சொன்னால் நம்ப மாட்டீர்கள்! (Post No.3879)

Written by S NAGARAJAN

 

Date: 5 May 2017

 

Time uploaded in London:-  5-37 am

 

 

Post No.3879

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 29

 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் : பாரதி மணி மண்டப வரலாற்றில் சுவையான சம்பவங்கள்!

 

ச.நாகராஜன்

 

    தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலையின் நினவலைகளை அவர் மிக மிகச் சுவையாகக் கூறும் நூல் : சொன்னால் நம்ப மாட்டீர்கள். 40 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை எடுத்தால் முடிக்க வேண்டியது தான்! முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது!

 

  ஏராளமான சம காலத்திய சம்பவங்களை அவர் சுவைபடக் கூறும் போது பாரதி பற்றிய செய்திகள் ஆங்காங்கே விரவி வருகின்றன. இவற்றில் பாரதி பக்தர்களைப் பற்றியும், பாரதியைப் பரப்பியவர்களைப் பற்றியும் மக்கள் உலக மகாகவியை எப்படி ஏற்றுக் கொண்டனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

 

 

     குறிப்பாக பாரதிக்கு மணி மண்டபம் அமைக்க முயன்ற கல்கியும் சின்ன அண்ணாமலையும் நேசத்தாலும் பாசத்தாலும் இணைந்தவர்கள். இதை விளக்க ஒரே ஒரு சம்பவம்.

திடீரென்று ஒரு நாள் அண்ணாமலையை அழைத்த கல்கி அவரிடம் போர்டு ஆங்கிலியா காரின் சாவியைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்கிறார். காரை ஓட்டிப் பார்த்த அண்ணாமலை அது நன்றாக இருப்பதாகக் கூறுகிறார். சாவியை அவரிடமே தந்த கல்கி இது உங்களுக்குத் தான் என்கிறார்.

 

 

எத்தனை நாள் தான் தினமும் கல்கி வீட்டிற்கு அவர் பஸ்ஸில் போவதாம்! என்ன ஒரு அபாரமான அன்பு, நட்பு.

   கல்கியினால் சொற்பொழிவாளனாக மாறிய சின்ன அண்ணாமலை தமிழகத்தையே தன் நகைச்சுவை பேச்சினால் சிரிக்க வைத்தார்.

 

    அவர் பாரதி நிதி பற்றி குறிப்பிடும் இடத்தை அவர் சொற்களிலேயே பார்ப்போம்: அத்தியாயத் தலைப்பு : பாரதி நிதி

 

 

      “எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். இலக்கிய ரசிகர்கள் நிரம்பிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டோம். ரசிகர்கள் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

       கூட்டத்திலிருந்த ஒரு ரசிகர் எழுந்து கல்கி அவர்களே! தாங்கள் எழுதும் ‘சிவகாமியின் சபதம்’ நீண்டு கொண்டே போகிறதே?” என்று சொல்லிக் கொண்டே வரும் போதே நான் இடைமறித்து, “ஆமாம்! நீண்டு கொண்டு தான் போகிறது.

      ஐயா, குரங்கிற்குத் தான் வால் நீண்டு கொண்டு போகக் கூடாது. மயிலுக்குத் தோகை நீண்டால் என்ன?” என்று ஒரு போடு போட்டேன்.

 

      அதைக் கேட்டவுடனே மேற்படி ரசிகர், “தங்கள் பதில் என்னைப் பரவசமடையச் செய்து விட்டது. நான் பாரதி நிதிக்குப் பத்து ரூபாய் தான் கொடுக்கலாம் என்று வந்தேன். இப்போது இதோ நூறு ரூபாய் கொடுக்கிறேன்” என்று கூறு ரூ 100 பாரதி நிதிக்குக் கொடுத்தார்”.

 

கல்கி பாரதி மணி  மண்டபம் கட்ட எப்படியெல்லாம் உழைத்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இன்னொரு சம்பவத்தை சின்ன அண்ணாமலை, ‘நாடோடியாக நடித்தேன்’ என்ற அத்தியாயத்தில் தருகிறார்.

 

 

பெங்களூரில் பாரதி மணி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் நாடோடி அவர்களைக் க்லந்து கொண்டு நிதியைப் பெற்று வர கல்கி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. சின்ன அண்ணாமலையிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார் கல்கி.

நாடோடி என்று ரிஸர்வ் செய்யப்பட்ட சீட்டிலேயே பயணம் செய்தார் சின்ன அண்ணாமலை. பெங்களூரிலும் ரயில் நிலையத்தில் அவரை ‘நாடோடியாகவே’ வரவேற்றார்கள்.

 

 

சின்ன அண்ணாமலை தான் யார் என்பதைச் சொல்லவில்லை.

கூட்டத்தில் அவரை நாடோடியாகவே நினைத்து அவரைப் பற்றி அனைவரும் பேசினர். 2000 ரூபாய் நிதி  கிடைத்தது.

கூட்டத்தில் நாடோடியாகப் பேசிய சின்ன அண்ணாமலை இறுதியில் “நான் ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேன். அதைக் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஆனால் அதை நான் இலவசமாகச் சொல்ல விரும்பவில்லை. ஆளுக்கு நான்கணா பாரதி மணி மண்டப நிதியாகத் தருவதாக ஒப்புக் கொண்டால் சொல்கிறேன்” என்று கூறி நிறுத்தினார்.

“தருகிறோம். ஆனால் நீங்கள் சொல்லப்போகும் உண்மை எங்க்ளுக்குத் தெரிந்ததாக இருந்தால் என்ன செய்வது” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

 

 

“அது தெரிந்திருக்கவே முடியாது” என்றார் சின்ன அண்ணாமலை.

 

“நீங்கள் நாடோடி அல்ல. சின்ன அண்ணாமலை என்பது எங்களுக்குத் தெரியும் என்றார் அவர்.

சின்ன அண்ணாமலை அசந்து போனார்.

கல்கி நாடோடிக்குப் பதிலாக் சின்ன அண்ணாமலை வருவதாகத் தந்தி ஒன்று கொடுத்திருந்தார்.

சின்ன அண்ணாம்லை நாடோடியாக இருப்பதை விரும்பியது போலவே கூட்டத்தினரும் அவரை நாடோடியாக ஏற்றுக் கொண்டனர்.

 

 

 

இதன் விளைவு: கூட்டத்திற்கு வந்தவர்கள் தனித் தனியாகக் கொடுத்த தொகை ரூ 650/

 

அடடா, எப்படிப்பட்ட சம்பவங்களின் மூலம் பாரதி மணி மண்டபம்   எழுந்திருக்கிறது!

