ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753)

 

Written by London swaminathan

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:- 20-41

 

Post No. 3753

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

 

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

 

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

 

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

 

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

 

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

 

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

 

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

 

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

 

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

 

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

 

 

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

 

எனது பழைய கட்டுரை:

வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்! கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

 

–Subham–

 

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி … (Post No.3751)

Written by S NAGARAJAN

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3751

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தக மதிப்புரை

 

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி …

 

by ச.நாகராஜன்

 

மதுரை யாதவர் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு எம்.சுப்பையா தாஸ் அவர்கள் எழுதியுள்ள ‘எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி..’ என்ற நூல் அளக்கமுடியா விஷயங்களை கணிதக் கோல் வைத்து அளந்து காண்பிக்கிறது.

 

சூத்திரத்திற்கு அப்பால் இருக்கும் விளக்க முடியாத ஆன்மீக விஷயங்களை நம்மை கணித சூத்திரங்கள் மூலம் வழி நடத்திக் கொண்டு சென்று விளக்குகிறது.

 

கணிதத்திற்கு ஆன்மீகத்திற்கும் காலம் காலமாகத் தொடர்பு உண்டு. காலமும் கணக்கும் நீத்த காரணனனை கணிதம் மூலம் விளக்கியவர் லாகூரில் கணிதப் பேராசிரியராக வேலை பார்த்த சுவாமி ராமதீர்த்தர். அவரது எட்டு தொகுதிகள் கொண்ட இன் தி வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன் (In the Woods of God Realisation) நூலில் கணிதம் மூலமாக அவர் விளக்கும் வேதாந்த விஷயங்கள் மிகவும் சுவை பயப்பவை.

அதே போல கணித மேதை ராமானுஜனின் பிரசித்தி பெற்ற வாக்கியமான், “An equation for me has no meaning unless it represents a thought of God” என்பதிலிருந்து கணிதமே கடவுள்; கணிதத்தின் மூலம் கடவுளைக் காணலாம் என்பது நிதரிசனமாகப் புலனாகிறது.

 

 

இந்த அடிப்படையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு 147 பக்கம் அடங்கிய நூலில் மூன்று பிரிவுகளில் 18 அத்தியாயங்களில் அற்புதமான விஷயங்களை விளக்குகிறார். ஆறு அத்தியாயங்களில் கணித சூத்திரங்களும் விளக்கங்களும் நர்த்தனம் புரிகின்றன!

மாண்டூக்ய உபநிடதத்தில் மூன்று பரிமாண உலகமும் நான்கு பரிமாண உலகமும் சுட்டிக் காட்டப்படுவதை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.

 

 

நமது ரிஷிகள் எதையும் உள்ளுணர்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். தங்கள் தவ வலிமையால் அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கண்டவர்கள் அவர்கள்.

உடலில் நமது இதயம் இடப்பக்கம் இருப்பதை நாம் உணர்கிறோம். அவ்ர்கள் ஆன்மீக இதயம் வலப்பக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்.

 

 

இதை ஆசிரியர் விளக்கும் போது சமீப காலத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்து அரிய உபதேசங்களை அருளிய பகவான் ரமண மஹ்ரிஷியும் இதை அடிக்கடி கூறியுள்ளதையும் இதை அவர் தனது அனுபவத்தின் மூலமாக உணர்ந்து நமக்கு அருளியிருபப்தையும் நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

 

 

நான்காவது பரிமாணம் என்பது ஒரு அதிசயமான விஷயம். இதைப் பற்றி மேலை நாட்டு அறிஞர்களும் ஆராய்ந்து பல நூல்களை இயற்றியுள்ளனர். குறிப்பிட்த்தகுந்த பல புத்தகங்களில் ஜே.டபிள்யூ. டன் (1875-1949) எழுதிய “An Ezperiment with Time” குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள இது போன்ற புத்தகங்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதத்தில் நூலாசிரியர் சுப்பையா தாஸ் சில எளிய சித்திரங்கள் மூலம் நான்காம் பரிமாணத்தை விளக்குகிறார்.

 

நானோ வினாடியில் பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அந்த குறிப்பிட்ட நானோ வினாடியில் மட்டும் நமது மூன்று பரிமாண உலகில் நடக்கும்.

 

இந்தச் செயல்கள் நடந்து முடிந்தவுடன்  செயல்கள் அனைத்தும் நான்காம் பரிமாண உலகில் ஒரு குறிப்பிட்ட பதிவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

 

ஆகாம்யம்,சஞ்சிதம், பிராரப்தம் ஆகிய மூன்று க்ர்ம அல்லது எண்ணத் தொகுப்புகளை ஆசிரியர் அழகுற மூன்று பக்க முக்கோணத்தின் மூலம் விளக்குகிறார்.

 

பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தால் மிஞ்சுவது பூரணம் என்பதை கணித மூலம் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.

 

பிரபஞ்ச ஒடுக்கம், பிரபஞ்ச வெடிப்பு போன்ற அறிவியல் விஷய்ங்களை ஆன்மீக ரீதியில் ஆசிரியர் விளக்குகிறார்.

 

சனி கிரகத்தின் வடதுருவ பகுதியில் அறுகோண வடிவ அடையாளத்தை தங்கள் ஞானக்கண்ணால் கண்டுணர்ந்த முனிவர்கள் அதை சனீஸ்வரன் கோவிலின் மேற்கூரையில் பொறிக்கச் செய்தனர். நாஸா அனுப்பிய காஸினி விண்கலம் இந்த அறுகோண அமைப்பை போட்டோ எடுத்து அனுப்பியிருப்பதால் முனிவர்களின் அபூர்வ ஆற்றல் உறுதி செய்யப்படுகிறது.

 

 

இது போல ஓம் என்ற பிரணவத்தின் அற்புத ஆற்றலையும் ஆசிரியர் அழகுற விளக்குகிறார்.

 

ஸ்ரீ சத்யசாயிபாபாவின் அழகான முத்திரை வாக்கியங்களையும் அவர் தெய்வீக வாழ்வில் ஒரு சிறு பெண்ணுக்கு அவர் அருளால் விளைந்த அற்புத சம்பவத்தையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இது எல்லையற்ற அபூர்வமான ஆற்றலையும் அவதார மஹிமையையும் விளக்க சுவையாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

காலம் மற்றும் வெளி, காரண- காரியம் இவற்றிற்கு உட்பட்ட மனிதன் இதை  மீறி வெளி வருவதற்கு ஆன்மீக வாழ்வில் அடியெடுத்து வைத்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கூறும் செய்தி.

