கடனால் நடுக்குற்ற புலவர்! (Post No.4266)

Written by S.NAGARAJAN

 

 

Date: 3 October 2017

 

Time uploaded in London- 6-41 am

 

Post No. 4266

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் இன்பம்

 

கடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்!

 

ச.நாகராஜன்

 

இராமச்சந்திர கவிராயர் பெரும் புலவர். ஒரு முறை கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டார்.

 

அதை எப்படித் தீர்ப்பது?வேறு வழி? வள்ளல் ஒருவரைக் கண்டு தமிழ்ப் பாட்டால் வேண்டுகோள் விடுக்க வேண்டியது தான்!

அப்போது சீதாராமன் என்ற வள்ளல் தமிழின் பால் தீராக் காதல் கொண்டிருந்தார் ஆகவே தமிழ்ப் புலவர்கள் வேதனைப் படுவதைக் கண்டு அவர் சகிக்க மாட்டார்.

அவரிடம் வந்தார் நம் புலவர்.

 

கடன் என்று நேரடியாகச் சொல்லத் தயக்கம். ஆகவே, பாடினார் இப்படி ஒரு பாடல்.

 

அத்திரம்வே லாவலமி ராசி யொன்றிற்

கமைந்தபெயர் மூன்றினிடை யக்க ரத்தால்

மெத்தநடுக் குற்றுனைவந் தடைந்தே னிந்த

விதனமகற் றிடுமற்றை யெழுத்தோ ராறில்

பத்துடையா னைத்தடிந்து பெண்ணார் செய்து

பரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்

சித்தசனே தெளியசிங்கன் றவத்திற் றோன்றுஞ்

சீதாரா மப்ரபல தியாக வானே.

 

அத்திரம் – அஸ்திரம் அத்திரம் ஆனது. அதைத் தமிழில் பகழி என்பர்.

வேலாவலம் – கடல்

இராசி ஒன்றிற்கு அமைந்த  பெயர்  – கன்னி இராசி

மூன்றின் – இந்த மூன்று வார்த்தைகளின்

இடை அக்கரத்தால் – நடுவில் உள்ள எழுத்துக்களால்

மெத்த நடுக்குற்று – மிகவும் நடுக்கம் அடைந்து

உன்னை வந்து அடைந்தேன் – உன்னிடம் வந்து சேர்ந்தேன்.

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் உள்ள நடு எழுத்து க ட ன் – கடன் என்பதாகும்.

 

கடனால் மெத்த நடுக்கம் அடைந்தாராம் கவிஞர்.

ஆகவே உன்னை வந்து அடைந்தேன் என்கிறார்.

 

 

இந்த விதனம் அகற்றிடு – இந்த விசனத்தை – என் கவலையை நீக்கிடு.

 

மற்றை எழுத்து ஓர் ஆறில் – மற்றைய ஆறு எழுத்துக்களினால்

பத்து உடையானைத் தடிந்து – பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கொன்று

 

பெண் ஆக செய்து – பெண்ணுருவாக்கி

பரிவின் நுகர்வோன் – அன்போடு கொடுத்ததை வாங்கி உண்டவனாகிய திருமாலின்

இரு தாள் – இரண்டு பாதங்களை

 

பரந்து போற்றும் – வணங்கித் துதிக்கின்ற

சித்தசனே – அழகினால் மன்மதனை நிகர்த்தவனே

தெளிய சிங்கன் – தெள்ளிய சிங்கனது

தவத்தின் தோன்றும் – தவப் பேறினால் அவதரித்த

சீதாராம – சீதாராமன் என்னும் பெயருடைய

ப்ரபல தியாகவானே – பிரசித்தமான கொடையாளியே!

 

பகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் நடு எழுத்துக்களான க, ட, ன் ஆகிய மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டால் மீது வரும் ஆறு எழுத்துக்கள் பழி, கல், கனி ஆகும்.

 

 

இவற்றில் முதலில் இருக்கும் பழியினால் பத்துத் தலை உடைய இராவணனைக் கொன்று, இரண்டாவதாகிய் கல்லை அகலிகை என்னும் பெண்ணாக உருவாக்கி, மூன்றாவதாகிய கனியை சவரி சமர்ப்பிக்க அதை ஏற்று உண்டவனாகிய இராமனின் பாதங்களை வணங்கித் துதிக்கும் சீதாராமன் என்ற பெயரைக் கொண்ட கொடையாளியே, என் துன்பத்தைப் போக்கு!

என்ன சாமர்த்தியம்?

 

 

கவிஞர் போட்ட புதிர்க் கவிதையை அவிழ்த்து அதன் பொருளைக் கண்டு அவர் கடனைத் தீர்த்தார் சீதாராம வள்ளல்.

கவிஞருக்குக் கடன் தீர்ந்தது.

நமக்கோ நல்ல பாடல் ஒன்று கிடைத்தது.

வாழ்க தமிழ். வளர்க புலவர் கூட்டம்!

***

சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்! (Post No.4264)

Written by London Swaminathan

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 6-30 am

 

Post No. 4264

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ராமாயணத்தில் சுந்தர காண்டம் சிறப்பிடம் பெறுகிறது. இதைப் பாராயணம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்று நீண்ட காலமாக நம்பிக்கை உளது.

சுந்தரகாண்டம் பாஸிட்டிவ் எண்ணங்களுடன், விரைவில் கிடைக்கப்போகும் வெற்றியை அறிவிக்கும் காண்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அது மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், Fபேண்டம் கார்ட்டூன்களை எல்லாம் விஞ்சும் வீரதீரச் செயல்களை அனுமன் செய்கிறான். இது இளைஞர்களுக்கு படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. அது மட்டுமல்ல அனுமன் கடலைத் தாண்டுகையில் எதிர்கொண்ட இடையூறுகள் நாம் எல்லோரும் எதிர்நோக்கும் கஷ்டங்களே. (இதை முன்னொரு கட்டுரையில் விளக்கினேன்)

 

சுந்தர காண்டம் இறுதியில், அனுமன் தன் முகக்குறிகளால், நல்ல செய்தி வ ந்தைக் குறிக்கிறான். பின்னர் நேரடியாகவே,

“கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்” என்று தெளிவுபடக் கூறுகிறான்.

 

சீதை கற்பு நெறி தவறாதவள் என்பதைச் சில பாடல்களால் சொல்கிறான். இறுதியில் ராமனுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட அதிசய நிகழ்ச்சிகளை உரைக்கிறான்.

 

இது நம்புவதற்குக் கடினமான ரசாயன — வேதி இயல் அதிசயங்களாகும். ஆகவே கம்பன் மிகைப்படுத்தும் செய்திகளில் ஒன்றாகவே இதைக் கொள்ளலாம். ராமாயணத்தில் எவ்வளவோ அதிசயங்கள் பற்றி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று என்றும் கொள்ளலாம். தங்கத்தின் உருகு நிலை எவ்வளவு டிகிரி செல்ஸியஸ் என்று வேதியியல் புத்தகததைப் புரட்ட வேண்டாம்.

 

அது என்ன இரண்டு அதிசயங்கள்?

அனுமனையும், வேடம் மாறும் ராக்கதர்களில் ஒருவர், என்று எண்ணி சீதை பயந்து விடக்கூடாதே என்று

கருதிய ராமன், தனது மோதிரத்தைக் கொடுத்து அனுப்புகிறான். அதைப் போல அனுமன் விடைபெற்றுச் செல்கையில் ராமனிடம் அளிக்க சீதையும் ஒரு மோதிரத்தை அனுப்புகிறாள்.

 

ராமன் கொடுத்த மோதிரத்தை (சூடாமணியை) சீதை அன்பின் காரணமாக மார்போடு மார்பாக அனைத்த போது அது உருகிவிட்டதாம். இதை அனுமன், அதிசயத்தோடு பார்க்கிறன். ஆனால் மோதிரத்தைக் கட்டி அணைத்த மாத்திரத்தில் அவளுடைய உளம் குளிர்ந்தது. இப்படி உடல் குளிர்ந்ததால் அந்த மோதிரம் இறுகி பழைய வடிவத்திலேயே நின்றதாம். நல்ல கற்பனை!!!

 

புலவர்களுக்கு மிகைப் படுத்தும்  உரிமை உண்டு. ஆகையால் மிகைப்படுத்திய கூற்றாகவே கொள்ள வேண்டும். இப்படி ஒரு அதிசயத்தை வால்மீகி ராமாயணத்தில் படித்த நினைவு இல்லை!