மணி மண்டபத்திற்கு பாரதி அன்பர்கள் தந்த ஒவ்வொரு காசும் பொற்காசு தானே!

 

சங்கப் பலகை என்ற அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாரதி மணி மண்டப நிதி சேர்ப்பு சம்பவம் இருக்கிறது.

தேச பக்தர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளும் நூலில் அடக்கம்.

 

 

பாரதி அன்பர்கள் பாரதி மணி மண்டப வரலாற்றை அறிவது அவசியம்.

 

அதற்கு இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

குமரன் பதிப்பகம், சென்னை டிசம்பர் 2004இல் வெளியிட்ட இந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 242.

***

 

பாரதியும் ஏ.வி.எம்-மும் – சில உண்மைகள்! (POST No.3851)

Written by S NAGARAJAN

 

Date:26 April 2017

 

Time uploaded in London:-  5-52 am

 

 

Post No.3851

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 28

 

பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள்!

 

ச.நாகராஜன்

 

    பாரதியும் ஏவிஎம்மும் என்ற இந்த மின்னுலை எழுதியவர் ஹரி கிருஷ்ணன். 2000ஆம் வருட இறுதியில் அகத்தியர் குழுவில் எழுதி பின்னர் சிஃபி.காமால் தொடராக இது வெளியிடப்பட்டிருக்கிறது.

 

 

பாரதியின் பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கப்பட வேண்டும் என்று பாரதி பக்தர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். அதைப் பற்றிய உண்மை வரலாற்றை அலசி ஆராய்ந்து உண்மைகளைத் தரும் நூல் இது.

முக்கியமாக பாரதியாரின் நூல்களை ஏவி. மெய்யப்பச் செட்டியார் காப்புரிமை பெற்று வைத்திருந்ததையும் அவரிடமிருந்து அது தமிழக அரசால் பெறப்பட்ட விதத்தையும் அதில் அடங்கி இருக்கும் “உண்மைகளையும்” தருவது இந்த நூலாசிரியரின் நோக்கம்.

 

 

மஹாகவி மறைந்த 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு திலகர் ஸ்வராஜ்ய நிதியிலிருந்து ஆயிரம் ரூபாயும் தமிழ் மக்கள் உதவிய நிதி ரூபாய் பன்னிரெண்டும், ரங்கூனிலிருந்து வந்த நிதியாதாரமும் சேர்ந்து ஒரு தொகை கிடைத்தது. பாரதி ஆசிரமம் என்ற ஒரு அமைப்பை மஹாகவியின் மனைவியார் செல்லம்மா பார்தியும், பாரதியின்  மைத்துனர் ரா.அப்பாதுரையும் சேர்ந்து ஏற்படுத்தினர்.

 

 

1924இல் பாரதியாரின் இளைய மகள் சகுந்த்லாவுக்குத் திருமணம் நடந்த போது பாரதியாரின் பாடல்கள் அடகு வைக்கப்பட்டு இரண்டாயிரம் ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. பாடல்கள் அதிக விற்பனையை எட்டாத நிலை.

பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாவும் பாரதியாரின் தம்பி சி.விசுவநாதனும் இயன்ற அளவு பாரதியாரின் பாடல்களைப் பரப்ப முயன்றனர்.

பாரதியின் பஜனை சமாஜம் என்ற அமைப்பை மதுரையில் சீனிவாச வரதன் ஆரம்பித்து வீதி தோறும் பாரதி பஜனைகள் செய்தார்.

 

 

பாரதியாரின் பாடல்களை தமது நாடகங்களில் எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர் பாடிப் பரப்பினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி அரும் பாடு பட்டு பாரதியாரைப் பரப்ப பெரு முயற்சி எடுத்தார்.

1931ஆம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

 

ஆனால் இந்த பாடல்களை ஏவி எம் வாங்கியது பற்றி எதிரொலி விசுவநாதன் என்னும் பாரதி பக்தர் வேறு விதமாகக் கூறுகிறார். பாரதியாரின் தம்பி சி.விசுவநாதன் 1941க்கும் 1944க்கும் இடையில் ஒரு மார்வாடி கடையில் பாரதியாரின் பாடல்களைப் பாடும் உரிமையை விற்று விட்டார். அவரிடமிருந்து  ஏவிஎம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

 

 

இத எதிரொலி விசுவநாதனின் தகவல்.

1944ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது. அதில் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் தனி நபரிடமிருந்து பாரதி பாடல்களை “மீட்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.

 

அவ்வை டி.கே சண்முகம், எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்குத் தங்கள் ஆதரவை நல்கினர்.

 

 

 1947இல் பாரதியின்  மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதையொட்டி வெளியிடப்பட்ட மலரிலும் மற்றும் நாளிதழ்களின் சிறப்பு மலர்களிலும் கூட பாரதியாரின் பாடல்களை வெளியிட ஏவிஎம்மின் அனுமதி தேவைப்படவே அவரது அனுமதி பெறப்பட்டு வெளியிடப்பட்டது.

11-3-1948இல் பாரதி விடுதலைக் கழகம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வ.ரா. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாரண.துரைக்கண்ணன், அ.சீனிவாசராகவன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் திருலோக சீதாராம் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோர் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

4.8.1934 அன்று ஜோஷிங்லால் மேத்தா “வாங்கிய” பாரதியாரின் பாடல்களை ஏவிஏம் 10-9-1946 அன்று “வாங்கினார்.” அவர் மூன்றண்டுகள் பாரதியாரை “தம்மிடம் வைத்திருந்தார்”.

இந்த நிலையில் வ.ராவின் மணி விழா நடைபெற இருந்தது. அதற்கு நிதியுதவி செய்யும் முக்கியமானவர்களில் கல்கி ஒருவர். அவர் வ.ராவிடம் மெய்யப்ப செட்டியாரை எதிர்த்து பாரதி விடுதலைக் கழகத்தில் தலைவர் பதவி வகிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ள தலைவர் பதவியை நாரண.துரைக்கண்ணன் ஏற்றார்.

 

 

இதற்கிடையில் ஔவை சண்முகம் சகோதரர்கள் பில்ஹணன் என்ற தமிழ் படத்தை 1948ஆம் ஆண்டு எடுக்க அந்தப் படத்தில் பில்ஹணன் நாடகத்தில் வரும் பாரதியாரின் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருந்தனர். தன் அனுமதியின்றி திரைப்படத்தில் அந்தப் பாடல்களைப் பயன்படுத்தியது தவறு என்று பாரதியாரின் “உரிமையாளரான” மெய்யப்பர் ஒரு அறிக்கையை விடுத்தார்.