 

 

இந்த அரிய குறிக்கோளை அடைய இறை தத்துவத்தை உணர வேண்டும்.அதை கணிதம் மூலம் விளங்கிக் கொள்ள்லாம் என்பதை இந்தக் கணிதப் பேராசிரியர் சுவையுடன் கூறுகிறார்,

நூலுக்கு யாதவர் கல்லூரியின் முன்னாள் செயலர் திரு பன்னீர்செல்வம் அழகான் மதிப்புரையைத் தந்துள்ளார்.

நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பட்டியலும் கலைச்சொற்கள் விளக்கமும் தரப்பட்டுள்ளன.

 

அழகுற அச்சிடப்பட்டுள்ள இந்த் புத்தகம் கிடைக்கும் இடம்:

 

THAASU PUBLICATIONS

14, II CROSS STREET,

VISHWANATHAPURAM

MADURAI 625014

TAMILNADU

INDIA

PHONE 0452 2641945

Email subdoss2014@gmail.com

 

நூலின் விலை ரூ 150/ (147 பக்கங்கள்)

 

கணிதம் மூலம் கடவுளை விளக்கும் ஆசிரியருக்கு எமது பாராட்டுக்கள்.

***

அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் – பகுதி 3 (Post No.3598)

Compiled by London swaminathan

 

Date: 2 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

Post No. 3598

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அதிசய முதலியார் செய்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களில் முதல் இரண்டு பகுதிகள் வெளியாகின. இது மூன்றாம் பகுதி.

 

1878-ஆம் ஆண்டு திருக்கழுக்குன்ற மலை அடிவார மஹா மண்டபத்தில் தசாவதானி ஜெகநாதபிள்ளை முன்னிலையில் கலியாண சுந்தர முதலியார் அஷ்டாவதானம் செய்து காண்பித்தார்.

 

அவ்வமயம் செங்கல்பட்டு வக்கீல் சுந்தர முதலியார் கேள்விக் கணை தொடுத்தார்– எங்கே புத்தகத்துக்கும் கரத்துக்கும் சிலேடை வைத்து செய்யுள் இயற்றுங்கள் பார்ப்போம் என்றார்.

 

மூடித் திறத்தலினால் மொய்ரேகையேயுறலால்

நாடியெவரு நண்ணுகையால்– கோடலினால்

வித்தகர்  கணத்துகின்ற வேதகிரி தண்பதியில்

அத்தமது புத்தகமுமாம் 

 

-என்று முதலியார் சிலேடை—(இரு பொருள்படும்படி செய்யுள்) — செய்தார்.

 

(அத்தம்=ஹஸ்தம்=கை=கரம்)

 

சிவக்கொழுந்து பண்டாரம் என்பவர், பால் என்னும் சொல் பத்து இடங்களில் வருமாறு கவி செய்க என்றார்.

 

பற்றுங்கொடிக்ககனும் பங்கயனும் காணாவும்

பற்றோலுரித்த வன்னப் பாலே பால் — மற்றப் பால்

மாட்டுப் பால் பூப்பால் மரப்பால் வனிதையர்பா

லாட்டுப் பாலப் பாலிப்   பால்

 

-என்று முதலியார் பாடினார்.

செய்யூர் ஜமீந்தார் வைத்தியநாத முதலியார் எழுந்து, நாடு என்று துவங்கி ஊர் என்று முடியுமாறு ஒரு கவி புனையுங்கள் என்றார்.

 

நாடுசேரன் சோழ நற்பாண்டியன் முதலோர்

தேடு பொருள் யாவுஞ்சிறக்குமா –னீடு தொண்டை

மண்டலத்திற் கோர்திலகன் வைத்தியநாதச் சீமா

னொண்டி   றலோடே வாழ்செய்யூர்

 

என்று முதலியார் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

 

அஷ்டாவதானத்தில் வெறும் கவி பாடுதல் மட்டுமல்ல. பலர் கூட்டல், கழித்தல் போடச சொல்லுவர். மற்றும் சிலர் முதுகில் கற்களையோ, விதைகளையோ வீசி எத்தனை கற்களைப் போட்டென் என்று கேட்பார். தமிழ் இலக்கியத்தில் கேள்விகள் கேட்பர்.  இது போல எட்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இவை எல்லாம் முடிந்தவுடன் செய்யூர் ஜமீந்தார் பரிசளிக்க முயன்றதைக் குறிப்பால் உணர்ந்து

 

காசுதனி லெனக்குக் கவலையில்லை பொற்சரிகைத்

தூசுதனிலேதுந் துயரிலை — வீசுபுக

ழீகட்டும் வள்ளா லியகற்றுக வென்னாசிரியர்

வீடுகட்டி வாழ்ந்திடவே –என்று பாடி முடித்தார்.

 

 

இதன் பொருளாவது: எனக்கு காசு பணம் வேண்டியதில்லை. என்னுடைய ஆசிரியரான தசவதானியாருக்கு வீடுகட்டிக் கொடுக்கவும் என்பதாகும். உடனே தசாவதானியார் ஜெகநாத பிள்ளைக்கு வீடு கட்டத் தேவையான பொருட்களை ஜமீந்தார் அனுப்பி வைத்தார்.

 

இதற்குப் பின்னர் ஜமீந்தாரின் வேண்டுகோளை ஏற்று திரிபுரசுந்தரி மாலை இயற்றினார்.

 

முதலியார், இடைகழி நாட்டுக்கு வந்திருக்கும் செய்தி கேட்டு ஜமீந்தார், யானையை அனுப்பி அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தார். ஆனால் அவர் ஒரு சீட்டுக் கவி மூலம் சின்னாட்களுக்குப் பின்னர் வருவதாக அறிவித்து சேயூரில் ஒரு வாரம் தங்கினார். அப்போது அவருக்குக் கிடைத்த பரிசுகள் அனைத்தையும் தன்னுடைய  ஆசிரியரான தசாவதானியாருக்கே கொடுத்துவிட்டார்.

 

திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து கமலபந்தமியற்றிப் பரிசு பெற்றார்.