 

இதோ பாடலும் பொருளும்:–

 

ஒருகணத்து இரண்டு கண்டேன்;

ஒளிமணி ஆழி, ஆன்ற

திருமுலைதத்தடத்து வைத்தாள்;

வைத்தலும், செல்வ! நின்பால்

விரகம் என்பதனின் வந்த

வெங்கொழுந்தீயினால் வெந்து

உருகியது; உடனே ஆறி

வலித்தது; குளிர்ப்பு உள் ஊற

 

பொருள்:

எல்லாச் செல்வங்களையும் உடைய பெருமானே! ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். ஒளிவீசும் மணிகள் பதித்த அந்த மோதிரத்தை வாங்கிய சீதாப் பிராட்டி தன் அழகிய கொங்கையில் வைத்துக் கொண்டாள்; அவ்வாறு வைத்தும் உன்னைப் பிரிந்ததனால் உண்டான வெப்பமாகிய நெருப்பினால் மோதிரம் வெந்து உருகியது. மீண்டும் அம்மோதிரம் உடலில் பட்ட மகிழ்ச்சியால், குளிர்ந்த தன்மை உடலில் மிகுதியாகி, உருகிய அந்த மோதிரம்  உடனே இறுகி முன்போல் ஆய்விட்டது.

TAGS:– அனுமன், 2 அதிசயங்கள், சீதை மோதிரம், உருகியது, இறுகியது

–Subham–

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை! (Post No.4261)

Written by London Swaminathan

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 1-08 pm

 

Post No. 4261

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்:

 

யம தர்ம ராஜன் பூமிக்கு வந்தார். அழகான ஒரு பிராமணப் பெண்ணைக் கண்டார்; காதல் கொண்டார்; அவள் பெயர் விஜயா.

 

ஓ பேரழகியே, உன் மீது காதல் கொண்டேன்; என்னைத் திருமணம் செய்து கொள்;  யம லோகம் போகலாம். இனிதே வாழலாம் என்றான்– யமதர்ம ராஜன்.

அடச் சீ, தள்ளி நில்; உன் மூஞ்சியும் முகரையும் பார்க்கச் சகிக்கவில்லை; வாஹனமோ உன்னை விடக் கருத்த எருமை- என்றாள் விஜயா.

யமதர்ம ராஜனோ விடவில்லை.

பெண்ணே! என் வீரப் பிரதாபங்களைக் கேள்; யுதிஷ்டிரன் எனப்படும் தர்மனுக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால் அதற்கும் முன்னதாகவே , என் ஒருவனுக்குத்தான் தர்மராஜன் என்று பெயர்; அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிப்பது என் கடமை; ‘ஆளைக் கண்டு ஏமாறாதே ஊது காமாலை’ என்ற பழமொழியை அறியாயோ? பேதையே1 பெண் மானே1 இளங்கிளியே; கருங்குயிலே; என் குணத்தைப் பார் –என்றான் யமன்.

அவளும் குணத்தில் மயங்கினாள்; கல்யாணத்துக்கு இணங்கினாள்.

 

இருவரும் யமலோகத்துக்கு ‘ஹனிமூன்’ போனார்கள்; இல்லற வாழ்வு இனிதே விளங்கியது.

 

பெண்ணே; ஒரே ஒரு கண்டிஷன்/ நிபந்தனை; இந்த ராஜ்யத்தில் தெற்கு திசைப் பக்கம் போய்விடாதே; எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்லி வைத்தேன்– என்றான் யமதர்மன்.

 

சந்தேகப் பேர்வழிகள்!

பெண்புத்தி வேறு வகையில் செல்லும்; ஆண்கள் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் வேறு ஒரு கணக்குப் போடுவர்; சந்தேகப் பேர்வழிகள்; வீட்டிற்குத் தாமதமாக வந்தால் வேறு ஒரு பெண் பின்னனியில் இருக்கிறாளோ? என்பர். தும்மல் போட்டால் இப்போது உம்மை யார் நினைத்தாள்? யார் அந்தப் பழைய காதலி? (காண்க திருக்குறள்) என்பர். உன்னை நான் இப்போது மறப்பேனா? என்று அவன் சொன்னால் ஏன் ‘எப்போதும்’ என்று சொல்லவில்லை என்று ஊடல் கொள்ளுவர் (காண்க காமத்துப்பால்-திருக்குறள்)

 

 

சம்சயாத்மா விநஸ்யதி= சந்தேகப் பேர்வழி அழிவான்– என்று கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்னதையும் உதறிவிட்டு தென் திசைக்குப் பயணமானாள் இளஞ் சிட்டு விஜயா- யமனின் புது மனைவி!

 

கோரமான காட்சி; ஐயோ அம்மா

என்று சத்தம்; அடி உதை, எத்து, குத்து, வெட்டு, தட்டு என்று யமகிங்கரர் முழக்கம். பாபாத்மாக்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறல்; ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது விஜயாவுக்கு; சரி திரும்பிப் போகலாம் என்று நினைத்த போது “மகளே! பார்த்த ஞாபகம் இல்லையா? நாந்தான் ம(க்)களைப் பெற்ற மகராசி!” என்று கூச்சல் போட்டாள் விஜயாவின் அம்மா!.

 

அன்றிரவு விஜயாவின் கதவைத் தட்டினான்; எமன்; ஒரு ‘பிராமிஸ்’ (Promise)  கொடுத்தால்தான் இன்றிரவு உமக்கு அனுமதி என்றாள் விஜயா.

அன்பே, ஆருயிரே! உனக்கு இல்லை என்று சொல்வேனா? என்றான் யமன். கதவும் திறந்தது.

 

மெதுவாக அவிழ்த்துவிட்டாள்! அம்மாவின் கதையை!

என் அம்மாவை சித்திரவதை நடை பெறும் தென் திசையிலிருந்து விடுவித்தால் என்னைத் தொடலாம்; படலாம் என்றாள்.

 

அடக் கடவுளே; தென் திசை செல்லக்கூடாது என்று சொன்னேனே! இந்து மதத்தில் ஒரு விதி உள்ளது அதுதான் வேதத்தில் முதல் மந்திரம்; சத்யம் வத= உண்மையே பேசு; உபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது சத்யமேவ ஜயதே நான்ருதம்= ‘’வாய்மையே வெல்லும் – பொய் அல்ல’’ என்று.– அதுதானே இந்திய அரசின் , நீ வாழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் சின்னம்; நானே கூட உண்மையை மீற முடியாது; உன் அம்மா செய்த பாவங்களுக்கு அவள் நரகத்தில் அனுபவிக்கிறாள். அதற்கு நான் என்ன செய்வேன்? கடவுளேகூட சாபமோ, வரமோ கொடுத்துவிட்டால் அதை அனுச ரித்தே ஆக வேண்டும்– நான் ‘தீர்க சுமங்கலி பவ:’ என்று சொல்லி சாவித்ரியிடம் சிக்கிய கதைதான் உலகப் பிரசித்தமே என்றான் யமன்

அவளோ கெஞ்சினாள்; மன்றாடினாள்; சரி இந்து மதத்தில் எல்லாப் பாவங்களுக்கும் விமோசனம் உண்டு; எல்லா சாபங்களுக்கும் ஒரு குறுக்கு வழியும் உண்டு. அதன்படி கொஞ்சம் தப்பிக்கலாம். உங்கள் அம்மாவின் பாவம் போவதற்குச் சமமான புண்ணிய கருமங்களை – யாக யக்ஞங்களை பூலோகத்தில் ஒருவர் செய்து கணக்குக் காட்ட வேண்டும்– எனது அக்கவுண்டண்டு (Accountant) சித்திர குப்தன் லாப-நஷ்டக் கணக்கில் மன்னன். அவன் ஓகே சொன்னால் உன் அம்மா    பிழைப்பாள் என்றான் யமன்

 

அவளும் பூலோகத்தில் உள்ள எல்லாப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்தாள்; மாற்று “கிட்னி” (Kidney) கேட்டு அல்ல; புண்ய கருமங்களைச் செய்ய ஒரு பெண் தேவை என்று. மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் கிடைத்தாள்

யாக  யஞங்களை முறையே செய்து, சித்திரகுப்தன் கணக்குகளைச் சரி பார்த்து யம தர்மனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுக்கவே விஜயாவின் அம்மா விடுதலை ஆனாள்

விஜயாவுக்கும் சந்தோஷம்; இல்லறம் இனிதே நடந்தது!

 

கதையில் சுவை கூட்ட கொஞ்சம் சொற்களை மட்டும் கூட்டினேன்; ஆனால் கருத்துப் பிழை எதுவுமிலை.

 

இந்தக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன?

1.தென் திசை பற்றி  திருக்குறளும் சங்கத் தமிழ் (புறநானூறு) பாடல்களும் சொன்னது வேதத்தில் உள்ள இந்து மதக் கருத்தே; ஆகையால் தமிழ் பண்பாடு, வடக்கத்திய பண்பாடு என்று எதுவுமிலை.