 

 

இதை அடுத்து மண்டபம் கட்டி மகிழ்ந்த தமிழ் மக்களுக்கு பாரதியை விடுவிக்க வேண்டாமா என்று டி.கே.எஸ். சகோதரர்கள் தமிழ் மக்களின் முன் ஒரு வேண்டுகோளை வைத்தனர். இதனால் வெகுண்ட மெய்யப்பர் அவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்தார்.

முன்பே பாரதியாரின் பாடல்களை வெளியிட்ட பரலி சு.நெல்லையப்பர் வழக்கில் சாட்சி சொல்ல முன் வந்தார். பாரதியாரின் கைப்பட எழுதப்பட்ட கடிதங்களை நெல்லையப்பர் நீதிமன்றம் முன் வைத்து பாரதியார் தமிழர்களின் சொத்து என்றார்.

 

 

ஏவிஎம்மின் வழக்கு நீதி மன்றத்தில் தோற்றது.

பாரதியார் ‘விடுதலை’யானார்.

 

அப்போது மத்ராஸ் பிராந்தியத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ரெட்டியாரை பாரதி விடுதலைக் கழகத்தார் சந்தித்து பாரதியின் பாடல்களை நாட்டுடமை ஆக்க வேண்டுமென்று வேண்டினர்.

 

அவரது குடும்பத்தினரிடமிருந்து இதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும் என்றார் முதல்வர்.

 

உடனடியாக ஐவர் அடங்கிய குழு பாரதியாரின் மனைவியார் செல்லம்மா பாரதியைச் சந்தித்தது. அவர் மனமுவந்து அற்புதமான ஒரு கடிதத்தை எழுதி ஒப்புதலை அளித்தார்.

பின்னர் ஒரு நாள் வெரி அர்ஜெண்ட் என்று இரவு ஏழு மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் மெஸஞ்சர் மூலமாக உடனடியாகத் தன்னைச் சந்திக்க  மெய்யப்பருக்கு அழைப்பு விடுத்தார் ஓமந்தூர் ரெட்டியார்.

 

 

எட்டு மணிக்கு அவரைச் சந்தித்த ஏவிஎம் இந்தக் கணமே அரசுக்கு உரிமையை மாற்றி வழங்கி விடுகிறேன் என்று கூற, பாரதியார் பாடல்கள் அரசின் வசம் வந்தன.

 

நாரண துரைக்கண்ணனின் குழந்தை டிப்தீரியாவில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த போது அதையும் பொருட்படுத்தாமல் நாரண துரைக்கண்ணன் பாரதி பணிக்காக ஓடோடிச் சென்றார். அவரது குழந்தை இறந்து விட்டது.

 

     பல பேரின் உழைப்பும் தியாகமும் பாரதியாரின் மீது கொண்ட பக்தியும் அதற்கு அடிப்படையில் தமிழ் பக்தியும் தேச பக்தியும் இருந்ததால் பாரதியார் நிஜமாகவே தமிழ் மக்களுக்குச் சொந்தமானார்.

 

 

   மேலே கண்ட விவரங்களை வரிசையாக அழகுற ஹரி கிருஷ்ணன் தெரிவிக்கிறா இந்த நூலில்.

   பாரதி பக்தர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.

 

    ஆனால் நூல் முழுவதும் கொப்பளிக்கும் கோபமும் எரிச்சலும் மெய்யப்பரின் மீதான காரசாரமான வார்த்தைகளும் நூலின் நல்ல ஆய்வு நோக்கத்தைச் சற்று தடம் பிறழச் செய்கிறது.

 

 

பாரதியாரின் பாடல்களை வாங்கி மெய்யப்பர் பொருள் ஈட்டினார் என்பது நூலாசிரியரின் உள்ளார்ந்த மனதிலிருந்து எழும் ஆதங்கம்.

 

 

பாரதியாரின் வரலாற்று ஆசிரியர்கள் மெய்யப்பரை காப்பாற்றி, “வரலாற்றின் உண்மையை மறைத்தும் திரித்தும் எழுதுவது எத்தனை வெட்கக்கேடு என்று ஹரி கிருஷ்ணன் தனது வேதனையைக் கொட்டித் தீர்க்கிறார்.

 

 

கோபம், எரிச்சல், ஏமாற்றம், வேதனை ஆகியவற்றைச் சற்றுத் தூரத் தள்ளி வைத்து விட்டு, விடப்பட்டிருக்கும் சில உண்மைகளையும் ஆவணங்களையும் சேர்த்து இன்னும் நல்ல விதமாக இன்னொரு பெரிய நூலை ஹரி கிருஷ்ணன் எழுதினால் அது பாரதி இயலுக்கு உகந்த ஒரு சிறப்பான நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தமிழுக்கும் அது அணி சேர்க்கும்.

 

 

ஹரி கிருஷ்ணனுக்கு எமது பாராட்டுகள்.

இந்த நூலை இணைய தளத்தில் கீழ்க்கண்ட தொடுப்பில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்;

 

http://www.freetamilbooks.com/ebooks/bharati-and-avm

 

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! (Post No.3824)

Written by London swaminathan

 

Date: 16 APRIL 2017

 

Time uploaded in London:- 20-12

 

Post No. 3824

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்

–வாலி வதைப்படலம், கம்ப ராமாயணம்

கம்பன் சொல்கிறான்:-

எந்தக் குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும் இழிவும் அவரவர் செய்த செயல்களாலேயே வரும். இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) கூறினான்

xxx

 

வள்ளுவர் சொன்னதும் அதுவே

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

 

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

xxx

கிருஷ்ணன் சொன்னதும் அதுவே

 

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரம வ்யயம்

பகவத் கீதை 4-13

 

பொருள்:-

என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன. செய்யும் தொழில்கள் குணங்களுக்கு ஏற்ப நடக்கின்றன. இதை உருவாக்கியபோதும் என்னை மாறுபாடில்லாதவனாக அறிவாயாக.

xxx

 

அவ்வையார் சொன்னதும் அதுவே

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

எவர் ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவுகிறாரோ அவர் பெரியோர்; கொடாதோர் கீழோர் என்று ‘நல்வழி’யில் அவ்வையாரும் சொல்கிறார்.

xxx

வேத கால ரிஷி சொன்னதும் அதுவே

நாம் எல்லோரும் தாயின் கருவிலேயே சமத்துவம் கண்டோம்; இப்பொழுது சகோதரத்துவத்தை நிச்சயமாக உருவாக்குவோம்.– ரிக் வேதம் 8-83-8

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்த பேதமும் இல்லை.