பாம்பு கடித்தது

 

1879 ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூருக்குச் செல்லுகையில் ஒரு பாம்பு இவரைக் கடித்துவிட்டு படம் எடுத்து ஆடியது. இவர் தாம் இறந்து போய்விடுவோமென்றெண்ணி கையிலிருந்த கமலபந்தத்தின் பின்னால் தனது பெயர் முதலியவற்றை எழுதிவிட்டு தியானத்தில் மூழ்கி திருமுருகாற்றுபடையை ஜெபிக்கத் தொடங்கினார். அந்த    கமலபந்தம் திருப்போரூர் சிவசங்கரத் தம்பிரான் மீது இவர் இயற்றியதாகும். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தொட்டியன், பாம்பு கடித்த செய்தி கேட்டு அவருக்கு ஒரு மூலிகையைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான். இவரும் குணமடைந்து தொட்டியனைத் தேடவே அவனைக் காணவில்லை. முருகப்பெருமானே வந்து உதவியதாக முதலியார் எண்ணினார். தம்பிரானிடம் நடந்த செய்திகளைச் சொல்லவே அவர் அன்று முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளைச் செய்து முதலியாரை மகிழ்வித்தார்.

 

1879-ல் மேடவாக்கம் வெங்கடாசல முதலியார் குமாரத்தி பார்ப்பாத்தியம்மாளுக்கும் முதலியாருக்கும் திருமணம் நடந்தேறியது. காலப்போக்கில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. எஞ்சினீயர் அலு வலகத்தில் கிளர்க் உத்தியோகமும் கிடைத்தது.  பரங்கி மலைக்கு மாற்றப்படவே சென்னையில் மைத்துனர் கடையில் இருந்து கொண்டு சுதந்தர விருத்தியில் இறங்கினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பெரியபுராணம் முதலிய நூல்கள் பற்றி உபந்யாசம் செய்தார். நடராஜ சபை என்ற பெயரில் சமயப்  பணிகள் தொடர்ந்தன.

 

முதலியாரவர்கள், சிதம்பரத்தில் பாஸ்கர சேதுபதி மஹாராஜவைச் சந்தித்து வார்த்தை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் சித்திரகவி சடாதர நாவலர் அவரைச் சந்த்க்க வந்தார். நாவலர், தான் கவிபாடும் வல்லமை படைத்தவர் என்று சொல்லவே, மெய்கண்டநாதன் என்பதை வைத்து அஸ்வபந்தம் பாடும்படி சொல்லிவிட்டுப் போஜனத்திற்கேகினார் பாஸ்கர சேதுபதி.

 

நாவலருக்கோ ஒரு சொல் கூட வரவில்லை. மஹாராஜா வந்தபின்னரும் மவுனமா இருந்து விட்டார். முதலியாரோவெனில் ஒரு செய்யுளை எழுதி ராஜா கையில் கொடுக்க, அது அஸ்வபந்தத்தில் அடைபட்டது. நாவலர் சென்றவுடன் முதலியாருக்கு பரிசுகள் கிடைத்தன. ஒரு சால்வையும் போர்த்தினர். வெளியே காத்துக் கொண்டிருந்த நாவலர், தனது இயலாமையைச் சொன்னவுடன் அவருக்கு முதலியார் அஸ்வபந்த இலக்கணம் கற்பித்து, அந்தச் சால்வையையும் அவருக்கே போர்த்தி அனுப்பினார். கலியாண சுந்தர முதலியார் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.

 

 

முதலியார் இயற்றிய நூல்கள், தனிப்பாடல்களின் பட்டியல் மிக நீண்டது. வாழ்நாள் முழுதையும் சைவ சமயத்துக்கும் தமிழ்ப் பணிக்கும் பயன்படுத்தியவர். 1914-ஆம் ஆண்டில் மணவழகு கலியாண சுந்தர முதலியாரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது அவருடைய மாணவர்கள் ஒரு மலரை வெளியிட்டு அவரது சாதனைகள், திருப்பணிகளைத் தொகுத்து வெளியிட்டனர். அதன் சுருக்கத்தை மட்டுமே நான் மூன்று கட்டுரைகளில் தந்தேன்.

 

–சுபம்–

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594)

Written by S NAGARAJAN

 

Date: 1 February 2017

 

Time uploaded in London:-  6-39 am

 

 

Post No.3594

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

ச.நாகராஜன்

t

“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”

                                                                 – அறிவியல் தகவல்

 

சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.

 

 

மரீனா சில்வா

1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்கு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.

 

ரெபக்கா ஹாஸ்கிங்

பிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.

ஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்!

 

ஆப்ரே மேயர்

தென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.

இசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..

முதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.

இசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.

பிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.

உலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.

 

ஜியா ஜாங்கே

நடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில்  மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம்  என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.

 

இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே!

உத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius)   ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.

 அர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.

1901 லிருந்து 1927ஆம் ஆண்டு  முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.

**********

 

 

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை? (Post No.3593)

Written by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  18-50

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு — என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 நான் எழுதி வெளியிட்ட கட்டுரையில், பாரதி, பாரதிதாசன், அருணகிரிநாதர், திருமூலர், நம்மாழ்வார், தொல்காப்பியர், நக்கீரர், தாயுமானவர், அப்பர், மாணிக்கவாசகர், திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி, திருவள்ளுவர் ஆகியோரின் பொன்மொழிகளை வெளியிட்டேன். இப்பொழுது சம்ஸ்கிருத நூல்களில் இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி பற்றிய சில பொன்மொழிகளையும் பழமொழிகளையும் காண்போம்:-

 

எது அல்லது யார் இன்பம் தருவர்?

 

ஸ்வதாரா- தன்னுடைய மனைவி

போஜன- நல்ல சாப்பாடு

தனம் – பணம்

 

சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337

xxxx

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை?

 

விஷயானந்த- உலக விஷயங்கள் தரும் இன்பம்

 

யோகானந்த – யோகத்தின் மூலம் பெறும் இன்பம்

 

அத்வைதானந்த- அத்வைதக் கொள்கையால் கிடைக்கும் இன்பம்( அஹம் பிரம்மாஸ்மி)

 

விதேஹானந்த- உடல் கடந்த இன்பம்

 

பிரம்மானந்த – இறை இன்பம்

 

விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதாந்த ஏவ ச

விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மாந்தஸ்ச பஞ்சமாஹா

xxxx

 

சேரும்போது இன்பம், பிரியும்போது துன்பம்

 

அதிகாரம்- ஆட்சி அதிகாரம், பதவி அதிகாரம்

கர்பம்- கருவுருதல், கரு சிதைதல்

வித்தம்- பணம்

ஸ்வான மைதுனம்- நாய்களின் புணர்ச்சி

 

அதிகாரம் ச கர்பம் ச வித்தமன்வதேர் ச ஸ்வானமைதுனம்

ஆகமே சுகமாப்னோதி நிர்கமே ப்ராணசங்கடம்

 

xxx

 

ஆனந்த சீமா கலு ந்ருத்யசேவா- ஒருவரின் மகிழ்ச்சியின் எல்லை நடனத்தில் (தெரியும்)

 

ஏகத்ர சிரவாசோ ஹி ந ப்ரீதிஜனனோ பவேத் (மஹாபாரதம் 3-36-36)

ஒரே இடத்தில் நீண்டகாலம் வசிப்பது மகிழ்ச்சி தராது

 

கோ ஹி சாந்த்வைர்ன துஷ்யதி (பாரத மஞ்சரி) – ஆறுதல் தரக்கூடிய பேச்சு யாருக்குத்தான் மகிழ்ச்சி தராது?