 

2.ஆரியர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்தனர்- மத்திய ஆசியாவில் இருந்து,  ஸ்டெப்பி புல் வெளியிலிருந்து வந்தனர் என்று உளறிக்கொட்டி கிளறி மூடும் மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தக் கதை. ஏனெனில் தென் திசை யமன் திசை என்பது இந்து மதக் கருத்து- தமிழர் கருத்து- திருவள்ளுவர் கருத்து– இது உலகில் வேறு எங்கும் இல்லை. ஆக இந்துக்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

3.இன்னும் ஒரு கருத்து; கடவுளே ஆனாலும் உண்மை என்னும் விதி முறையை- நியாயம், நீதி, நேர்மை என்ற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் சொந்தக்காரர்கள், வேண்டியவர்களுக்குச் சலுகை இல்லை; ஆனால் பாப விமோசனம் பெற வழிகள் உண்டு.

 

 

4.வில்லியம் ஜோன்ஸும் மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லூம் காட்டிய ஓரிரு ஒற்றுமைகளைவிட நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேற்றுமைகளே அதிகம். நம்முடைய கலாசாரத்தில் கொஞ்சம் மிச்சம் மீதி அவர்களுக்கு நினைவிருக்கிறது ஏனெனில் உலகம் முழுதும் இந்து மத சம்பிரதாயங்கள் இருந்ததன் மிச்சம் சொச்சம்தான் இவை என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) உரைகளில் மொழிந்துள்ளார்.

எகிப்து முதலிய கலாசாரங்களில் மேற்கு திசைதான் மரணதேவன் திசை!

 

5.யமனும் கூட நல்லவன்; நீதி நெறிப்படி– சட்டப் புத்தகப் படி- தண்டிப்பவனே. ஆனால் நசிகேதன், மார்கண்டேயன், சாவித்திரி போன்றவர்களிடம் ‘ஜகா’ வாங்கினார். காரணம்? ஒரு சொல் சொல்லிவிட்டால் அதை மாற்ற முடியாது; இறை அருள் இருந்தால்

பாரதி போல  “காலா என் காலருகே வாடா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்/ என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” எனலாம்.

 

வாழ்க புராணக் கதைகள்! வளர்க

அவை உணர்த்தும் நீதி நெறிகள்!!

 

–SUBHAM—

 

TAGS:

யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம்

 

விதுரர் கூறும் விதுர நீதி – 4 (Post No.4260)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 5-41 am

 

Post No. 4260

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாபாரதச் செல்வம்

விதுரர் கூறும் விதுர நீதி – 4

 

ச.நாகராஜன்

 

6

செல்வத்தை விரும்புபவன் கீழ்க்கண்ட ஆறு  தோஷங்களை விலக்க வேண்டும்.

  • அதிக தூக்கம்’ 2) சோம்பல் 3) பயம் 4) கோபம் 5) முயற்சியின்மை 6) எந்தக் காரியத்தையும் தாமதமாகவே செய்தல்

 

**

 

  • சாஸ்திர அர்த்தங்களை நன்றாகச் சொல்லும் திறமையற்ற ஆசாரியனையும், 2)அத்தியயனம் செய்யாத ரித்விக்கையும், 3) குடி மக்களைக் காப்பாற்றாத அரசனையும், 4)பிரியமில்லாது பேசுகின்ற மனைவியையும்,

5)காட்டிற்குச் சென்று ஆடு மாடுகளை மேய்க்காமல் கிராமத்திலேயே வசிக்க வேண்டுமென்று விரும்புகின்ற இடையனையும்,

6) கிராமத்தில் இருந்து தன் தொழிலைக் கவனிக்காமல் காட்டில் வசிக்க வேண்டுமென்று விரும்பும் நாவிதனையும்

ஒருவன் நம்பினால் ஓட்டைக் கப்பலில் ஏறி சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவனுக்கு ஏற்படும் கதியே அவனுக்கு ஏற்படும்.

**

ஒரு மனிதன் எந்தக் காலத்திலும் விடக் கூடாத ஆறு குணங்கள் இவையே:

  • உண்மை உரைத்தல் 2) ஈதல் 3) சோம்பலில்லாமை 4) பொறாமைப்படாமல் இருத்தல் 5) பொறுமை 6) தைரியம்

**                                                         1)ஒவ்வொரு நாளும் பொருள் சேர்ந்து கொண்டே இருத்தல்,

2)நோயற்று இருத்தல்

3)அன்புடன் பேசும் மனைவி

4) பிரியமாகப் பேசுகிறவளுமான மனைவி

5)தனக்கு அடங்கி இருக்கும் பிள்ளை

6) பணத்தைத் தரும் படிப்பு

ஆகிய இந்த ஆறும் ஒருவனுக்கு சுகத்தை இந்த உலகில் அளிக்கும் சாதனங்களாகும்.

**

  • நல்ல படிப்பு படித்தவுடன் ஏராளமான வருவாய் வரும் ஒரு வேலை,
  • உடனே தனக்குப் பிடித்த பெண்ணைக் கைப்பிடிக்கும் பாக்கியம்
  • தேவையான சமயங்களில் அந்த பிரிய நாயகியின் இனிமையான சொற்களைக் கேட்கும் பாக்கியம்
  • சரியான சமயத்தில் பிறந்த பிள்ளை
  • அவன் தான் சொன்னதைத் தட்டாமல் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பது
  • பல துறைகளின் வாயிலாகவும் தினமும் பணம் வந்து கொண்டே இருப்பது

இந்த ஆறும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால்  இதை விட இனிய சுகம் இந்த உலகில் வேறு என்ன இருக்கிறது?!

 

 

திருடர்கள் அஜாக்கிரதை உள்ளவினிடம் ஜீவிக்கிறார்கள்.

வைத்தியர்கள் நோயாளிகடம் ஜீவிக்கிறார்கள்.

பெண்கள் காமவசப்பட்டவர்களிடம் ஜீவிக்கிறா.ர்கள்

யாகம் செய்விப்பவர்கள் யாகம் செய்பவர்களிடம் ஜீவிக்கிறார்கள்.

அரசன் வழக்காளிகளிடம் ஜீவிக்கிறான்.

பண்டிதர்கள் மூடர்களிடம் ஜீவிக்கிறார்கள்.

இந்த ஆறு பேரைத் தவிர ஏழாமவன் அறியப்படவில்லை.

**

பசுக்கள்,

பிறரிடம் ஊழியம் பா

வேளாண்மைர்ப்பது

மனைவி

கல்வி

தனக்குச் சமமில்லாதவரின் நட்பு

ஆகிய இந்த ஆறும் இடைவிடாமல் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தவறினால் இவை நசித்து விடும்.

**

 

கற்ற பிறகு சீடர்கள் ஆசிரியர்களையும்

மனைவியை அடைந்த பிறகு தாயையும்

காம உணர்ச்சி அற்றவன் மனைவியையும்

காரியம் முடிந்த பிறகு அது முடிய உதவி செய்தவனையும்

கடலைக் கடந்த பிறகு தோணியையும்

வியாதி குணமானவுடன் வைத்தியனையும்

பெரும்பாலும் பலர் அலட்சியம் செய்கின்றனர்.

அது தவறு. ஒருவர் செய்த உதவியை எநத நாளும் மறக்கக் கூடாது

**

வியாதி இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது

கடன் இல்லாமல் இருப்பது

அயல் நாட்டில் வசிக்காமல் சொந்த தேசத்தில் வசிப்பது

நல்ல மனிதர்களுடைய சேர்க்கை

தன் சுய புத்தியால் ஏற்பட்ட ஜீவனம் (வாழ்க்கை)

பயமில்லாத வாழ்க்கை

இந்த ஆறும் இந்த உலகத்தில் சுகத்தை அளிக்கக் கூடியவை.

**

பொறமை உடையவன்

அளவுக்கு மிஞ்சிய இரக்கத்தை உடையவன்

திருப்தியில்லாதவன்

கோபக்காரன்

எப்போதும் எல்லாவற்றிலும் சந்தேகப்படுகிறவன்

பிறருடைய பாக்கியத்தை அண்டிப் பிழைப்பவன்

ஆகிய இந்த ஆறு பேரும் எந்த நாளும் துக்கம் உள்ளவர்கள்.

***

 

(தொடரும்)

 

 

 

 

தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்! (Post No.4258)

Written by London Swaminathan

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 8-06 am

 

 

Post No. 4258

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்! (Post No.4258)

சுனஸ்சேபன் கதையைக் கேட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும்; அதைச் சொன்னவர்களுக்கு மட்டக்குதிரை பூட்டிய வெள்ளி ரதத்தை பரிசாகக் கொடுக்க வேண்டும்; அதைச் சொல்லும் பிராமணர்களுக்கு உட்கார தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட கம்பளம் தரவேண்டும் — இப்படியெல்லாம் சொல்கிறது 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமண நூல்கள்.