 

ஜன்மனா ஜாயதே சூத்ரஹ

சம்ஸ்கராத் த்விஜ உச்யதே

வேத படனாத் பவேத் விப்ரஹ

பிரம்ம ஜானதி இதி பிராஹ்மணஹ

-சம்ஸ்கிருத ஸ்லோகம்

பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்கள்;

உபதேசம் பெற்று பூணூல் போடுவதால் இருபிறப்பாளன்;

வேத அத்யயனத்தால் அறிஞன்;

பிரம்மனை அறிவதால் பிராம்மணன் ஆகிறான்

 

–subham–

 

ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3790)

Written by London swaminathan

 

Date: 5 APRIL 2017

 

Time uploaded in London:-15-36

 

Post No. 3790

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மகரம் என்றால் சுறாமீன் , முதலை என்ற இரண்டு பொருள் இருந்தும் சுறாமீன் என்ற அர்த்தத்திலேயே ஆபரணங்களில், அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. ராவணன் இப்படி சுறாமீன் வடிவ அல்லது சுறாமீன் பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் போகிறபோக்கில் (சுந்தர காண்டம்) சொல்லி விடுகிறான். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் இல்லை.

 

வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி

அரக்கரை வரக் காணார்

தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட

உயிரொடு தடுமாறி

களம் தவா நெடுங்கருவியில்கைகளில்

செயிரியர் கலைக் கண்ணால்

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக

அலமரலுறுகின்றார்

பொருள்:

“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம்,  இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”

 

உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.

 

நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

 

Elephant Crown of Demetrios

பல்லவ கீரிட அதிசயம்

பல்லவ சாம்ராஜ்யத்திலும் இப்படி ஒரு அதிசய மணிமுடி/ கிரீடம் பற்றிய குறிப்பு கிடைக்கிறது

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

எனது கருத்து:

கல்வெட்டிலுள்ள பல விஷயங்கள் சிற்பத்தில் இல்லை. சிற்பத் திலுள்ள பல விஷயங்கள் இலக்கியத்தில் இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

துர்கையின் மான் வாஹனம் பற்றி சிலப்பதிகாரம், தேவாரம் (கலையதூர்தி) போன்ற பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் நமது கோவில்களில் மான் வாஹன துர்கையைப் பார்க்க முடியாது. படங்களிலும் கூட மான் வாஹனம் கிடையாது. சிங்கம் அல்லது புலி வாஹனம்தான் இருக்கும். ஆனால் இராக், துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளில் மான் வாஹனத்தில் தேவியர் பவனி வரும் சிலைகள் உள்ளன. இது துர்கைதான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு பெயர்களால் அவளை அழைப்பர்.

 

ஆக, “கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற கதை இலக்கியத்திலும், வரலாற்றிலும் உளது. எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.

 

–Subham—

 

 

துன்பங்கள் நீங்க வழி; அனுமன் கண்டுபிடிப்பு (Post No.3789)

Written by London swaminathan

 

Date: 5 APRIL 2017

 

Time uploaded in London:- 9-012am

 

Post No. 3789

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கம்ப ராமாயணத்தில் ராமன் புகழைத் தேடிக் கண்டுபிடிக்கத் தேவை இல்லை; கண்டவிடமெல்லாம் அவன் நாமமே; அவன் புகழைப் பாடத் தானே ராமாயணம் இயற்றினான் கம்பன். ஆயினும் அதை அவன் சொல்லும் அழகு, அவன் சொல்லும் இடம், அதைச் சொல்ல அவன் பயன்படுத்தும் கதாபாத்திரம் இவைகளை எல்லாம் நோக்குமிடத்து ராமன் புகழைவிட கம்பன் புகழ் ஓங்கிவிடும்.

 

‘சீதையைக் கண்டுபிடி’ — என்று ராமன் கட்டளையிட்டான். அதைச் சிரமேற்கொண்டு பறந்தான் இலங்கைக்கு; வழியிலோ பல இடையூறுகள் அவைகளையும் கடந்தான். இலங்கைக்குள் வந்த பின்னரும் மனதில் கொஞ்சம் சம்சயம்; அதாவது ஐயப்பாடு.

 

இப்படி இடையூறுகளாக வருகிறதே, நான் என்ன செய்வது! அப்போது அவனுக்கு மனதில் பளிச்சிடுகிறது ராம நாமம்:

 

“ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா

தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீர

ஏறும்வகை எங்கு உ ளது? இராம!” என எல்லாம்

மாறும் அதின்மாறு பிறிதுஇல் என வலித்தான்”.

 

—கடல்தாவு படலம், சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:-

 

இது என்னடா! கடும் துன்பங்கள் வழியில் ஏற்படுகின்றதே! அரக்கர்களோ தெளிவில்லாதவர்கள். கெடுதல் இல்லாத அறம் என்பதையே அறியாதவர்கள். இவர்கள் செய்யும் தீமைகளைக் கடந்து செல்ல நான் என்ன செய்வேன்? இதற்கு வழி என்ன? இராமன் – என்று சொல்ல எல்லாத் துன்பங்களும் நீங்கும். இதைத் தவிர வேறு வழி இல்லை – என்று கருதிய அனுமன், ராம நாமத்தை உச்சரிப்பதை உறுதியாகப் பிடித்துக்கொண்டான்.

 

அவ்வாறு ராம நாமத்தைச் சொன்ன அனுமனுக்கு எவ்வளவு பெரிய வெற்றியும், புகழும் கிடைத்தது என்பதை நாம் அறிவோம்.

ராம! நீ நாமமு ஏமி ருசிரா!

வாழ்க இராமன் திரு நாமம்.