 

மனத்திருப்தி வந்துவிட்டால் யார் பணக்காரன்? யார் ஏழை? (வைராக்ய சதகம் 53) மனசி ச பரிதுஷ்டே கோ அர்தவான்கோ தரிர்த்ரஹ

 

புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதுதான் கடவுளை வணங்குவதாகும் (சந்தோஷம் ஜனயேத் ப்ராக்ஞஹ ததேவேஸ்வர பூஜனம்)

 

மகிழ்ச்சிக்கு இணையான செல்வம் இல்லை (பஞ்சதந்திரம்) சந்தோஷ துல்யம் தனமஸ்தி நான்யத்

 

மகிழ்ச்சியானவர்கள் வெற்றி அடைவர், அழுகின்றவர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவார்கள்

ஹசத்பிஹி க்ரியதே கர்ம ருதத்பிஹி பரிபச்யதே

 

–Subham–

 

 

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு

https://tamilandvedas.com/…/இன்பம்எங்கேஇன்ப

Translate this page

23 Apr 2013 – இன்று நாம் அலசும் விஷயம் ”இன்பம் எங்கே?” யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம். திருமூலர்: நான் …

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1 (Post No.3593)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  9-13 am

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact: swami_48@yahoo.com

 

 

சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அதில் படித்த சில விஷயங்கள்:-

 

இவர் சிறுவயதிலேயே தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பதிலும் மனனம் செய்வத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். வளர் மதி (சந்திரன்) போல் இவர் மதியும் வளர்ந்தது. சிறுவயதிலேயே இவருக்கு செய்யுள் இயற்றும்  ஆ ற்ற லும் வாய்த்தது.

 

தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் முன், தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவிலில் தானே இயற்றிய ஒரு செய்யுளின் மூலம் பிரார்த்திப்பார். சக மாணவர்களை அழைத்து நீங்களும் துதிபாடுங்கள் என்று சொல்லிக் கொடுப்பார். இதோ முதலியார் செய்த துதி:-

 

வாத்தியார் சொல்லிவைக்கும் வண்மையுள்ள பாடமெல்லாம்

நேர்த்தியா யென்மனதில் நேர்மையுடன் — பூர்த்தியுறச்

சுந்தர விநாயகனே தூய்மை பெறு நின்றாளென்

சிந்தையினிலே யிருக்கச் செய்

 

(நின்றாள் = நின் தாள் = உன்னுடைய பாதங்கள்)

xxx

இவர் தந்தையார் தினமும் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்படி சொல்லவே முதலியாரும் அவ்வாறே செய்து முருக பக்தர் ஆனார்.

 

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் ஒரு நாள் ஆசிரியர் “வாடியோட வனச மன்னன்” என்ற ‘திருவரம்பக் கலம்பகம்’ பாடல்

பற்றிப் பாடம் எடுத்தார். அதில் முருகன் ஓட என்ற வரிகள் வந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இவரோ தீவிர சிவபக்தர். அதைப் படிக்க

மறுத்துவிட்டார். உடனே வாத்தியார், முதலியாரின் தந்தையிடம் இதைத் தெரிவித்தார்.

 

இதற்குப் பின்னர் 38ஆவது வயதில் முதலியார் பாடிய திரு ஒற்றியூர் கலம்பகத்தில் திருமால், லெட்சுமி, பிரம்மா எல்லோரும் ஓட என்னும் பொருள்படும் பாடலை இயற்றி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்!

xxx

பள்ளிக்கூடப் பாடம் படிக்கும்  நேரத்தில் படிக்காமல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தால் ஆசிரியருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் வாத்தியார்கள், பிரம்பைக் கையில் எடுத்து  தண்டிப்பது வழக்கம்.இப்படி விளையாடிய மாணவர் அருகில், கலியாண சுந்தர முதலியாரும் நின்றிருந்தார். ஒவ்வொருவரையாக அடித்த வாத்தியார். முதலியாரையும் அடித்து வைத்தார். உடனே அவர் செய்யுள் வடிவில் தனது தந்தையிடம் புகார் கொடுத்தார். அந்தச் செய்யுளை, முதலியாரின் தந்தை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று காட்டியவுடன், வாத்தியார் தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் ஐரோப்பிய பிள்ளைகள் படித்த கத்தோலிக்க பாடசாலையில், முதலியாரைச் சேர்க்க அவரே உதவி செய்தார். ஆயினும் முதலியார், ஈராண்டுகள் அங்கே படித்துவிட்டு, தாலுக்கா பாடசாலையில் சேர்ந்து  தனது படிப்பைத் தொடர்ந்தார்.

 

 

இதோ முதலியார் சிறு பையனாக இருந்தபோது கொடுத்த புகார் மனு:-

 

எந்தவித குற்றமுமியானின்று செய்யாதிருக்க

என்றன் தொடையிலேன் சூடு வந்ததெனப்

பூரணமாய்க் கல்வி கற்ற பூங்கா வனக் கவியை

காரணநீ கேட்டிடுக கண்டு.

எந்தன் என்பது என்றன் — என்று இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் முதலியாருக்குத் தெரியாது.

 

xxxx

 

 

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு கீரைத் தோட்டம் வழியாக மற்ற மாணவர்களுடன் முதலியாரும் நடந்து வந்துகொண்டிருந்தார். கீரைப் பாத்தியை பிள்ளைகள் மிதித்துவிட்டனர் என்பதால் சூரன் என்ற பெயருள்ள தோட்டக்காரன் எல்லோரையும் ஒரு வளார் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தான். எல்லோரும் ஓடிவிட்டனர். முதலியார் மற்றும் பொறுமையுடன் நின்றவுடன் அவருக்கு அடி விழுந்தது. உடனே கோபத்தில் கவி பொழிந்தார்.

 

தோட்டக்காரச் சூரன் றோன்றி வளாரடியைப்

போட்டான் முதுகில் பொறுக்கேனான் — தோட்டிதழ்சேர்

தாராரும் காளியே தாரணியிலன்னவனைப்

பாராமலேயிருக்கப் பண்

 

என்று தோட்டத்தின் மூலையில் இருந்த காளி கோவிலில் பாடிவிட்டு வந்தார். அந்தச் சூரன் அன்றிரவு தோட்டத்தில் தவறி விழுந்து கால் உடைந்து முடவன் ஆகிவிட்டான்.