இது மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்கள் தலையில் போட்ட வெடிகுண்டு ஆகும்; ஏனெனில் இப்படி எழுதப்பட்ட பிராமண நூல்களை, “சுத்தக் குப்பை, பரிகசிக்கத்தக்கது, சிறு பிள்ளைத் தனமானது, ஒரே உளறல்”– என்று எழுதி வைத்தனர்.  இதைப் பாடிய ஆரியர்கள் எங்கள் ஜெர்மானியருக்கும் மூதாதையர்; அவர்கள் எங்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவில் குடியேறினர்; நாடோடிகள்; மாடு மேய்க்கும் பயல்கள்; சொல்லப்போனால் வேதத்தில் முக்கால் வாசி சிறுபிள்ளைத் தனமான துதிகள்தான் — என்றெல்லாம் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கூலி வாங்கிய மாக்ஸ்முல்லர் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார்.

 

 

அவர்கள் கைகளில் பிராமண நூல்கள் சிக்கியவுடன் ஒரே ஆனந்தம்; ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு வெள்ளைக்காரப்          ரப் பயல்கள் மொழிபெயர்க்கத் துவங்கினார்கள். ஒரே சிரிப்பு; அட இந்த உளறல்களை வைத்துக் கொண்டு, இந்துமத்துக்கு சமாதி கட்டிவிடுவோம் என்று எழுத்தில் எழுதினார்கள்; பகிரங்கமாகக் கொக்கரித்தார்கள்; தேசத் துரோஹ, இந்து விரோத மார்கசீய  வாந்திகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாப் புத்தகங்களிலும் அதை எழுதி மனம் மகிழ்ந்தார்கள்; உளம் குளிர்ந்தார்கள். ஆனால் இன்று  துர்கா பூஜைக்கும் கணேஷ் சதுர்த்திக்கும் வரும் கூட்டத்தைப் பார்த்து தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து விட்டார்கள்.

 

வேதங்கள் நான்கு. அவைகளில் சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு.

 

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக்வேதம்; அது கவிதைத் தொகுப்பு. அதனுடன் எழுந்த உரைநடை நூல் ஐதரேய பிராமணம்; இது யஜுர்வேத பிராமணமாகிய சதபத பிராமணத்துக்கும் முந்தையது என்பது வெளிநாட்டர் கணிப்பு; அதாவது கிமு 1000 ஆண்டில் எழுந்தவை.

பிராமண நூல்களில் அடிக்கடி வரும் ஒரு மரபுச் சொற்றொடர் “கடவுளருக்கு மறைமொழிகளே பிடிக்கும்”; அதாவது எதையும் ரகசிய மொழியில் சங்கேத மொழியில் சொல்லுவோம் என்று ஆடிப்பாடிக் கூத்தாடினர் வேதகால ரிஷிக்கள்; இது தெரிந்தும் வெள்ளைக்காரப் பயல்கள் நேரடியாக இலக்கிய அர்த்தம் கற்பித்து சிரி சிரி என்று சிரித்தனர்.

 

ஆனால் பிராமண நூல்களில் சொல்லப்படாத விஷயமே இல்லை. மேலே சொன்ன தங்க கம்பளம், வெள்ளி ரதம் மந்திரமே நமக்குக் காட்டுகிறது அது ஒரு பணக்கார சமுதாயம். மேலும் பொருளாதர ‘சூப்பர் பவர்’ என்று. இவர்களைப் பார்த்துதான் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரிகசித்தனர் ஆங்கிலம் தெரிந்த அறிஞர்களும் அசிங்கங்களும்!

 

ஐதரேய பிராமணத்தில் மிகப்பெரிய கதை சுனஸ்சேபன் கதை; இது மனிதனை யாகத் தீயில் காவு கொடுக்கும் கதை. இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்றே போதுமே என்று கருதிய மாக்ஸ்முல்லர்கள் மண்டையில் அடிவிழுந்தது போல அதையே பிராமணர்கள் புனித காவியமாக்கி எல்லோரும் இதைப் படிக்க வேண்டும் என்று விதித்தனர். கால்டுவெல்களின் ‘பாச்சா’ பலிக்காமல் போனது. ஏனெனில் மனிதனைக் காவு கொடுக்கும் யாக யக்ஞங்கள் எதுவுமே நடக்க வில்லை. அப்படி நடக்கவிருந்த சுனஸ்சேபனும் உயிர் பிழைத்தான். மேலும் அவனுக்கு முந்தி 100 அரசர்கள் இருந்தனர். அவர்கள் காலத்திலோ மனித பலி கொடுக்கும் புருஷமேத யக்ஞம் நடைபெற்றதாக சான்று இல்லை. அது மட்டுமா? புரட்சி வீரன், வேதகால புரட்சித் தலைவர் விசுவாமித்திரர் அந்த சுனஸ்சேபனைக் காப்பாற்றிய கதை பிரசித்தமாகி புனிதம் பெற்றது.

புருஷமேதம் எனப்படும் யாகத்தில் 179 ஆட்களைத் தீயில் பலிகொடுக்க வேண்டும்; முதல் பலி பிராமணன்! அந்தப் பட்டியலை வெளியிட்டால் வேத கால மக்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள், உழைப்பாளிகள், தொழிலாளிகள், நாகரீக முதிர்ச்சி பெற்ற சமுதாயம் என்பதும் தெரிந்து விடும்; ஏனெனில் அதில் நட்சத்திர தர்ஷக் எனப்படும் வானவியல் அறிஞர், கொல்லன், பொற்கொல்லன், தேர் செய்யும் தச்சன், போர் வீரன், வணிகன் என்று பெரிய பட்டியல் உள்ளது இப்படி 179 வகைத் தொழிலாளிகள் உள்ள சமுதாயத்தை நாடோடிகள், மாடு மேய்க்கும் இடையர்கள் என்று சொன்ன ஆங்கில எழுத்தர்கள் முகத்தில் கரிபூசியது போலப் போனது. நிற்க.

 

 

யார் அந்த சுனஸ்சேபன்? அவன் கதை என்ன?

இது ராமாயண, மஹாபரத புராணங்களில் சிறிது மாறுபட்டு எழுதப்பட்டாலும் ஒரிஜினல் (Original) என்று கருதப்படும் ஐதரேய பிராமணக் கதையைச் சுருக்கமாகக் காண்போம்.

 

ஹரிச்சந்திர மஹா ராஜாவை எல்லோருக்கும் தெரியும்; உண்மை விளம்பி; சத்திய சீலன்; அவருக்கு பிள்ளையே இல்லை. ‘கடவுளே! எனக்கு மட்டும் குழந்தை பிறக்கட்டும்; முதல் குழந்தையை வருண பகவானே! உனக்கே கொடுத்து விடுகிறேன்’ – என்று சத்தியம் செய்தார்.

 

இப்படி தலைப் பிள்ளையை கடவுளுக்குப் பலி கொடுக்கும் வழக்கம் எல்லாக் கலாசாரங்களிலும் இருந்ததை எல்லா மத நூல்களும் செப்பும்; மேலும் பஹ்ரைன் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் சமாதி இருப்பது ஆராய்ச்சியாளருக்கு புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. (இது பற்றிய விஷயங்களை பஹ்ரைன் அதிசயங்கள் என்ற எனது கட்டுரையில் காண்க)

 

 

ஹரிசந்திரனுக்குக் குழந்தையும் பிறந்தது; ரோஹிதன் என்று நாமகரணம் செய்தார்; பிள்ளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. ‘மகனே உன்னை நான் ‘பிராமிஸ்’ (promise) செய்தபடி புருஷமேத யக்ஞம் வளர்த்து ஆகுதி தரவேண்டும்; ஆகையால் தயாராக இரு என்றார். பையன் அதைகேட்டு காட்டிற்கு ஓடிப்போய் ஆறு ஆண்டுகள் மறைந்திருந்தான். அப்போது அந்தப் பக்கம் ஒரு ஏழைப் பிராமணர் வந்தார். அவர் பெயர் அஜீகர்த்தா; அவருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர்தான் சுனஸ்சேபன் (அவன் பெயர் நாய் வால்= சுனஸ்சேபன்)

 

இதோ பார் ஒரு ‘டீல்’ (Deal) போடுவோம்; ரோஹிதா, நீ போய்விடு சுனஸ்சேபனை யாக கம்பத்தில் கட்டுகிறேன்; நூறு பசுக்கள் கொடு; யாகத்துக்கு நானே அழைத்துப் போகிறேன்; அப்போது இன்னும் 100 பசு கொடு; நானே தீயில் ஆகுதியும் தருகிறேன்; இன்னும் 100 பசு கொடு; சரிதானே? என்றார். ரோஹிதனுக்கும் சந்தோஷம்; அப்படியே ஆகட்டும் என்றான்.