 

–சுபம்–

சச்சரி, குச்சரி, பிச்சரின் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு (Post No.3786)

Written by London swaminathan

 

Date: 4 APRIL 2017

 

Time uploaded in London:- 6-59 am

 

Post No. 3786

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழர்களின் அபார இசை அறிவை விளக்கும் சில பாடல்களைக் காண்போம்:-

 

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி

பிச்சரின் பிதற்றி அல்குல் பூந்துகில் கலாபம் பீறி

குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள குழுக்கொண்டு ஈண்டி

சச்சரிப் பாணி கொட்டி நிறை தடுமறுவாரும்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:

அரக்கியர் சிலர் பாம்பின் விஷம் என்று கூறத்தக்க கள்ளையும், பல வகைப் பிரணிகளின் குருதியையும் குடித்து மயங்கினர்; அதனால் குச்சரி என்னும் பண்ணின் தன்மை குரலில் கலக்க, பைத்தியக்காரர் போலப் பிதற்றினர்; சச்சரி என்னும் தோல் கருவி போலக் கைகளைத் தட்டினர். அல்குலின் மீது அணிந்த மெல்லிய ஆடையையும், கலாபம் என்னும் 25 கோவையுள்ள இடையணியையும் கிழித்துக்கொண்டு மனநிலை  தடுமாறினர்.

 

இந்தப் பாட்டில் இன்னொரு விஷயமும் உள்ளது. 25 கோவையுள்ள கலாபம் என்ற இடையணியையும் அரக்கியர் அணிந்து கொண்டிருந்தனர். வராஹமிஹிரர் என்னும் அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியவில் (கலைக் களஞ்சியத்தில்) ஏராளமான கோவையுள்ள முத்து மாலைகளைப் பட்டியலிடுகிறார். உலகிலேயே அதிக நகைகளை அணிந் தவர்கள் இந்துக்கள் இதை 2200 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பார்ஹுத் சிற்பங்களில்கூடக் காணலாம்.

இன்னொரு பாட்டில் அரக்கியர் வீட்டில் கேட்ட சங்கீத ஒலிகளைக் கம்பன் பாடுகிறான்.

 

சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ

பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி

கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர் பாணிகொட்டி

மங்கல கீதம் பாட மலர்ப் பலி வகுக்கின்றாரை.

 

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

 

பொருள்:

கூந்தலையும் செவ்வாயயையும் உடைய தேவ மகளிர், தாளம் போட்ட படி மங்கலப் பாடல்கள் பாடினர். சங்கு வளையல், சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழுமாறு பலவகையான முரசுகள் முழங்கின. அச்சூழலில் இல்லுறை தெய்வத்தை வணங்கி, மலரினால் அருச்சனை செய்யும் அரக்க மகளிரை, சீதையத் தெடிச் சென்ற அனுமான கண்டான்.

 

 

இங்கு அரக்கர் வீட்டில் மங்கல கீதம் ஒலித்தது, முரசுகள் முழங்கியது ஆகிய சங்கீத விஷயங்களைச் சொல்லும் கம்பன், ஆரிய-திராவிட இனவாதப் புரட்டர்களுக்கு ஆப்பு வைப்பதையும் பார்க்க வேண்டும்.

சில வெளிநாட்டு அரைவேக்காடுகளும், திராவிடப் புரட்டர்களும், ராவணன் என்பவன் திராவிடன் என்றெல்லாம் கதைகட்டி, அரசியல் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இங்கே அரக்க மகளிர் வீட்டிலுள்ள பூஜை அறைகளில் மலர்கொண்டு பூஜை செய்ததைக் கூறுகிறான். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி இல்லுறை தெய்வம் இருந்ததையும் அந்த தெய்வங்களுக்குத் தமிழர்கள் மலர், இலை (வில்வம், துளசி), புல் (அருகம் புல்) முதலியன கொண்டு பூஜை செய்ததையும் கபிலர் முதலான சங்கப் புலவர்கள் பாடியிருப்பதையும் கவனிக்க வேண்டும், அரக்கர்கள், இத்தோடு, தீய குணங்களுடன் வாழ்ந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.  நமது ஊரிலுள்ள திருடர்களும்   , ஏமாற்றுப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கூட தெய்வத்தை பூஜிப்பது போன்றது இது.

 

xxxx

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “இசைத் தமிழ் அதிசயங்கள்” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் கீழே தருகிறேன். முழுக்கட்டுரையும் வேண்டுவோர் இதே பிளாக்கில் 4 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையைக் காண்க.

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

posted on 31 January 2013; by London swaminathan

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

 பத்துப் பாட்டில்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார் விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

சிலப்பதிகார உரையில்

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தரும் பாடல்:
பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குழமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவிறடாரி
யந்திர முழவொடு சந்திர வலைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந்த் துடுமை சிறுபறையடக்க
மாறி றகுனிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெறும் பாஇயென
மிக்க நூலோர் விரித்துரைத்தனரே
(தோற் கருவிகள்: தண்ணூமை, முழவு, தட்டை, முரசு, பறை, பம்பை, குளிர், தொண்டகச் சிறுபறை, கிணை, பதலை, ஆகுளி, துடி, தடாரி, எல்லரி, மத்தரி.

 

–subham–

 

 

உன்னம், புதா, உளில், குரண்டம், கிலுக்கம், சென்னம் குணாலம்—கம்பன் தரும் பறவை லிஸ்ட் (Post No.3783)

Written by London swaminathan

 

Date: 3 APRIL 2017

 

Time uploaded in London:- 6-01 am

 

Post No. 3783

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குப் போனான்; எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பெரிய கோட்டைச் சுவரைப் பார்த்தான், அகழியைப் பார்த்தான்; பொன் மயமான செல்வச் செழிப்புள்ள இலங்கையைக் கண்டான்; இதெல்லாம் நாம் பல முறை படித்த அல்லது சொற்பொழிவுகளில் செவிமடுத்த செய்திகளே. இதை மட்டும் கம்பனும் சொன்னால் அவனை நாம் மதிக்க மாட்டோம்; போகிறபோக்கில் அவன் சொல்லும் அறிவியல், உயிரியல், மானுடவியல், உளவியல், புவீஇ யல், புவிகர்ப்பவியல், சமயம், பண்பாடு, இசை, நடனம் என்று ஏராளமான செய்திகளையும் சேர்த்துச் சொல்லும் பாங்குதான் கம்பனைக் கொம்பனாக்குகிறது!

 

 

சோழ மன்னனிடம் கோபித்துக்கொண்டு “உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?” என்று சவால் விட்ட கொம்பன் அல்லவா அவன்!