 

பகுதி இரண்டில் அஷ்டாவதான அற்புதச் செயல்களைக் காண்போம்

 

தொடரும்……………

 

 

 

 

காந்திஜியே மருந்து! (Post No.3589)

Written by S NAGARAJAN

 

Date: 30 January 2017

 

Time uploaded in London:-  5-04 am

 

 

Post No.3589

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

அண்ணல் காந்தியடிகளின் அற்புத வாழ்க்கையில் ஆயிரக் கணக்கான உத்வேகமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.. அண்ணலுக்கு அஞ்சலி செய்யும் ஜனவரி 30ஆம் நாள் நினைவில் கொள்ள மூன்று சம்பவங்கள் இதோ:-

 

காந்திஜியே மருந்து!

 

ச.நாகராஜன்

 

நோய் தீர்த்த மஹாத்மா

 

1925ஆம் ஆண்டு. மஹாத்மா காந்திஜி கிழக்கு வங்கத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். டாக்காவில் எழுபது வயதான ஒருவர் காந்திஜியின் முன்னர் அழைத்து வரப்பட்டார். அவர் தீண்டத்தகாதவர் என்று  ஒதுக்கி வைக்கப்பட்ட ‘ஹரிஜன்’ ஆவார். அவர் கழுத்தில் காந்திஜியின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியைக் கண்டவுடன் பல முறை கையெடுத்து அவரைக் கும்பிட்ட வண்ணம் இருந்தார் அவர். பின்னர் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

அவருக்கு பாரிச வாயு தாக்கியிருந்தது. என்னென்னெவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.

 

கடையியில் காந்திஜியின் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர் நோய் அடியோடு  குணமாகி விட்டது. காந்திஜியின் நாமம் தான் தன்னைக் குணப்படுத்தியது என்பதால் அவரது திருவுருவப்படத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்.

 

அவரிடம் காந்திஜி, “உங்களை குணப்படுத்தியது நான் இல்லை. கடவுளே” என்றார். ஆனால் அவரோ அதை நமபத் தயாராக இல்லை.

அவருக்கு கடவுளே காந்திஜியின் போட்டோ வடிவமாக இருந்தார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்பதை அறிந்த காந்திஜி,” அன்பரே! எனக்காக ஒன்று செய்வீர்களா? என் போட்டோவை உங்கள் கழுத்திலிருந்து எடுத்து விடுங்களேன்” என்றார்.

 

 

காந்திஜி இப்படிக் கேட்டதும் உடனே அவர் சரி என்று சொல்லி அந்தப் போட்டோவை கழுத்திலிருந்து எடுத்து விட்டார்.

ஆனாலும் போட்டோவை எடுக்கச் சொன்ன கடவுள் தான் தன்னை குணப்படுத்தியதாக்ச் சொல்லிக் கொண்டே போனார்.

அவரது நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியவில்லை – காந்திஜி உட்பட!

 

மஹாத்மாஜி, நமக்கு சுதந்திரம் வந்து விட்டதா?

 

மஹாத்மாவின் தண்டி யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தண்டிக்கு அருகில் உள்ள கரோடி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த பஞ்ச காகா படேல் என்பவரும் அவர்களில் ஒருவர்.

 

 

தண்டியில் நடந்த உப்பு சத்யாக்ரஹத்தில் பங்கேற்றமைக்காக பிரிட்டிஷ் அரசு அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது.

அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரி அவரிடம், “பார்த்தாயா! உனக்கு நேர்ந்த கதியை. இப்போது ஒரு இஞ்ச் நிலம் கூட உன்னிடம் இல்லாமல் போய் விட்டது உனது வீடும் சேர்ந்து போய் விட்டது” என்றார்.

 

 

“அனாவசியமாக நீங்கள் கவலைப் படவேண்டாம். இந்தியா சுதந்திரம் அடையும் வரை நான் அவற்றைத் திருப்பிக் கேட்க மாட்டேன்: என்றார் காகா.

 

1937இல் பம்பாய் பிரஸிடென்ஸியில் காங்கிரஸ் அரசை அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பி.ஜி.கேர்  காகாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினார்.

அதில் தனது அரசு அவரது நிலத்தையும் வீட்டையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக எழுதியிருந்தார்.

 

 

ஆனால் காகா இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் அதைத் திருமப்ப் பெறப் போவதில்லை என்று தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து அதை இப்போது பெற முடியாது என்று தெரிவித்து விட்டார்.

 

1947 ஆகஸ்டும் வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. காகாவிற்கு இப்போதும் ஒரு கடிதம அரசிடமிருந்து வந்தது. அவர் தனது சொத்திற்கு உரிமை கோரலாம் என்றும் அரசு அவற்றைத் திருப்பித் தரத் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த முறை அவர் தனது குருநாதர் காந்திஜியிடம் சென்று கேட்டார் இப்படி: “பாபுஜி! நீங்கள் விரும்பிய சுதந்திரம் வந்து விட்டதா?”

 

காந்திஜி, “துரதிர்ஷ்ட்வசமாக இந்தக் கேள்விக்கு இல்லை என்று தான் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

காகா அரசிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் தனது சொத்துக்கள் தனக்குத் திருப்பித் தரப்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்!

 

டாக்டரா, வக்கீலா

 

ஆகாகான் அரண்மனையில் இருந்த போது ஒரு சமயம் காந்திஜிக்கு மலேரியா ஜுரம் வந்து விட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பி.சி.ராய் (பின்னால் மேற்கு வங்க முதல் அமைச்சரானவர்) அப்போது பம்பாயில் இருந்தார். ஆனாலும் அவரை காந்திஜிக்கு மருத்துவம் பார்க்க பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கவில்லை.

 

 

ஒரு வழியாக பெரிய போராட்டத்திற்குப் பிறகு அனுமதியைப் பெற்ற பிதான் ராய் காந்திஜியிடம் வந்தார்.

சிகிச்சை பெற காந்திஜிக்கு விருப்பமில்லை

 

காந்திஜியிடம் அவர், “நான் யாருக்கு சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மோஹன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு அல்ல. நாற்பது கோடி பேரின் பிரதிநிதிக்கு அல்லவா சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன். அவர் வாழ்ந்தால் நாற்ப்து கோடி பேரும் ஜீவித்திருப்பார்கள். அவர் இல்லையேல் நாற்பது கோடிப் பேரும் இறந்து விடுவார்கள்” என்றார்.