இவர்களின் கெட்ட காலமோ, சுனஸ்சேபனின் நல்ல காலமோ அந்தப் பக்கம் ரிஷிகளின் புரட்சித் தலைவர் விசுவாமித்திரர் வந்தார். திரிசங்கு மஹாராஜனை உடம்போடு சொர்கத்துக்கு அனுப்புவேன் என்று சொல்லி தோற்றுப் போனார். ஹரிசந்திரனை பொய் சொல்ல வைப்பேன் என்று சொல்லி தோற்றுப் போனார்; மண், பெண், அஹங்காரம் என்பதில் மூன்று முறை சிக்கி தவ வலிமை எல்லாம் இழந்து பிராமணன் ஆக முடியாமல் தவித்தார். இறுதியில் எல்லாவற்றையும் கடந்து வசிட்டர் வாயினால் பிராமணன் (பிரம்ம ரிஷி) என்று பட்டம் வாங்கினார் புரட்சித் தலவர்– மஹாராஜன் —விசுவாமித்திரர்.

 

அவர் சுனஸ்சேபன், ஒரு கம்பத்தில் கட்டி இருப்பதைக் கண்டார். அட ஹரிச்சந்திரனை மடக்க, கிடுக்கிப் பிடி போட நல்ல சந்தர்ப்பம் என்று கருதி ‘’டேய் பையா! நீ இன்று முதல் என் மகனடா; உன் பெயர் நாய் வால் அல்ல. உன் பெயர் தேவ ராதன் நீ வேதக் கவிகளைப் பாடலாம்; கண்டுபிடிக்கலாம் (சுனஸ்சேபன் பெயரில் பல துதிகள் ரிக் வேதத்தில் உளது) என்றார் .கடைசியில் அந்த யாகம்  நடக்கவில்லை.

 

ஆக உப்புச் சப்பு இல்லாமல் கதை முடிந்தது.

 

வேத கால ரிஷிகள் 100, 1000, 100,000 என்று டெஸிமல் சிஸ்டத்தில்தான் பேசுவர். மிகப்பெரிய கணிதப் புலிகள்; குதிரை பசுமாடு ஆகியவற்றை கண்டு பிடித்து உலகை நாகரீக மயமாக்கினர். எகிப்து மீது படை எடுத்து குதிரை– யானைப் படை பற்றிச் சொல்லிக் கொடுத்தனர். கி.மு 1380-ல் துருக்கியில் குதிரைப் பயிற்சி பள்ளிக்கூடம் நடத்தி சம்ஸ்கிருத மொழிமூலம் அவர்களுக்குப் பாடம் நடத்திய புத்தகம் கிடைத்து இருக்கிறது. இப்பேற்பட்ட நாகரீகவாதிகளைப் பார்த்து தங்கதில் புழங்கிய பணக்காரர்களைப் பார்த்து சிலதுகள் ‘நாடோடிகள்’, ‘மாடு மேய்க்கும் அநாகரீகக் கும்பல்’ என்றெல்லாம் ‘சிலதுகள்’ பிதற்றியது— இன்று நாம் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்.

 

TAGS:–சுனஸ்சேபன், ஐதரேய பிராமணம், புருஷமேதம், மனித பலி

–SUBHAM–

கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா? சிவனிடம் அப்பர் கேள்வி (Post No.4255)

Written by London Swaminathan

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 7-49 am

 

 

Post No. 4255

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?அப்பர் கேள்வி

 

 

கரும்பு பிடித்தவர் காயப்பட்  டாரங்கொர் கோடலியால்

இரும்பு பிடித்தவ  ரின் புறப்பட்டா  ரிவர்கணிற்க

அரும்பவிழ் தண்பொழில் சூழணி  யா ரூமர்ந்தபெம்மான் 

விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே

 

–நாலாம் திருமுறை- தேவாரம், அப்பர்

 

மூவர் அருளிய தேவாரத்தைப் பல கோணங்களில் படிக்கலாம்.

சம்பந்தர் தன்னைப் பாடினார்

அப்பர் என்னைப் பாடினார்

சுந்தரர் பெண்ணைப் பாடினார்

 

என்று சிவன் சொல்லுவதாக சிலர் சொல்லுவர்; இது ஒரு கோணம்

 

தேவாரத்தில் வரும் இயற்கை வருணனை, சிவ பெருமானின் லீலைகள் வருணனை, திருத்தலங்களின் சிறப்பு, அவர்கள் செய்த அதிசயங்கள பற்றிய பாடல்கள், வரலாற்று உண்மைகள், சம்பவங்கள், திருநீறு முதலிய சின்னங்களின் மகிமை, தமிழ் மொழி அழகு, எதுகை, மோனை, பழமொழிகள், அக்காலத் திருவிழாக்கள் — என்று நாம் விரும்பும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

 

 

நான் படித்தவரை, அதிசய நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தர் தேவாரமும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு அப்பர் தேவாரமும் மிக உதவும் என்று கண்டேன்.

 

சங்கம் பற்றியும், தருமி பற்றியும் அப்பர் பாடியதால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு புகழ்பெற்ற காட்சி நம் கண்களுக்கு முன்னே வருகிறது (திருவிளையாடல் சினிமாவிலும் காணலாம்)

 

நரியைப் பரியாக்கிய சம்பவத்தை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சொன்னதால், மாணிக்க வாசகப் பெருமான் , அப்பருக்கும் சம்பந்தருக்கும் சற்று முன்னர் வாழ்ந்தவர் என்பதையும் அறிகிறோம்.

 

 

மூவர் தேவாரமும் மணிவாசகப்   பெருமானின்   திருவாசகமும், 12 ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தமும், திருமூலரின் திருமந்திரமும் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை . பல அதிசயச் செய்திகள் நிறைந்தவை; பாஸிட்டிவ் எண்ணங்களை உருவாக்குபவை.

 

‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை ‘ — என்று சம்பந்தர் பாடியதைப் படிக்கையில் தற்காலத்தில் ராஜாஜி எழுதி எம்.எஸ். பாடிய “குறையொன்றுமில்லை, கோவிந்தா” என்ற பாடல் நினைவுக்கு வரும்.

சுருங்கச் சொன்னால் ரிக் வேதம், யஜூர் வேதம் போல எங்கே பார்க்கினும் பாஸிட்டிவ் எண்ணங்கள்! வீட்டில் ஒலித்தால் துன்பங்கள் யாவும் கரைந்துபோகும்.

 

ஒரு பாடலில் அப்பர் பெருமான கரும்பு பிடித்தவனுக்கும் இரும்பு பிடித்தவனுக்கும் என்ன நேர்ந்தது என்று பாடி,  “ஏ, சிவ பெருமானே உனக்கு கரும்பு பிடிக்காதா? இரும்புதான் பிடிக்குமா?” என்று வியக்கிறார்.

 

சிவ பெருமானைப் பாடுகையிலும் கூட அரைத்த மாவையே அரைக்காமல் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லி விடுகதை போடுகிறார் திருநாவுக்கரசர்! நாவுக்கு அரசன் அல்லவா?

 

இதோ பாடலின் முழுப்பொருள்:–

 

கரும்பு பிடித்தவர்= மன்மதன்; சிவனால் எரிக்கப்பட்டவர்

இரும்பு பிடித்தவர் = சண்டேசுவர நாயனார்; சிவன் அருள் பெற்றவர்

 

சுவையான கரும்பாகிய வில்லை உடைய மன்மதனை எரித்து, இரும்பாகிய கோடலியைக் கொண்ட சண்டேசுவரருக்கு அருள்பாலித்த – மகிழ்வித்த — பெருமான் ஈசன் — பொழில் சூழ்ந்த ஆரூரில் வீற்றிருப்பவனே! எனக்கும் உம்மைப் பிடிக்கும்; யாது வேண்டுவது? உமக்கு கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?

 

–subam–

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

Picture  by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 6-34 am

 

 

Post No. 4252

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

கடவுளை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவிப் பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். அவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதை இதே பிளாக்கில் எனது பழைய கட்டுரைகளில் படித்து மகிழலாம்.

 

 

கடவுளை ஒளி ரூபத்தில் வணங்குவதுதான் இந்துக்களின் மிகப்பெரிய மந்திரமான காயத்ரீ மந்திரம். மூன்று வேதங்களில் உள்ளது.

 

தமிழில் வேதக் கருத்துகளைப் பரப்பியவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆவர். நம்மாழ்வார், எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் ‘நம்ம+ ஆழ்வார்’ என்று புகழப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாடல்களில் தனித்து நிற்கிறது. நாமும் படித்துப் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்:

 

 

முடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?

அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.

