
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,833
Date uploaded in London – 24 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 10
காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு மண்டலத்திலேயே!
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் பார்வதி தேவியாரின் திருமண நாளில் தேவர் முதல் யாவரும் மேருமலையில் திருமண விழாவிற்காக ஒருங்கு திரண்டனர். ஏராளமான சுமை ஏறியதால் வடதிசை அழுந்தியது.
தென் திசையோ மேல் எழுந்தது. பூமியைச் சமனாக்குமாறு அகத்தியரை நோக்கிச் சிவபிரான் கட்டளையிட்டார்.
தமிழ்த் தேர்ச்சியுற்று அகத்தியர் காவிரி நதியைக் கையில் உள்ள கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு கொங்கு நாட்டை அடைந்தார். சூரபத்மன் முதலியோரின் துன்பத்துக்கு ஆற்றாத இந்திரன் வேற்று உருவம் கொண்டு சீர்காழிப் பதியில் நந்தனவனத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தான்.
நீர் இன்றிச் செடிகள் காயிந்திருந்தமை கண்டு வருத்தமுற்று ஆனைமுகப் பிள்ளியாரை வேண்டினான். வெண் காக்கை வடிவு கொண்ட விநாயகப் பெருமான், அகத்திய முனி வைத்திருந்த கமண்டலத்தைக் கவிழ்த்தார். உள்ளே இருந்த காவேரி நதி நிலத்தில் பீறிட்டுப் பெருக்கெடுத்து சீர்காழி வழியே ஓடியது.
இந்த வரலாற்றைப் பெருமையுடன் கொங்குமண்டல சதகம் 10ஆம் பாடலில் வழங்குகிறது.
சீரார் வளவ னிலம்புன நானாடாச் செழிப்புறவும்
பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள் கொங்கு மண்டலமே
- கொங்குமண்டல சதகம் பாடல் 8
பாடலின் பொருள் :
சோழ மண்டலம் நீர்ப்பாசனமாகவும் கங்கை நதி தனது பாவங்களை நீக்கிக் கொள்ளவும் வாய்த்தது காவேரி நதி.
அந்தக் காவேரி நதி அகத்திய முனிவர் கரத்திலிருந்து விழுவதற்கு முதலில் இடம் கொடுத்து உதவியது கொங்கு மண்டலமே.
ஸ்காந்தத்தில் காவிரி நீங்கு படலத்தில் இந்த வரலாறு இப்படி பதிவு செய்யப்படுகிறது:
கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மீதிற்பொன்னி
சங்கர னருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்திய னவனென் றோரான்
இங்கொரு பறவை கொல்லா மெய்திய தென்று கண்டான்,
என்னலுங் காஞ்சி தன்னி லெம்பிரா னுலக மீன்ற
அன்னைத னன்பு காட்ட வழைத்திட வந்த கம்பை
நன்னதி போல விண்ணும் ஞாலமும் நடுங்க வார்த்துப்
பொன்னியா றுலகந் தன்னிற் பொள்ளெனப் பெயர்ந்ததன்றே.
– காந்தம், காவிரி நீங்கு படலம்
***