 

 

 

இதைக் கேட்ட காந்திஜிக்கு பதில் சொல்ல முடியாமல் போனது. ஒரு நிமிடம் பேசாமல் இருந்த் அவர், “பிதான், நீங்கள்ஜெயித்து விட்டீர்கள். எனக்கு நீங்கள் சிகிச்சை அளிக்கலாம், நீங்கள் தரும் மருந்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒன்று, டாக்டருக்கு படித்ததற்கு பதிலாக நீங்கள் வக்கிலுக்குப் படித்திருக்கலாமே. நன்றாக வாதிடுகிறீர்கள்” என்றார்.

உடனே பிதான், “அது ஏனென்றால் கடவுளுக்குத் தெரியும், ஒரு நாள் அவரது அபிமான புத்திரனுக்கு நான் மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று. அதனால் தான் நான் டாக்டருக்குப் படித்தேன்” என்று பதில் சொன்னார்.

:  ”பார்த்தீர்களா! இப்போதும் கூட் டாக்டரை விட நீங்கள் சிறந்த வக்கீலாகவே வாதிடுகிறீக்ள்” என்றார் காந்திஜி!

அனைவரும் நகைத்தனர்!

 

ஸ்பரிசவேதி கல்லானது தன்னைத் தொட்ட எதையும் தங்கமாக்கி விடுவது போல,  காந்திஜியிடம் ஈடுபட்ட அனைவரும் தங்கமாகி விடுவார்கள்; அன்புமயமாகி விடுவார்கள்.

 

அவ்ரை நினைவைப் போற்றி அஞ்சலி செய்வோருக்கும் கூட இது பொருந்தும்!

 

********* .

சிம்பல் SYMBOL மயம் உலகம்!(Post No.3586)

Germany Stamps with Swastika

Written by S NAGARAJAN

 

Date: 29 January 2017

 

Time uploaded in London:-  5-29 am

 

 

Post No.3586

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா 20-1-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

சிம்பல் மயம் உலகம்!

 

ச.நாகராஜன்

 

சிம்பல் (Symbol) எனப்படும் அடையாளக் குறியீடு அல்லது சின்னம் இன்று உலகில் பெற்றுள்ள முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் சுருங்கி விட்ட உலகத்தில் எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் ஒரு மௌன மொழியாக, பல இடங்களில் உயிர் காக்கும் கருவியாக, சிம்பல் விளங்குகிறது.

 

 

எதிரிலே ஒரு பாலம் வருகிறது, பாதை வளைகிறது, மெதுவாகப் போ, ஆபத்தான ஹேர் பின் பெண்ட் என்றெல்லாம் இந்த சிம்பல்கள் சுட்டிக் காட்டுவதால் அல்லவா மனிதன் உயிரிழப்பு இல்லாமல் நிம்மதியாக ஒரு இடத்தைச் சென்று சேர முடிகிறது!

மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை சிம்பல்களினால் படைக்க முடியும் என்று இந்த அடையாளக் குறியீட்டில் ஆர்வம் உள்ளவர்கள்  சொல்கின்றனர்.

 

 

ஹென்றி ட்ரைஃபஸ் (Henry Dreyfuss )   என்பவர் இந்த அடையாளங்களைத் தொகுப்பதில் முன்னோடி. சுமார் இருபதினாயிரம் சிம்பல்களை அவர் உலகெங்குமிலிருந்து பல்வேறு நாகரிகங்கள், நாடுகளிலிருந்து தொகுத்திருக்கிறார். சிம்பல் சோர்ஸ்புக் (Symbol Sourcebook) என்ற அவரது புத்தகம் ஆயிரக்கணக்கான சிம்பல்களைச் சித்தரித்து அவற்றின் அர்த்தத்தையும் விளக்குகிறது; பார்ப்போருக்குப் பிரமிப்பையும் தருகிறது.

 

 

வரலாறில் சிம்பல்களின் தாக்கம் மகத்தானது.

இரண்டாம் உலகப்போரில் அசுர சக்தியாக விளங்கிய ஹிட்லர் பல நாடுகளுக்கும் சிம்ம சொப்ப்னமாக இருந்தான். அவனது கொடியில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் முடிவில் அவன் வீழ்ச்சியையே அடைந்தான்; தற்கொலை செய்து கொண்டான்.

ஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் தவ்றாமல் இடம் பெறும் சின்னமும் இதுவே.

இதில் இரு வகை உண்டு. வலப்பக்க சுழற்சி உடைய ஸ்வஸ்திகா தைவிக் ஸ்வஸ்திகா என்று குறிப்பிடப்பட்டு நல்லனவற்றைத் தரும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இதையே ஹிந்து ஆலயங்களில் காணலாம்,

 

 

ஆனால் உலகின் அதிர்ஷ்டத்தின் காரணமாக ஹிட்லர் ஸ்வஸ்திகாவின் சுழற்சியை இடப்பக்கமாக மாற்றி அதை 45 டிகிரி கோணத்தில் வேறு வளைத்து தீமையைத் தரும் ஆசுரிக் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தான். விளைவு, அசுர வேகத்தில் முன்னேறிய அவன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.

பண்டைய ரோமில் பாதாளக் கல்லறைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது ஒரு அதிசய செய்தி. திபெத்திய சுவடிகள், குகைகள் மற்றும் ஆலயங்களிலும் ஸ்வஸ்திகா இடம் பெற்றுள்ளது.

 

 

 

இரண்டாம் உலகப் போரில் வி (V) என்ற வெற்றிச் சின்னத்தை தன் இரு விரல்களில் மூலம் காட்டினார் வின்ஸ்டன் சர்ச்சில். கையின் பின்புறம் தன்னை நோக்கி இருந்து ‘வி’-ஐப் பார்ப்போருக்குக் காண்பித்தால்,அது வெற்றி.

 

 

காண்பிப்பவரை நோக்கி உள்ளங்கை இருந்து இரு விரல்களைக் காண்பித்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்தும் சைகை.  சர்ச்சில் வெற்றிக்கான சைகையை வடிவமைத்து 1941, ஜூலை,20 ஆம் தேதி பிபிசி மூலம் பிரிட்டனில் அதை பிரபலப் படுத்தினார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆரும் இந்த வி சைகையையும் இரட்டை இலையையும் மக்களிடையே உற்சாகமாகப் பரப்பி தொடர் வெற்றி கண்டதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

ஆக உலக தலைவர்கள் அனைவருமே சிம்பல்களில் தனிக் கவனம் செலுத்துவது அதன் மூலம் மக்களை உத்வேகமூட்டி ஒரு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்கே.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008ஆம் ஆண்டு தனது தேர்தல் பிர்ச்சாரத்தின் போது தவறாமல் கையில் எடுத்துச் சென்றது ஹனுமானின் படத்தையே. இதை அப்போதைய எகனாமிக்ஸ் டைம்ஸ் (10-6-2008இதழ்) வெளியிட்டது.

