சேவல் பற்றி அருணகிரி வருணனை- Part 41! (Post No.15,486)

Written by London Swaminathan

Post No. 15,486

Date uploaded in Kumbakonam, India –  11 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part41

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 41

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக் … இரை

கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு,

குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என மாறா குட்சிக்குப்

பக்ஷிக்கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி … குக்குக்

குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி,

சுட்டிக் கொக்ரிக் குக்குட தாரி … குறிப்புடன் கொக்கரிக்கின்ற

சேவலைக் கொடியாகக் கொண்டவனே,

****

தர தர தர தர தர  திருப்புகழ்

சடிலதர விடதர … ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால

விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும்,

பணிதர தரபரசுதர … பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும்,

மேன்மையான மழுவைத் தாங்கியவரும்,

சசிதர சுசிதர … சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே

உருவாக நிற்பவரும்,

இத தமருக மிருக தர … இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும்,

மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும்,

வனிதர சிரதர … பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும்,

பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும்,

பாரத் தரணிதர … சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும்,

தநுதர … மேருமலையையே வில்லாகத் தரித்தவரும்,

வெகு முககுல தடினி தர … ஆயிரம் முகங்களை உடைய சிறந்த

கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும்

சிவ சுத … ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே,

குண தர … அரும் குணங்களை உடையவனே,

பணி சயில … நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி

இருப்பவனே,

விதரண … தயாள மூர்த்தியே,

தருபுர சசிதரு … கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி

மகள்

மயில்வாழ்வே … மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக

இருப்பவனே,

***

கொல்லிப் பாவை கதை

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண

வல்லி மணவாளா … முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும்,

அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே,

பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட

துன்னு கொல்லி மலை நாடா … வழியில் அமைக்கப்பட்டிருந்த

மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே,

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை

வல்ல பெருமாளே. … பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி

இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச்செலுத்த வல்ல பெருமாளே.

** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.

*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.

***

பெண்களின் தழை உடை

தொய்யுபொருள் ஆறங்கம் எனமேவும் … சோர்வடையச்

செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு

வேதாங்கங்களாகி*1,

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் … பலப்பல

நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம்

ஆகியவற்றில் தங்குவதாய்,

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி … பெருகிவரும் தமிழ்

மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி,

பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த பெளவமுறவே …

பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி

நின்ற தருள்வாயே … எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ

அருள்வாயாக.

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ … கல்லும்

உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம்

அடைந்திருந்த பசுக்கள்

அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன் … அழகிய புகும்

இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால்

மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை …

(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக*2 ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்

கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா … கை குவித்துத்

தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே,

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று … தினைக்

கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று,

கொள்ளைகொளு மாரன்கையலராலே … உயிரைக் கொள்ளை

கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,

கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த … தழைகளைக்

கொய்து சென்ற*3 கட்டழகுக் கந்தனே,

கொல்லிமலை மேனின்ற பெருமாளே. … கொல்லிமலை*4 மீது

நின்றருளும் பெருமாளே.

(*1) ஆறங்கம் – வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை: சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் – இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.

(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு. அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும். வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.

***

ஞான மலை எங்கே இருக்கிறது மேலும் ஒரு புதிர்

திருப்பதியில் முருகன், சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனத்தில் முருகன் என்றெல்லாம் புதிர் போட்ட அருணகிரிநாதர் ஞானமலை  குறித்தும் புதிர் போடுகிறார்.

நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள்

பாலா … தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே,

நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞான மலை மேவும்

பெருமாளே. … நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே.

ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

***

அருணகிரிக்கு முருகன் கொடுத்த உயிர் பிச்சை

தடிநிகர் அயிற்கடாவி … மின்னல் போன்ற ஒளிவிடும்

வேலாயுதத்தை வீசி

அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி

முருகோனே … அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய

ஜோதி முருகனே,

எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத … என்

மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை

உடையவனே,

எழுதரிய பச்சை மேனி உமைபாலா … எழுதுதற்கு அரியதான

மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே,

இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக … தேவர்கள்

துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின்

மணவாளனே,

இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. … விளங்குகின்ற

இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.

அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீக்ஷை தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.

–subham—

Tags- சேவல், அருணகிரி வருணனை, ஞான மலை, தழை உடை, கொல்லிப் பாவை, தர தர திருப்புகழ் , Part 41

Leave a comment

Leave a comment