–நம்மாழ்வார், திருவாய்மொழி, பாடல் 2897

 

திருமாலைப் பார்த்தார் நம்மாழ்வார்; எங்கும் ஒளிமயம்; ஜோதி ஸ்வரூபம்; இந்த ஒளிக்கு என்ன காரணம்? உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ? உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ? நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே? அதுவும் உன் ஒளி பரவியதால்தானோ?

 

உண்மையில் தங்க ஜரிகை, ரத்தினக் கற்கள், சூரியனைக் கண்டு மலரும் தாமரை ஆகியவற்றுக்கு இயற்கை ஒளி உண்டு. ஆனால் அவை நம் கண்களில் புலப்பட கட்டாயம் வெளிச்சம் வேண்டும். சூரிய ஒளிபடும்போது நாம் அவற்றின் பளபளப்பால் அறிகிறோம். இங்கு அந்த சூரியன்தான் பெருமாள்; இறைவனின் அருள் ஒளி இல்லாவிடில் எதுவும் பிரகாசிக்காது; அதை விளக்க வந்த பாசுரம்தான் இது.

Tamarind Tree under which Nammalvar got inspiration

 

இதோ பாடலின் பொருள்:

 

திருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே! உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் — திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ?

 

உன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ?

 

(தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)

 

உன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ? இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

 

நம்மாழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்; அதன் மற்றொரு பெயர் திருக்குருகூர். இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள்– திருவாய்மொழி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.

 

மதுரகவி ஆழ்வார், இவரை வழிபட்டே பேரருள் பெற்றார்.

‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்பது பெரியோர் வாக்கு. திருவாய் மொழியில் ஆயிரம் பாசுரங்கள் உண்டு

 

இதற்கு ஐந்து உரைகள் இருக்கின்றன:

திருக்குருகை பிரான் பிள்ளை அருளிய ஆறாயிரப்படி,

நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி,

வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் அருளிய பன்னீராயிரப்படி,

பெரியவாச்சான் பிள்ளை அருளிய இருபத்து நாலாயிரப்படி,

வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய முப்பதாறாயிரப்படி.

 

கம்பனும் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரைப் பாடிக் கொண்டாடுகிறார்.

 

சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்

பேராயிரம்திண் பெரும்புயமாயிரம் பெய்துளவத்

தாரார் முடியா யிரங்குருகூர்ச்சடகோபன் சொன்ன

ஆரா அமுதக் கவியாயிரமவ் வரியனுக்கே!

-கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி

திரு மறை என்று போற்றப்படும். திருவாய்மொழியைப் பாராட்டி மணவாள மாமுனிகள் ஒரு அந்தாதி பாடியுள்ளார்.

 

தகவல் தந்து உதவிய நூல்:- ஞானத் தமிழ், ரெ.முத்துக் கணேசன், காரைக்குடி, 1970

TAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி

  1. Nammalvar | Tamil and Vedas

tamilandvedas.com/tag/nammalvar

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known as Nammazvar, … Bharati used it for political freedom as well.

 

–SUBHAM–

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு! (Post No.4244)

Research article written by London Swaminathan

 

Date: 26 September 2017

 

Time uploaded in London-  7-18 am

 

 

Post No. 4244

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

 

(இது பற்றி சின்னாட்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதி, இங்கு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வேத மந்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டதால், இங்கு அவைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் சுருக்கி வரைகிறேன். முழு விவரம் வேண்டுவோர் எனது ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும்; படிக்கவும்.)

 

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம்; அண்மைக்கால சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சியானது இதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கும் முந்தையது என்று காட்டிவிட்டது; அதை நாஸா விண்கலப் புகைப்படமும் உறுதி செய்தது; இதற்கு முன்னரே துருக்கியில் வேதக் கடவுளர் பெயர் பொறித்த க்யூனிபார்ம் களிமண் கல்வெட்டு கிடைத்ததால், வேத மந்திரம் கி.மு.1380 ஆம் அண்டிலேயே துருக்கி-சிரியா சென்று விட்டதை தொல் பொருட் துறை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கார்த்திகை நட்சத்திர ஆராய்ச்சியானது, வேதங்கள் கி.மு 4500 க்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் நிரூபித்தனர்.

 

இவ்வளவு பழமை பொருந்திய ரிக் வேதத்தில், வியாச மஹரிஷியால் கி.மு 3100-க்கு முன் நான்காகப் பிரிக்கப்பட்ட வேதத்தில்,தங்க நகைகள், தங்கக் காசு பற்றி உள்ள விஷயங்கள் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு என்பதையும், வேத கால மக்கள் செல்வச் செழிப்பிலும் நாகரீ கத்திலும் வானத்தைத் தொட்டுவிட்டனர் என்பதையும் காட்டுகிறது.

 

இது மாக்ஸ்முல்லர் வகையறாக்களுக்கும் கால்டுவெல் தொகையறாக்களுக்கும் செமை அடி கொடுக்கும்; ஏனெனில் அவர்கள் “வேத கால மக்கள் நாடோடிகள், மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவுக்குள் புகுந்த நாடோடிகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், பெரும்பாலும் வேதத்தில் சிறுபிள்ளைத்தனமான (mostly childish)  பாடல்கலைளையே காண இயலும்” என்றெல்லாம் உளறிக்கொட்டி கிளறி மூடியிருந்தார்கள்; தாங்கள் வாங்கிய கூலிக் காசுக்கு ஏற்ப தாளம் போட்டார்கள். மாறடித்தார்கள்; ஆனால் வேத கால  இலக்கியத்தில் வரும் தங்கக் காசு, தங்கத்துக்கான சொற்கள், நிஷ்கா என்னும் உலகின் முதல் தங்க நாணயம் ஆகியவற்றைப் படிப்போர் வியந்து மகிழ்வார்கள்; அவர்கள் தட்சிணையா க வாங்கிய தங்க நாணயங்களைப் பார்ப்போருக்கு அடக் கடவுளே இவ்வளவு செழிப்புள்ள காலத்தில் நாமும் வாழ மாட்டோமா என்று சிந்திக்க வைக்கும்.

 

சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை போலப் பொழிந்த பாடல்கள் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் உள்ளன. செங்குட்டுவன் தனது உடல் எடையான 50 கிலோவுக்கு நிகரான தங்கத்தை துலாபாரம் மூலம் மாடல மறையோன் என்ற பிராமணனுக்கு வழங்கிய செய்தி ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகார காவியத்தில் வருகிறது. பராசரன் என்ற பார்ப்பனன், திருத்தங்கலில் வேதம் சொல்லிய ஒரு சிறு பிள்ளையிடம் தனது தங்க நகை மூட்டையைக் கொடுத்துவிட்டுப் போன செய்தியும் சிலம்பில் காணக்கிடக்கிறது. அப்போதாவது, ரோமானிய சாம்ராஜ்யம், கேரளத்துக்குள் தங்க மழை பொழிந்த செய்தி சங்க இலக்கிய நூல்களிலும் ரோமானிய எழுத்தர் நூல்களிலும் உள்ளன. ஆனால் வேத கால மக்களுக்கு எங்கிருந்து தங்கம் கிடைத்தது? அதுவும் வேத கால துதிகளில் இருக்கிறது. நதிப் படுகைகளில் இருந்து அவர்கள் தங்கத்தைச் சலித்து எடுத்து தூய்மைப் படுத்திய செய்தியும் வேதத்தில் உள்ளது.

பிற்காலத்தில் தர்மபுத்திரன், அர்ஜுனன் ஆகியோர் இமய மலையிலுள்ள உத்தரகுருவில் தங்கம் எடுத்தசெய்தி உள்ளது. மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் புகழ்கின்றனர். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரடோட்டஸோவெனில் இந்தியாவில் இராட்சத எறும்புகள் பூமிக்கடியில் இருந்து தங்கத்தைக் கொண்டுவந்த்த அதிசயச் செய்தியை எழுதி வைத்துள்ளார். இந்தியா= தங்கம்!!!

 

தங்கத்துக்கும், தங்க நகைகளுக்கும் வேதத்தில் உள்ள சொற்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும்:

ஜாத ரூபம், ஹரிதம், ஹிரண்யம், ஸ்வர்ணம், நிஷ்கா, சந்த்ர — இப்படி பல பெயர்கள்!

மேலும் அண்மைக்காலம் வரை நம்மவர்கள் பயன்படுத்திய குந்துமணி எடை (கிருஷ்ணல) வேத கால நூல்களில் உள்ளது. ஆகவே தங்கத்துக்கு எடை போடும் வழக்கமும் அப்போது இருந்ததால் நல்ல தங்கநகைக் கடைகள் இருந்திருக்க வேண்டும்

 

ரஜத என்ற வெள்ளி பற்றியும் வெள்ளிக் காசுகள் பற்றியும் வேதங்கள் பாடுகின்றன.