 

இதோ பாருங்கள், இலங்கை ((நகர)) கோட்டையைச் சுற்றியுள்ள மூன்று அகழிகளில் அவன் கண்ட பறவைகளைப் போகிற போக்கில் அடுக்கி விடுகிறான். நீங்கள் கம்ப ராமாயண உரைகளைப் படித்தால் கூட இந்தப் பறவைகளை அடையாளம் சொல்ல முடியாது. ‘தமிழ் வாழ்க’ என்றெல்லாம் கூத்தாடுகிறோம்; கூச்சலிடு கிறோம்; ஆனால் இந்தப் பறவைகள் என்ன என்று ஸூவாலஜி (Zoology) ஆர்னிதாலஜி (Ornithology) படித்தவர்கள் கூட சொல்ல முடியாது. உண்மையில் தமிழை வளர்க்க விரும்புவோர் இவைகளை அறிவியல் முறையில் அணுகி கம்பராமாயணத்துக்கு ஒரு விஞ்ஞான   உரை எழுத வேண்டும்.

உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,

அன்மை, கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்

கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,

சென்னம், காகம், குணாலம் சிலம்புமே

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்;

“உன்னம் போன்ற பறவைகள், நாரைகள், மகன்றில்கள், குருகுகள், உள்ளான்கள், அன்னங்கள், நீர்க் கோழிகள், பெருநாரைகள், சக்கரவாகப் பறவைகள் கின்னரங்கள், கொக்குகள், கிலுக்கங்கள், சிச்சிலி என்னும் பறவைகள், மீன்கொத்திப் பறவைகள், நீர்ப்பருந்துகள், நீர்க்காகங்கள், குணாலங்கள் ஆகிய பல்வகைப் பறவைகள் அவ்வகழியில் ஒலித்துக் கொண்டிருந்தன”.

 

உன்னம் -அன்னப் பறவைகளில் “ஒருவகை”;

புதா- குருகு;

உளில் – உள்ளான்;

வண்டானம்- பெருநாரை;

ஆழிப்புள் – சக்கரவாகப் பறவை;

மகன்றில்- அன்றிலில் “ஒரு வகை”;

கின்னரம் – நீர் வாழ்ப் பறவைகளில் “ஒருவகை”; ஆந்தையையும் இச் சொல் குறிக்கும்;

கிலுக்கம் – நீர் வாழ்ப்பறவைகளில் “ஒருவகை”;

சென்னம் – நீர்ப்பருந்து;

சிரல் – மீன்குத்தி;

குணாலம்- நீர் வாழ்ப்பறவைகளில் “ஒருவகை”;

 

இவ்வாறு சொல்லி உரைகாரர்கள் மழுப்பி விடுகிறார்கள் ‘ஒரு வகை’,’ ஒரு வகை’ என்றே எழுதிக்கொண்டு போனால் அது என்ன என்று சொல்ல வேண்டாமா?

பைபிளில் உள்ள தாவரங்கள், மிருகங்கள் பற்றி எல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே படங்களுடன் புத்தகம் போட்டுவிட்டனர். நாமோ சங்க இலக்கியத்தில் வரும் தாவரங்கள், மிருகங்கள், அதே போல மற்ற இலக்கியங்களில் வரும் விஷயங்களுக்கு மழுப்பலாகவே உரை எழுதி வருகிறோம். கம்பனும் கதையை மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே. அகழியில் உள்ள இத்தனை வகை நீர்வாழ்ப் பறவைகளையும் எதற்குச் சொல்ல வேண்டும் ? அறிவியல் தமிழ் அழியாமல் பாதுகாக்கத்தானே அவன் இப்படி பட்டியல் போடுகிறான்.

 

இது போல அவன் சொல்லும் ஆயுத வகைகளை நாம் இனம் காண முடியவில்லை. முயன்று பார்த்தால்  —- தமிழ் அறிஞர்கள், விஞ்ஞானிகள் கூட்டு மாநாடு போட்டால்— இவைகளை தெள்ளிதின் விளக்கமுடியும்

(கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டிலுள்ள 99 தாவரங்களின் படங்கள், தாவரவியல் (botanical names) பெயர்களைக் கண்டேன்; அதில் சில பிழைகளும் குறைபாடுகளும் உள; ஆயினும் ஒரு சிலர் முயன்று அதைச் செய்திருப்பது பாராட்டுக்குறியது; தாவரவியலாளருடன் அமர்ந்தால் குறைகளை நீக்க முடியும்).

தமிழ் வாழ்க! கம்பன் புகழ் ஓங்குக!

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 27 (Post No.3780)

Written by S NAGARAJAN

 

Date: 2 April 2017

 

Time uploaded in London:-  11-23 am

 

 

Post No.3780

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 27

 

பாரதியார் பற்றி நினைவு மஞ்சரியில் உ.வே.சாமிநாதையர்!

 

by ச.நாகராஜன்

 

 

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின்.நினைவு  மஞ்சரி ஒரு அற்புதமான தொகுப்பு. அதில் முதல் பாகத்தில் பத்தாம் கட்டுரையில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி தனது குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் மஹாகவி பாரதியார் பற்றி வ்ரும் பகுதி சுவாரசியமானது. அதை கீழே காணலாம்..

 

ஒருநாள் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். காலஞ்சென்ற ஜி. ஏ. வைத்திய ராமையர் அன்று ‘தமிழின் பெருமை’ என்னும் விஷயத்தைப்பற்றிப் பேசினார். கிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது தெரிந்து பலர் கூட்டத் திற்கு வந்திருந்தனர். ஸ்ரீ சுப்பிமணிய பாரதி யாரும் வந்திருந்தார்.

கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர்நோக்கி யிருந்தனர். சிலர், ‘இவர் மிழைப்பற்றி என்ன  பேசப் போகிறார்? ஸம்ஸ்கிருதத்தைப் பற்றி வேண்டு மானாற் பேசுவார்’ என்று நினைத்தார்கள். உபந்நியாசகர் பேசியபின்பு கிருஷ்ணசாமி ஐயர் பேசத்தொடங்கியபோது எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர் பேசலானார்:

தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷை யிலே; நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை, ஆழ் வார்கள் திவ்யப்பிரபந்தம் பாடியதும் இதிலேதான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவேயில்லை” என்று தொடங்கி வரிசையாகக் கூறிக்கொண்டே சென்றார். அவருடைய பேச்சில் ஒரு பெருமிதமும் கம்பீரமும் இருந்தன. யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத் தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது; அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ்நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவ ருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்றே தோற்றுகின்றது.

கிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தை களும் பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை உரைத்து வந்தார்.

அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ண சாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித் தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப்பற்றிச் சொன்னதைத் தழுவிப் பாரதியார் நாட்டைப்பற்றிப் பாடத் தொடங்கினார்.

 


செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”


என்பது ஒரு செய்யுள்.