 

 

இஸ்ரேலில் புனிதமாகக் கொண்டாடப்படும் ஸ்டார் ஆஃப் டேவிட் தென்னிந்தியக் கோவில்களில் தவறாமல் இடம் பெறுகிறது. முருகனின் அருளைப் பெற ஷட் கோணத்தை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வழி படுகின்றனர்.

ஸ்ரீ சக்ரத்தின் பெருமையை அலெக்ஸி குலைச்சேவ் என்ற ரஷியர் பிரம்மாண்டமான் ஆய்வு செய்து பிரமிக்க வைக்கும் உண்மகளை ஆய்வு முடிவாகத் தந்திருக்கிறார்.ஸ்ரீ சக்ரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும், அத்துடன் கூட இன்னும் விளங்கிக் கொள்ள் முடியாத விடை காண இயலாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் உள்ளன என்கிறார் அவர். ஸ்ரீ சக்ரத்தில் உள்ள சிக்கலான கணிதத்தை நவீன தலைமுறை கம்ப்யூட்டர்கள் கூட விடுவிக்க முடியவில்லை என்ற அவரது கூற்று நம்மை பிரமிக்க வைக்கிறது!

இந்த யந்திரத்தின் பல்வேறு ம்ஹிமைகளைப் பட்டியலிடும் அவர் எப்படி இந்த யந்திரம் பண்டைய காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்று வியக்கிறார்!

 

புத்த மதத்தினரின் தர்ம சக்கரம் உள்ளிட்ட நல்ல அடையாளக் குறியீடுகள் காலம் காலமாக பலன் அளித்து வருவதை பௌத்தர்கள் உணர்ந்து இன்றும் அவற்றை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட சிம்பல்களை இனம் காட்டி உலகெங்கும் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள் பணத்தில் கொழிப்பது கண்கூடாக நாம் இன்று பார்க்கும் உண்மை.

 

அமெரிக்க டாலர் இன்றும் உலகின் செல்வாக்கு மிக்க கரன்ஸியாக விளங்குவதற்கான காரணம் அதில் உள்ள பிரமிடும் கண்ணுமே என்பதை சிம்பல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (பாக்யா இதழில் அமெரிக்க டாலர் மர்மம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது). அமெரிக்காவை நிறுவும் போது அதை ஸ்தாபித்த தலைவர்கள் செல்வாக்கு மிக்க சக்தியாக அமெரிக்காவை நீடுழி காலம் இருக்குமாறு செய்ய  இப்படிப்பட்ட பல இரகசிய சிம்பல்களை அமெரிக்க வாழ்க்கை முறையில் புகுத்தி விட்டிருக்கின்றனர் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.


 

உலகியல் வாழ்க்கைக்கு இன்று இன்றியமையாதது சிம்பலே. கணிதத்தின் சமன்பாடுகள், தொழிற்சாலையில் பல விஷயங்களை எளிதில் சுட்டிக் காட்டும் வழிகாட்டிகள், அறிவியலில் பலவற்றையும் விளக்கும் விளக்கக் குறியீடுகள், நெடுஞ்சாலைகள், விமானதளங்கள், கடல் வழிகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் வழிகாட்ட உதவும் அடையாளச் சின்னங்கள் ஆகியவை மட்டும் இல்லையெனில் இன்று வாழ்க்கை முறையாக நடைபெறாது. சிம்பல் இல்லாத உலகம் விபத்துள்ள உலகமாக ஆகி விடும்.

நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு சிம்பலைத் தேர்ந்தெடுக்க அவரவர் வாழ்க்கை முறை, தேசீயம், மதம் வழி வகுக்கிறது.

இந்த சிம்பல்களில் வெவ்வேறு வண்ணங்களும் சேர்க்கப்படும் போது அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகி விடுகிறது. கலர் தெராபி என்பது இன்றைய உலகில் பெரும் சிகிச்சை முறையாக உருவெடுத்து வரும் நிலையில் வண்ணங்களை இடம் அறிந்து பாரம்பரியமாக உள்ள சிம்பல்களில் நமது முன்னோர் இணைத்திருப்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தியே!

சரியான சிம்பலை ஒருவர் நாடி அதை உரிய அளவின் படி செய்து நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டால் அது அவருக்கு வேண்டியதைத் தந்து விடும். இதன் உண்மையை அனுபவத்தில் அறியலாம்!

மொத்தத்தில் சிம்பல்  மயம் உலகம்!

*****

 

ஆண்டவா! என்னால் பிரயோசனம் உனக்கு ஏதுண்டு? பட்டினத்தார் கேள்வி (Post No.3585)

Written by London swaminathan

 

Date: 28 January 2017

 

Time uploaded in London:-9-50 am

 

Post No.3585

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

கடவுளிடம் பட்டினத்தார் ஒரு கேள்வி கேட்கிறார்:

 

ஆண்டவா! தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அந்தத் தங்கத்தினால் கொஞ்சம் பிரயோசனம் உண்டு; ஆனால் அவர்களால் தங்கத்துக்குப் பிரயோஜனம் உண்டா? அது போல நீ அருள் மழை பொழிவதால் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பலன் உண்டு. ஆனால் என்னைப் போன்றவர்களால் உனக்கு ஏதேனும் பலன் உண்டா?

 

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்

குண்டு பொன்படைத்தோன்

தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்

கேதுண்டத் தனமையைப் போல்

உன்னாற் பிரயோசனம் வேணதெல்

லாம் உண்டு உனைப் பணியும்

என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?

காளத்தீயீச்சுரனே! —- பட்டினத்தார்

 

 

பட்டினத்தாராவது கொஞ்சம் மரியாதையுடன் ஒரு கேள்வி கேட்டார். திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகரோ சிவ பெருமானைக் கிண்டலே செய்கிறார்!

யார் கொலோ சதுரர்?

 

இதோ பார்! சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத என்னை நான் உனக்கு தந்தேன். என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே எனக்குத் தந்து விட்டாயே! யார் புத்தி சாலி? நீயே சொல் — என்று சிவ பெருமானை நக்கல் செய்கிறார்.

 

தந்தது  உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்?

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்!

