காசி.

“இந்த நல்ல ஊரிலே ஆலயத்தை தெய்வச் செயலாலே சமைத்தேன். இங்கு எனது செயல் அல்ல இது. இந்தக் கோவிலை இன்னும்  மேலே விரிவு செய்து புரப்பார்களின் பதங்களில் பணிந்து வீழ்ந்து அன்பால் அவர்கள் ஏவும் பணிகளைச் செய்வேன் பராக்ரம பாண்டியனாகிய நான்!”

    கோவில் அடியார்கள் இதை மேலும் விரிவு படுத்த மன்னன் வேண்டுகிறான். அப்படிச் செய்வோரின் பொற்பாத கமலங்களில் வீழ்ந்து பணிகிறான். அதுமட்டுமல்ல. அவர்கள் கொடுக்கும் – ஏவும் – பணிகளையும் செய்ய மன்னன் தயார்.

இப்போது நம் கோவில்களைக் கெடுக்க வந்திருக்கும் மகா பாவிகளைப் பாருங்கள்; ஒரு முறை அவர்களை நினையுங்கள். சாத்திரமும் வேண்டாம்; கோத்திரமும் வேண்டாம் என்று கூறும் இந்த நடமாடும் பிணங்களுக்கும் சவமானாலும் கல்வெட்டில் என்றும் நிலைக்கும் விதமாகச் சிவமாக  ஜொலிக்கும் மன்னனையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அடியார்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோவில்களையும் அதன் அடிப்படைப் பண்பாட்டையும் சிதைக்க இருக்கும் சிற்றறிவுடையோரின் தீய முயற்சிகளைச் சின்னாபின்னமாக்கி, கோவில்களை விரிவு படுத்தாவிட்டாலும் கூட, உள்ளது உள்ளபடி காக்க வேண்டும். இதுவே இன்றைய தலையாய கடமை.

அடுத்த பாடல் இது :-

மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வகுக்கமுன்னின்

றெனைத்தான் பணி கொண்ட நாதன்றென் காசியை யென்றுமண்மேல்

நினைத்தா தரஞ்செய்தங் காவல்புனையு நிருபர்பதந்

தனைத்தா னிறைஞ்சித் தலை மீதி யானுந் தரித்தனனே.

“மனதால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒரு செயல் இவ்வளவு பெரிய ஆலயம் கட்டுவது என்னும் அரிய செயல். அதை வகுக்க என்னை முன்னின்று தேர்ந்தெடுத்தார் காசி விஸ்வநாதர். அதை நினைத்து ஆதரவு செய்து காவல் புனையும் நிருபர்களின் பாதங்களை இறைஞ்சி தலை மீது நான் தரித்து விட்டேன்.”

இப்படி இன்னும் நெகிழ்கிறான் பாண்டிய மன்னன்.

“கோடானு கோடி பேர் உலகில் பிறக்க என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சிவபிரான் இவ்வளவு பெரிய அரும் செயலைச் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்து அருள் பாலித்தான்.” – என்ன ஒரு உருக்கம், பாருங்கள்!

பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப் பூதலத்திற்

றாந்தங் கிளையுட னேபுரப் பார்கள் செந் தாமரையாள்

காந்தன் பராக்ரமக் கைதவன் மான கவசன் கொற்கை

வேந்தன் பணிபவ ராகியெந் நாளும் விளங்குவரே

பூந்தண் அழகுடைய தோட்டம் சூழ்ந்திருக்கின்ற தென்காசியை இந்தப் புவியில் அந்தக் கோவில் உள்ளிட்ட அனைத்துடனும் காக்கின்றவர்களை திருவானவளின் காந்தன் – லக்ஷ்மி தேவியானவளின் கணவன் – கொற்கையை உடைய அரசனானவன் பணிபவர் ஆகி என்றும் நீண்டு நிலைத்திருக்கும் பெருமையைப் பெறுவார்கள்!

இப்படிப்பட்ட மாமன்னன் வாழ்ந்த தமிழ்நாடு இது. இங்கு ஆலயம் பழித்தலும் அருமறை பழித்தலும் செய்யும் தீயவர் கூட்டம் அதை அழிக்கவும் சிதைக்கவும் முற்படும் போது அதைக் கண்டிப்போம்; காப்போம்!

ஓரிழையில் இணையுங்கள் ஹிந்துப் பெருமக்களே!

         முற்றும்

***

INDEX

பராக்ரம பாண்டியன், தென்காசி தலை நகர்,காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பித்தல்,

பாரோர் அறியப் பணிதல்,உலகில் உள்ள ஒரு அரிய கல்வெட்டு,பாடல்கள் 3 முதல் 6 முடிய,பெருந்தொகை பாடல்கள் 944 முதல்949 முடிய (இரு கட்டுரைகளிலும் தரப்பட்டவை – தலைப்பு : பராக்கிரம பாண்டியன் தென்காசிக் கோவில் கண்டு பாடியவை

tag-  பராக்ரம பாண்டியன்- 2

Leave a comment

2 Comments

  1. Kannan B's avatar

    Kannan B

     /  September 4, 2021

    தமிழக இந்துக்கள் அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டை போல்
    ஆகிவிட்டனர். இலவசம் எனும் பேராசைச் சுழலில் சிக்கி மாய்ந்து போகின்றனர். அவர்கள் ஒன்றிணைய வேண்டியத் தருணம் இதுவே.
    இறைவன் அவர்களுக்கு நற்சிந்தனையைத் தரட்டும்.
    கட்டுரை அருமை. நன்றி.
    கண்ணன், புது தில்லி

  2. santhanam nagarajan's avatar

    santhanam nagarajan

     /  September 4, 2021

    நன்றி. உங்களது சிந்தனையே தான் எனது சிந்தனையும். அதற்காகத் தான் ஆலயப் பாதுகாப்பு பற்றியும், தமிழின் தனிப் பெரும் பெருமை பற்றியும், சங்க காலத்தில் அந்தணரும், அந்தணர் அல்லாதாரும் எப்படி ஒருங்கிணைந்து அமைதியாக வாழ்ந்தனர் என்றும் எழுதி வருகிறேன் – சில நாட்களாக! ஆகமங்களுக்கு எவ்வளவு மதிப்பை எல்லோரும் தந்து வந்தனர் என்பதை நமது இலக்கிய நூல்களும், கல்வெட்டுக்களும், பிற தேசத்திலிருந்து வந்த யாத்ரீகர்களும் குறிப்பிடுவது வியப்பூட்டும் அளவு பெரிய தொகுப்பாகி விடும்,
    இதைத் தொடர்வேன். ச.நாகராஜன்

Leave a comment