உலகிலேயே மிகப் பணக்கார நாடு இந்தியாதான்! இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து ஆறு கட்டுரைகளை இதே பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது வேதத்தில் இன்னும் ஒரு வியப்பான செய்தியைக் கண்டேன்.

 

நான் பழங்கால நாணயங்களை ஆராய்பவன். என்னிடமுள்ள ஆங்கில நூல்கள் அனைத்திலும் முதல் முதலில் உலகில் நாணயங்களை வெளியிட்டவர்கள் கிரேக்கர்கள் என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதலே இவை கிடைகின்றன என்றும் எழுதியுள்ளனர். அந்த நாணயங்களும் மியூசியங்களில் உள்ளன.

 

நிஷ்கா என்னும் தங்க நாணயம்!

 

ஆனால் உலகிலேயே முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் இந்துக்கள் என்ற செய்தி வேதத்தில் உள்ளது (ஆங்கிலக் கட்டுரையில் பாடல் எண்களைக் கொடுத்துள்ளேன்). அந்த நாணயத்தின் பெயர் நிஷ்கா. இதற்கு இரு பொருள் உண்டு: 1. நாணயம்/ காசு, 2. கழுத்தில் அணியும் ஆபரணம்.

 

இது உண்மையே; இதில் முரண்பாடு எதுவும் இல்லை; ஆதிகாலத்தில் காசு மலை செய்வது எளிதாக இருந்தது. மேலும் இது அழகானது. இன்றும் கோவில்களிலும் இந்து மாதர்களின் கழுத்திலும் காசு மாலை ஜ்வலிப்பதைக் காணாலாம். ஆக நிஷ்கா என்பது இரு பொருளிலும் வழங்கி இருக்கலாம்.

 

பிற்கால இலக்கியங்களில் நிஷ்கா என்பது தங்க காசு என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் ஒரு பொருளை கரன்ஸி (நாணயம்) என்று அறிய அதனுடன் எண் அளவு இருக்க வேண்டும். அப்படி அஷ்ட புத் என்ற எண்ணுடனும், சதமானம் (100) என்ற எண்ணுடனும் காசுகள் கையாளபட்டுள்ளன. இன்றும் கூட கல்யாணங்களில் பரிசுகளை ஓதிவிடும் போது பிரமாணர்கள் சதமானம் பவது என்ற மந்திரத்தைச் சொல்லி லட்சம் கட்டி வராஹன் என்று மிகைப்படுத்தி பரிசை அளிப்பர் ( மாமா கொடுத்தது, அத்தை கொடுத்தது என்பதால்)

 

ஆக உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை வெளியிட்டது வேத கால இந்துக்களே. ஆனால் பெரிய துரதிருஷ்டம்! சிந்து வெளியிலோ, வேத கால புதை பொருள்களிலோ இப்படி ஒரு நாணயம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு இந்துப் பெண்களின் குணமே காரணம். அடிக்கடி தங்கத்தையும் தங்க நகைகளையும் உருக்கி புதுப் புது டிசைன்களில் நகை செய்து கழுத்தில், காதில், காலில் பூட்டி பெருமை அடித்துக்கொள்வர். குப்தர் காலத்தில் லட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் அடித்ததால் இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் (லண்டன்) அவைகளைக் காண முடிகிறது. நம் ஊரில் கிடைத்தன வெல்லாம், பெண்களின் கழுத்தில் தொங்குகின்றன. ஒரு வேளை பத்மநாப சுவாமி கோவில் போன்ற இடங்களில் பழங்கால நாணயங்கள் இன்னும் இருக்கலாம்.

ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட பெருமை நம்மையே சாரும்!

 

 

தட்சிணையில் தங்க ரதம்!!!

 

இதைவிட மிக மிக வியப்பான விஷயம் பிராமணர்கள் பெற்ற தங்க தட்சிணையாகும்!

 

ஆறு வகையான தங்க தட்சிணைகளைப் பட்டியல் இடுகின்றனர்.

யாக யக்ஞங்களில் யாக குண்டங்களை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்கள் போல தங்க செங்கற்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்ட விஷயமும் உளது.

 

தங்க ஏர் (சீதா) கொண்டு மன்னர்கள் ஆண்டுதோறும் நடத்தும் சடங்கு பற்றியும் உள்ளது இப்படி ஜனகன் உழச்சென்றபோது கிடைத்தவள்தான் சீதாதேவி (ஏர்ப் பெண்)!

 

சேதி என்னும் மன்னனின் மகனான காசு அளித்த ஆயிரக்கணக்கான பசுமாடுகள் குதிரைகள் ஒட்டககங்கள் பற்றிய செய்தி ரிக் வேதத்தில் எட்டாம் மண்டலத்தில் இருக்கிறது.

 

கனிதன் என்பவனின் மகனான ப்ருதுஸ்ரவஸ் தங்க ரதமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகளும் கொடுத்ததாக வாச அசவ்ய என்ற ரிஷி பாடுகிறார்.

 

சங்கத்தமிழ் இலக்கியத்தில் பரிசு பெற்ற புலவர்கள் மற்றவர்களை ஆற்றுபடுத்தும்போது கூறும் விஷயங்கள் போல ஒவ்வொரு பிராமணரும் பெற்ற பரிசுகள் (தட்சிணையாக) தான துதிகள் என்ற துதிகளில் வருகிறது. இதில் நம்புவதற்கரிய மிகப் பெரிய எண்ணிக்கையில் பரிசுகள் உள்ளன. வேத கால மக்களின் செல்வச் செழிப்பு அளவிடற்கரியது.

 

 

 

பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பெயர்களும், தங்க நகைகளுடன் அவர்கள் பவனி வந்த செய்தியும் வேதங்களில் உள்ளன.!

 

தங்கமோ தங்கம்! அவ்வளவும் சொக்கத் தங்கம்!

 

TAGS:- முதல் தங்கக் காசு, வேதத்தில், தங்க நகை, தங்கத் தேர்

–சுபம்–

 

கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா? ( Post No.4243)

Written by S.NAGARAJAN

 

 

Date: 26 September 2017

 

Time uploaded in London- 5-16 am

 

Post No. 4243

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

 

13-9-20̀17 அன்று வெளியான கட்டுரை எண் 4207இல் கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடலை இயற்றிய நமச்சிவாயப் புலவரைப் பற்றிப் பார்த்தோம். அவரது இன்னொரு பாடல்!

கோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா?

 

.நாகராஜன்

 

கண்ணழகை வியந்து சொல்லழகு ததும்பிய நமச்சிவாயப் புலவரின் பாடலைப் பார்த்தோம்.

 

அவரது இன்னொரு பாடல்.

 

ஒரு நாள் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்றார் புலவர்.

அங்கே அவர் பாண்டியன் கோ துரத்தும் வேலையைச் செய்திருப்பதைக் கண்டார்

 

கோ என்ற வார்த்தை அரசர்களையும் குறிக்கும்; பசுக்களையும் குறிக்கும்.

 

மன்னன் பகை அரசரையும், பசுக்களையும் துரத்திக் கொண்டிருப்பதைக் கண்ட புலவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:

 

கோலெடுத்துக் கோத்துரத்துங் கோப்பாண்டி மன்னன் வடி

வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே! – சால்படுத்த

பூபால னானாலும் போமோ புராணத்திற்

கோபால னான குணம்.

 

 

போட்டார் ஒரு போடு.

புராண காலத்தில் கிருஷணனாக இருந்தவன் நீ; உன் பிறவிக் குணம் போகுமா என்று.

கவிதையின் பொருளைப் பார்ப்போம்.

கோல் எடுத்து – செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு

கோ துரத்தும் – பகை அரசர்களை  ஓட்டுகின்ற

கோப் பாண்டி  மன்னன் – அழகிய பாண்டிய ராஜன்

வடிவேல் எடுத்து – வடிவேலைத் தாங்கி

கோ துரத்தல் விட்டிலனே – பசுக்களைத் துரத்தும் தொழிலை விடவில்லையே

சால்பு அடுத்த – பெருமை பொருந்திய

பூபாலன் ஆனாலும்- பூமியை ஆளும் பூபதி என்றாலும் கூட

புராணத்தில் – முன்பொரு காலத்தில்

கோபாலன் ஆன குணம் – கோபாலன் என்ற கிருஷ்ணராக இருந்த குணம்

போமோ – நீங்குமோ?!

