
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.419
Date uploaded in London – —8 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (35)
ராமாயணத்தில் சாபங்கள் (35) ராவணன் தான் பெற்ற சாபம் பற்றி மஹாபார்சுவனிடம் கூறியது!
ச.நாகராஜன்
.
சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் பற்றிப் பார்த்து விட்டோம். இனி அடுத்து யுத்த காண்டத்தில் வரும் மூன்று சாபங்கள் பற்றிப் பார்ப்போம்.
யுத்தகாண்டத்தில் 13வது ஸர்க்கமாக அமைவது ‘ராவணனுக்கும் மஹாபார்சுவனுக்கும் நடந்த ஸம்வாதம்’ என்ற ஸர்க்கம்.
இதில் ராவணன் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தைத் தானே சொல்கிறான்.
மஹாபார்சுவன் ராவணனை நோக்கி, “எதிரிகளை அழிப்பவரே! எங்களுடன் கும்பகர்ணரும் இந்திரஜித்தும் இருக்கும் போது அவர்கள் இந்திரனையும் கூட ஓட்டித் துரத்திவிட வல்லவர்கள். உங்களுடைய எதிரிகள் அனைவரையும் அழிக்க வல்ல வல்லமை உடையவர்கள் நாங்கள். சீதையோடு சேர்ந்து இன்புறுவீராக” என்றான்.
இதைக் கேட்டு மெச்சிய ராவணன் தன்னைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்லலானான்:
“வானில் பிரம்மதேவரது மாளிகைக்குப் பயத்தால் போய் பதுங்கி இருக்கும் புஞ்சிகஸ்தலை என்னும் அப்ஸரஸ் மங்கையை நான் கண்டேன். என்னால் பலாத்காரமாக அவள் ஆடை அவிழ்க்கப்பட்டு அனுபவிக்கப்பட்டாள். அவள் கசங்கிய தாமரை போல பிரம்மதேவரது மாளிகைக்குப் போய்ச் சேர்நதாள். நடந்தது அனைத்தும் பிரம்மதேவருக்குத் தெரிந்து விட்டது போலும்! அவர் என்னைக் குறித்துப் பின்வரும் சாபத்தை இட்டார்:
அத்யப்ரப்ருதி யாமன்யாம் பலாந்நாரீம் கமிஷ்யஸி |
ததா தே ஷத்வா மூர்தா பலிஷ்யதி ந சம்சய: |\
அத்யப்ரப்ருதி – இன்று முதல்
அன்யாம் – வேறு
யாம் நாரீம் – எந்த ஒரு ஸ்த்ரீயை
பலாத் – பலாத்கரித்து
கமிஷ்யஸி – அணுகுவாயோ
ததா – அப்பொழுதே
தே மூர்தா – உனது தலை
ஷதவா – நூறு சுக்கலாக
பலிஷ்யதி – வெடித்து விடும்.
சம்சய ந – இதில் சந்தேகமில்லை.”
யுத்த காண்டம், 13-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 14
இப்படி தான் பெற்ற சாபம் பற்றி ராவணனே தெரிவிக்கிறான்.
“ஆகவே தான் இனிய படுக்கையில் சீதையை பலாத்கரித்து ஏற்றி வைக்காமல் இருக்கிறேன்” என்கிறான் ராவணன்.
இங்கு சீதையை பலாத்காரம் செய்ய முடியாமல் அவனைத் தடுத்து வைத்திருக்கும் சாபம் பற்றி அறிகிறோம்.
***