கம்பன் இராமயணம் செய்த பாஷை; திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை’ என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்வித மாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு”


என்றும்,


வள்ளுவன் றன்னை யுலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென் றோமணி யாரம் படைத்த தமிழ்நாடு”


என்றும் பாடினார்.

இந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெருமகிழ்ச்சியை அடைந்தார். பாரதி யாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச்செய்து அவற்றைச்சேர்த்து ஆயிரக்கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுள் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர், பாரதியாருடைய கொள்கைகளிற் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறே பலவேறு கொள்கைகளையும் பல வேறு பழ்க்கங்களையும் உடையவர்களாக இருப்பினும் தமிழ் முதலியவற்றில் அறிவுடையவரென்பது தெரிந்தால் மற்றவற்றையெல்லாம் மறந்து பாராட்டு வது கிருஷ்ணசாமி ஐயரது இயல்பு.

 

நினைவு மஞ்சரி நூலை முழுதுமாகப் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தொடுப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0432.html

 

அதில் பத்தாம் கட்டுரையையும் முழுதுமாகப் படிக்கலாம்.

 

 

இந்த நினைவு  மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ள ப்ராஜக்ட் மதுரை என்ற தளம் அருமையான தளம். அதில் சிறந்த தமிழ் நூல்களைப் படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

 

இங்கு, இந்த நல்ல பணியைச் செய்த தமிழ் அன்பர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்ல வேண்டியது கடமை அல்லவா!

***

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 26 (Post No.3774)

Written by S NAGARAJAN

 

Date: 31 March 2017

 

Time uploaded in London:-  5-30 am

 

 

Post No.3774

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 26

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 11

 

by ச.நாகராஜன்

 

    ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்தக் கட்டுரையுடன் என்னிடம் இருக்கும் குமரிமலர் பத்திரிகை கட்டுரைகள் முடிவுறுகின்றன.

   அவரது பத்திரிகைத் தொகுப்பு ஒரு அரிய பொக்கிஷம். தேர்ந்தெடுத்த சமூக நல பிரக்ஞை கொண்ட ஒரு நல்ல  இலக்கியவாதியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். தன்னலமற்று லாப நோக்கற்று இந்தப் பணியை அவர் மேற்கொண்டு ஆற்றியதை எவ்வளவு சொல்லிப் புகழ்ந்தாலும் தகும்

   ஏ.கே. செட்டியாரின் இலக்கியப் பணியில் அடங்கிய குமரிமலர் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் தமிழக அரசு உரிய தொகையைக் கொடுத்து நாட்டுடமை ஆக்கினால் அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு அரிய வரபிரசாதமாக அமையும்,

 

இன்னும் இரு கட்டுரைகளை மட்டுமே இங்கு என்னால் கொடுக்க முடிகிறது. மேலும் பல பாரதியார் சம்பந்தமான செய்திகளை அவர் வெளியிட்டிருக்கக் கூடும்.

 

 

  • ஜன்ம பூமி என்ற ஒரு கட்டுரையை குமரி மலர் வெளியிட்டிருக்கிறது.

ஜன்ம பூமி

சி.சுப்பிரமணிய பாரதி (1909)

முதலில் இதைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.

ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் 1909-ஆம் ஆண்டில் “ஜன்ம பூமி”

(ஸ்வதேச கீதங்கள்-இரண்டாம் பாகம்) என்ற நூலை வெளியிட்டார்.32 பக்கம் உள்ள நூலின் விலை அணா மூன்று. புதுச்சேரியில் சைகோன் சின்னையா பிரசில் அச்சிடப் பெற்றது. அந் நூலில் உள்ள “சமர்ப்பணம்”, முகவுரை ஆகிய இரண்டையும் இங்கு வெளியிடுகிறோம்.

 

இந்தக் குறிப்பைத் தொடர்ந்து சமர்ப்பணம் மற்றும் முகவுரையைக் காணலாம்.

 

 

  • அடுத்து சாரல் என்ற கட்டுரையை குமரிமலரில் காண்கிறோம்.

சாரல்

சி.சுப்பிரமணிய பாரதியார் (1918-20)

இந்தக் கட்டுரை பற்றிய குறிப்பை முதலில் காண்கிறோம்.

 

    இதுவரை எங்கும் நூல் வடிவு பெறாத பாரதி கட்டுரை இது. பாரதி புதுவையை விட்டுத் தெற்கே வந்து, தனது மனைவி செல்லம்மாவின் ஊராகிய கடயத்தில் இருந்த சமயம் – 1918 – 20 – எழுதியது. முதலில் “சுதேசமித்திர”னில் பாரதி காலத்தில் வந்திருக்க வேண்டும். 1936-ல் பரலி சு.நெல்லையப்பரால் அவரது “லோகோபகாரி” வாரப் பதிப்பிலும், பிறகு 23-5-1936 அன்று “ஜெயபாரதி” நாளேட்டிலும் வெளியான இக்கட்டுரை கடயத்தின் இயற்கை அழகையும் அவ்வூரில் பாரதியார் வசித்த தனித்த இல்லத்தையும், தெருவில் காணக்கூடிய கழுதைகளையும், ஊரின் சிறுமை மனிதர்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. கடயம் தென்காசிக்கு முன்னதாக ஆறேழு மைலில் உள்ளது. குற்றாலத்துச் சாரல் இங்கும் பிரசித்தம்.

(புதுவை வேதபுரம்;  கடயம்  ஆலமரம்; பாரதியார்-சக்திதாசன்)  

 

(சிறப்பு மிக்க இக்கட்டுரையைக் குமரி மலர் மூலம் மீண்டும் – இந்த ‘பார்ரதி தின’ மாதத்தில் – இன்றைய தலைமுறையினர் கவனத்திற்குக் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் – ரா.அ.பத்மநாபன்)

இக்குறிப்பைத் தொடர்ந்து சாரல் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது அருமையான கட்டுரை இது.

 

இது வரை குமரி மலரில் வெளியாகியுள்ள பாரதியாரின் சில கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் ஆகியவற்றோடு அவரைப் பற்றி அறிந்தோரின் கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளையும் அவற்றின் சில பகுதிகளையும் பார்த்தோம்.

இன்று கடையில் பாரதியார் படைப்புகளாக வெளி வந்துள்ள நூல்களில் இவை அனைத்தும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

பாரதியாரின் படைப்புகள் என்ற வரிசையில் அனைத்தும் தாங்கிய நூல்கள் அனைவரும் வாங்கக் கூடிய மலிவுப் பதிப்பு நூல்களாக வெளி வருதல் வேண்டும்.