 

 

 

கோபாலன் -பசுக்களைக் காப்பவன் ; கிருஷ்ண பகவான்

 

பாண்டிய ராஜனை கிருஷ்ணனுக்கு நிகர் என்று கூறிய கவிஞருக்குப் பரிசு கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

***

ரிக் வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை! (Post No.4237)

Written by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  7-12 am

 

Post No. 4237

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகிலேயே பழமையான சமய நூல் ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு ரிக் வேதம் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சரஸ்வதி நதி  கி.மு 2000க்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நா ஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000-க்கு முன் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமின்றி துருக்கியில் கிடைத்த களிமண் க்யூனிபார்ம் கல்வெட்டில் ரிக்வேதத்தில் தெய்வங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் இருக்கிறதோ அதே வரிசைக் கிரமத்தில் இருப்பதை கி.மு.1400ல்  கண்டுபிடித்தவுடன் ரிக்வேதம் கி.மு.1400லேயே துருக்கிவரை சென்றதும் உறுதியாகிவிட்டது.

 

சரஸ்வதி நதி பற்றித் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேலான இடங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆக ரிக் வேதத்தின் எந்தப் பகுதியையும் எவரும் .கி.மு2000க்குக் குறைத்து மதிப்பிட முடியாது. அதாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு முந்தையது வேத கால நாகரீகம் (இதற்கு ஆட்சேபம் எழுப்பியோர் குதிரை, இரும்பு பற்றிக் கூறியவற்றுக்கு எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பதில்கள் உள்ளன. கண்டு மகிழ்க).

 

இது பழைய மாக்ஸ்முல்லர் கொள்கையையும், மார்கஸீயவா(ந்)திகளின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

 

 

மாபெரும் வெடிப்பு BIG BANG!

 

இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்பதற்கு அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள்– 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது முதல், நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாகின. அந்தப் பிரபஞ்சம் இன்னும் பலூன் ஊதுவது போல பெருகிப் பரந்து விரிந்து கொண்டே போகிறது. முடிவு என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த மாபெரும் வெடிப்பு (BIG BANG) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியாது – என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

 

இதில் ஒரு பெரிய விந்தை என்னவென்றால் ஒரு பிரம்மாவின் யுகக்கணக்கில் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரபஞ்சம் தோன்றியதாக இந்து சமய நூல்களும் பகர்கின்றன. அது மட்டுமின்றி காலம் என்பது வட்ட வடிவில் (Cyclical, not linear) பயணம் செய்யும் ; ஆகையால் இது மீண்டும் சுருங்கி, மீண்டும் விரிவடையும் என்றும் இந்து சமய நூல்கள் விரித்துரைக்கின்றன. இனி நாசதீய சூக்தத்தில் உள்ள  அதிசய விஷயத்தைக் காண்போம்.

 

இப்பேற்பட்ட ரிக் வேதத்தில் கடைசி பாடலில் உலக சமாதானம் , உலக மக்கள் நலம் பற்றிய பாடல் இருப்பது – 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னரே — வேத கால ரிஷிகள் ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடி இருப்பது உலகையே வியக்க வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னரே இப்படி ஒரு சிந்தனை எழுந்தது வேத கால நாகரீகம் ஒன்றே முதன்மையானது என்பதைக் காட்டிவிட்டது.

 

இப்படி பசு மாடு, குதிரை, டெஸிமல் சிஸ்டம் , உலக மக்கள் நலம் என்பதில் எல்லாம் முன்னொட்டியில் நிற்கும் விஞ்ஞானத்திலும் முன்னனியில் இருப்பது  எல்லோர் மூக்கிலும் விரலை வைக்கவைத்து விட்டது.

 

இதைப்படித்த வெளிநாட்டு “அறிஞர்கள்” வேதம் பற்றிய எல்லாப் புத்தகத்திலும் இதைச் சேர்த்துவெளியிட்டனர். நூற்றுக்கும் மேலான “அறிஞர்கள்” இது பற்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கில, லத்தீன் மொழிகளில் உரை- வியாக்கியானம்- கருத்துக்களை மொழிந்துள்ளனர்.

 

இந்த துதியின் பெயர் நாஸதீஅய சூக்தம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-129)

 

சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சூக்தம் என்னும் துதி.

 

ஒரு விஞ்ஞானியோ நாஸ்தீக வாதியோ, மாபெரும் வெடிப்புக்கு (Before The Big Bang) முன்னர் என்ன இருந்தது? அதை யார் தோற்றுவித்தார்? அவர் எப்படி வந்தார் அல்லது அது எப்படி வந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டே போனால் விடையே கிடைக்காது. ஒரு நேரத்தில் இப்படி யோசிப்பதை நிறுத்தாவிடில் வேட்டி சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் பிடித்து அலைவார்.

 

ஆனால் ரிக் வேத ரிஷியோ மாபெரும் வெடிப்பை வர்ணித்துவிட்டு இது கடவுளின் இச்சையால் ஏற்பட்டது என்று மொழிகிறார். விஞ்ஞானிகள் காரணமே தெரியாது என்று சொன்ன இடத்தில் கடவுள் என்பவரையும் அவரது விருப்பத்தையும் பகர்ந்தவுடன் விடை கிடைத்துவிடுகிறது.

 

அதெல்லாம் சரிதான், ஐயா? 7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேத கால இந்துவுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வ, அதிசய, அற்புத சிந்தனை பிறந்தது? அப்படியானால் அவர்கள் நாகரீகத்தின் சிகரத்தில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும்? மார்கஸீய வா(ந்)திகளும் வெள்ளைத் தோல் :அறிஞர்களும்” செப்பியது தவறு அன்றோ! கைபர் கணவாய் வழியாக மாடு மேய்த்து வந்த நாகரீகமற்ற நாடோடிகள் ஆரியர்கள் என்று கற்பனையை எழுதிய கயவர்களைக் கண்டு நாம் இன்று கைகொட்டிச் சிரிக்கலாமே!

 

இதோ அற்புதமான நாசதீய சூக்தம்:–

 

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதுனும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

 

2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

 

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

 

5.அந்தக் கயிறு– இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

 

யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

 

  1. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த உயர்ந்த சுவர்கத்துக்கே அது தெரியும்; தெரியாமலும் இருக்கலாம்.

 

இதை இந்துக்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்ற கருத்தில் எடுத்துக் கொள்ளுவர். நாஸ்தீகவாதிகள் இங்கு சந்தேக த்வனி இருப்பதாவும் எடுத்துக் கொள்ளுவர். இவ்விருவர் கோணத்தில் பார்த்தாலும் இப்படி ஒரு ரிஷி முனிவருக்கு ஒரு சிந்தனை 6000, 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதும், அதை வாய்மொழியாக 7000 ஆண்டுகளாக இந்துக்கள் பாடிப் பாதுகாத்து வைத்திருப்பதும் உலக மஹா அதிசயம். ஏனெனில் வேதங்க ளை எழுதக்கூடாது. வாய்மொழியாக மட்டுமே மூன்று ஜாதியினர் கற்காலாம். சங்கத் தமிழ் நூல்கள் வேதங்களை எழுதாக் கிளவி, எழுதா மறை, எழுதாக் கற்பு என்று போற்றுகின்றன.

 

மாபெரும் எடிப்பு என்பதை இறைவனின் தவ வலிமையில் பிறந்த இச்சை- காமம்- விருப்பம் -ஆசை என்று அற்புதமாக வருணிக்கிறார் வேத காலப் புலவர். கவிஞருக்கே உரித்தான பாணியில் சந்தேகக் கேள்விகளை எழுப்பி—அதாவது தடை எழுப்பி விடை காண்கிறார்.

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் இருந்தால்தான் இப்படி ஒரு சிந்தனை பிற க்கும் அல்லது பாபிலோனியாவில் உள்ளது போல ஒரு லட்சம் கல்வெட்டுகளிலும் உப்பு, புளி, மிளகாய், எண்ணை வாங்கிய பழங்கால கணக்குகளை  எழுதி இருப்பார்கள். அல்லது ஜில்காமேஷ் “காவியம்” போல ஏதாவது பிதற்றி இருப்பர்!

 

சில வெளிநாட்டு அரை வேக்காடுகள் – ‘கடவுளரே படைப்புக்குப் பின்னர் தோன்றியதாக’ வரும் வரியை எடுத்துக் கொண்டு – படைப்புக்குக் கடவுள் காரணம் அல்ல – என்று பகர்ந்து தன் அறியாமையை வெளிப்படுத்துவர். ஏனெனில் இதே துதியில் “அந்த ஒன்று” உயிர்த்துடிப்புடன் இருந்தது; அது தவத்தினால் ( தவம்= வெப்பம்), இச்சையினால் இதைத் தோற்றுவித்தது — என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கவிகளுக்கே உரித்தான பாணியில் எழுதும் போது இப்படிக் கேள்விகளை எழுப்பி – உளதோ இலதோ — என்று புகல்வர். மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு இது இன்னும் நன்றாக விளங்கும்.

 

உருவம், அருவம் அருஉருவம் எல்லாம் உடையவன் அவன்!

 

TAGS: -மாபெரும் வெடிப்பு, நாசதீய சூக்தம், வேதத்தில் விஞ்ஞானம்

–சுபம்–