ஒரு சில அரிய கட்டுரைகளைத் தாங்கி வரும் நூல்களின் விலை அவை நூலகங்களுக்கு மட்டுமே விற்கப்படும் விலையைக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

இனி அடுத்து வரும் கட்டுரைகளில் பாரதியார் பற்றிய இதர நூல்களைப் பற்றிப் பார்ப்போம்.

குமரிமலருக்கும் அதன் ஆசிரியர் திரு ஏ.கே.செட்டியார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து விட்டு மேலும் பாரதியார் பாதையில் செல்வோம்.

                            – தொடரும்

 

இடிதாங்கிக் கருவி பற்றி கம்பன் தகவல்? (Post No.3772)

Written by  London swaminathan

 

Date: 30 March 2017

 

Time uploaded in London:- 10-21 am

 

Post No. 3772

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்கத் தமிழ் இலக்கியங்களில் மதில் சுவர் மீது என்ன என்ன எந்திரப் பொறிகள், கருவிகள் வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்புகள் உள. அந்தக் காலத்திலேயே உயரமான கட்டிடங்களை இடி மின்னல் தாக்காமல் இருக்க நம் முன்னோர்கள் பலவழிகளைக் கண்டு பிடித்தனர்  கோபுரங்களின் மீதுள்ள மிகப்பெரிய கலசங்களில் வரகு என்னும் தானியத்தை நிரப் பிவைப்பர். இதுவும் இடி தாக்காமல் இருப்பதற்கான ஒரு உத்தி என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எது எப்படியாகிலும், இவ்வளவு காலமாக இடி தாக்கி அவைகள் அழிந்ததாகச் செய்திகள் இல்லை. கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் அவைகளின் பலவீனம்தான் காரணம் அல்லது பூகம்ப/ நில அதிர்ச்சி போன்ற இயற்கை  உற்பாதங்கள்தான் காரணம் என்றும் அறிகிறோம்.

 

கலைக் களஞ்சியங்களைப் பார்த்தால் இடி தாங்கியை (lightning rod OR conductor)  பென்சமின் பிராங்ளின் (Benjamin Franklin) கண்டுபிடித்தார் என்று போட்டிருக்கும். ஆனால் கம்பன் காலத்திலேயே இடிதாங்கிக் கம்பிகள் கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டதாக அவன் பாடலில் இருந்து அறிகிறோம்.

 

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண் புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண் பொறி அடக்கிய செயலால

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

–பால காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:-

அயோத்தி மாநகரத்தின் கோட்டை மதில் மிகவும் உயரமானது. அதன் முடிவு எங்கே இருக்கிறது என்று காணமுடியாது; ஆகையால் முடிவே காணமுடியாத வேதத்திற்கு இணையானது; இதன் ஒரு பக்கம் விண்ணுலகத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் இதைத் தேவர்களுக்கு ஒப்பிடலாம்;  போர் பொறிகளை (எந்திரங்களை) ஒளித்து வைத்திருப்பதால் பொறிகளை (ஐம்புலன்களை) அடக்கிய முனிவர்களுக்குச் சமமானது. காவல் தொழிலில் கலைமானை வாஹனமாகக் கொண்ட துர்க்கைக்குச் சமம். தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளி தேவி போல இருக்கும்;  எவரும் நெருங்க முடியாத தன்மையால் ஈசனைப் போல இருக்கும்.

 

“மதில் சுவர் மிக உயரமானது” — என்று ஒரே வரியில் சொல்லி இருக்கலாம். ஆனால் அங்கே அது வேதம், தேவலோகம், முனிவர், துர்கை, காளி, ஈஸ்வரன் போன்றது என்று சொல்லும் அழகு மிகவும் ரசிக்கத்தக்கது. அது மட்டுமல்ல; பொறி, துக்கை என்ற சொற்களில் இரு பொருளை வைத்து சிலேடை செய்து விளையாடுகிறான் கம்பன்!

 

ஐம்பொறி என்பது ஐம்புலன்கள்; மதிலில் ஒளிந்திருக்கும் பொறிகள்- எந்திரங்கள்.

 

துர்கா என்றால் பாதுகாப்பு அரண் என்று பொருள்; வடநாட்டில் கோ ட்டைகளின் பெயர்கள் ‘துர்க்’ என்றே முடியும் (தமிழ்நாட்டிலும் கூட இப்படிச் சில ஊர்கள் உண்டு). நம்மைப் பாதுகாப்பதால்தான் அவளைத் துர்கை என்று வழிபடுகிறோம்.

 

பாட்டில் இடிதாங்கி என்ற சொல் இல்லை. ஆயினும் கோட்டையின் மீது திரிசூலத்தை நட்டு வைப்பதும் கோவில் கோபுரம் மீது உலோகக் கலசங்களை வைப்பதும் இதற்காகவே என்பதை எல்லோரும் அறிவர். பழைய உரைகாரர்களும் இப் படியே பொருள் சொல்லி இருக்கிறார்கள்.

 

கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தமிழனின் கண்டு பிடிப்போ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் வட நாட்டில் கோட்டைகளின் மீது திரிசூலம் இருந்ததாக பார்த்தது இல்லை; படித்ததுமில்லை. மேலும் கம்பன், சோழ நாட்டில் என்னென்ன கண்டானோ அதை அப்படியே அயோத்தி நகரத்தின் மீது ஏற்றிப் பாடி இருக்கிறான். ஆக சோழர் காலத்தில் கோட்டைகளின் மதில் மீது சூலம் இருந்தது தெளிவாகிறது. கோவிலின் உயரத்துக்கேற்ற பிரம்மாண்டமான கோபுரக் கலசங்களை வைத்தவனும் தமிழனே. நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் மீதேறிக் கலசங்களைக் கட்டிப்பிடித்து நின்றிருக்கிறேன். 169 அடி உயரத்தில் நின்றுகொண்டு மதுரையைப் பார்க்கும்போது தலை சுற்றும்; காற்றுவேறு அடிப்பதால் ஒரு சில நிமிடங்களுக்கு கலசத்தைக் கட்டிக்கொண்டே நின்று பார்த்துவிட்டு போதும் என்று திரும்பி விடுவோம். கோபுரக் கலசங்களையும், கோட்டையின் திரிசூலங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கையில் இதன் காரணமும் விளங்குகிறது. இது தமிழனின் கண்டு பிடிப்பு என்றும் தெரிகிறது. ஆயினும் இவை,  விஞ்ஞான முறையில் இடியைத் தடுக்கவல்லதா என்பதை ஆராய்தல் அவசியமே!

 

–SUBHAM–