 

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறையுறை சிவனே

எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே

–திருவாசகம், மாணிக்கவாசகர்

 

(சதுரர்= புத்திசாலி, கெட்டிக்காரர்)

ஆதிசங்கரர்

ஆதி சங்கரரோவெனில் வேறு பாணியில் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்; நீயோ சூரியன் சந்திரன் முதலிய எல்லா ஜோதிகளுக்கும் ஒளியூட்டுபவள்; பார்! உன்னை ஒரு தீவாரதனை என்னும் சிறிய தீபத்தைக் காட்டி திருப்தி செய்கிறேன்! (அதாவது சின்ன விளக்கைக் காட்டி உன்னை ஏமாற்றுகிறேன்; நீயோ வெள்ளமென அருள் மழை பொழிகிறாய்)

 

ப்ரதீப ஜ்வாலாபிர் திவசகர நீராஜன விதி:

சூதாச்ஸூதேச் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநித சௌஹித்யகரணம்

த்வதீயபிர் வாக்பிஸ் தவ ஜனநி வாசாம் ஸ்துதிரியம்

–நூறாவது பாடல், சௌந்தர்யலஹரி

 

பொருள்:-

வாக்கிற்குப் பிறப்பிடமாகிய தாயே! உன்னுடைய வாக்குகளால் அமைந்த இந்த உனது பாமாலையானது, தீவட்டி கொண்டு சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலவும், அமுதம் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் தாரை வார்த்துக் கொடுப்பது போலவும், கடலுக்குச் சொந்தமான நீரால் கடலுக்கே தர்ப்பணம் செய்வது போலவும் இருக்கிறது.

 

–Subham–

 

பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் ! (Post No.3580)

Written by S NAGARAJAN

 

Date: 27 January 2017

 

Time uploaded in London:-  6-25 am

 

 

Post No.3580

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 20

இந்தக் கட்டுரையில் பரிபாடல் திரட்டில் வரும் 1,3,8 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

       பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !

 

                        ச.நாகராஜன்

 

 

பரிபாடல் திரட்டில் முதலாம் பாடல்

 

 பரிபாடல் திரட்டு 13  பாடல்களைக் கொண்டுள்ள நூல். முதலாம் பாடல் திருமாலைப் பற்றியது. இருந்தையூர் அம்ர்ந்த இறைவனின் புகழ் பாடும் இந்தப் பாடலில் அந்தணர் இருக்கை பற்றிய வரிகள் வருகின்றன.  இந்தப் பாடல் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டது.

 

 

ஒருசார்- அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி

விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி  (வரிகள் 18-20)

இதன் பொருள்:

 

ஒரு சார் – ஒரு பக்கத்தில்

அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – தர்மத்தொடு  வேதத்தினைப் பின்பற்றித் தவம் புரியும்

விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவு இல்லா அந்தணர் –புகழ் வாய்ந்த புனித நூல்களில் நன்கு புலமை பெற்றோர், நீதியின்று திறம்பாத அந்தணர்

ஈண்டி – சேர்ந்து வாழ்வோர்

என இப்படி அந்தணர் வாழ்க்கை வேதத்தின் அடிப்படையில் விளங்கும் வாழ்க்கை என்று புகழ்ந்து உரைக்கப்படுகிறது.

அடுத்து வையையில் அந்தணர் நீராட விரும்பாததை கீழ்க்கண்ட வரிகள் காரணத்துடன் தெரிவிக்கின்றன.

 

பார்ப்பார் நீராட மாட்டார்கள்                        ஈப்பாய அடு நறாக் கொண்டது இவ்யாறு என்ப

பார்ப்பார் ஒழிந்தார் படிவு                                               மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று                     அந்தணர் தோயலர் ஆறு                                  வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென                                   ஐயர், வாய்பூசுறார், ஆறு (வரிகள் 58-63)

 

 

இந்த ஆற்றில் ஈக்களும் மதுவும் உள்ளது. என்று அந்தணர் அந்த ஆற்றை விட்டு நீங்கினர். மைந்தர் மற்றும் மகளிர் இதில் நீராடியதால் அவர்களின் நறுமணம் இதில் கலந்துள்ளதால் இது தூய்மை அற்றது என்று கூறி அந்தணர் அதில் நீராடவில்லை. – நீரானது பூக்களின் மதுவால் வழுவழுப்பாகியுள்ளது என்று கூறி அவர்கள் தங்கள் வாயையும் நீரால் கழுவ மறுத்தனர்

அந்தணர்கள் தங்களின் தூய்மையைக் காக்கும் விதத்தை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

 

 

பரிபாடல் திரட்டில் மூன்றாம் பாடல்

பரிபாடல் திரட்டு மூன்றாம் பாடல் வைகை நதியைப் பற்றியது. இதுவும் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டதேயாகும்.

அறவோர் உள்ளார் அரு மறை காப்ப (முதல் வரி)

என்ற வரியில் அருமறை காப்பதைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அறவோர் உள்ளார் என்பதால் தர்ம வழியில் நிற்பவர் அந்தணர் என்பது உரைக்கப்படுகிறது. அவர்கள் வேதத்தைக் காத்து வருபவர்கள் என்பதையும் பாடல் வரி தெரிவிக்கிறது.

 

 

பரிபாடல் திரட்டில் எட்டாம் பாடல்                               இந்தப் பாடல்  புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் வருகிறது.

நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியின் சிறப்பை பாடல் வர்ணிக்கிறது.                                                        பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த                        நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம இன்றுயில் எழுதல்   (வரிகள் 7,8,9)

 

என்னும் வரிகளில் பிரம்மாவையும் அவன் நாவில் வந்த வேதம் பற்றியும் சிறப்புறக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.பூவினுள் பிறந்தவனான ப்ரம்மாவின் நாவினுள் பிறந்த வேதத்தின் குரல் எழுப்புதல் அல்லாது சேரனின் வஞ்சியும் சோழனின் கோழி எனப்படும் உறையூரும் கோழி கூவி எழுவது போல மதுரை மா நகரம் கோவி கூவி எழாது என்பது பாடலின் பொருள்.

 

 

அதாவது சேரனின் நகரமும் சோழனின் நகரமும் சாதாரணமாக கோழி கூவி எழும். ஆனால் பாண்டியனின் மதுரை மாநகரமோ அந்தணர் வேதத்தை ஓதும் குரல் கேட்டே எழும். புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் ஓத அந்த இனிய ஓசையிலேயே மதுரை தன் காலைப் பொழுதைத் தொடங்கும் என்று அழகுறப் புலவர் விளக்குகிறார்.

 

 

முடிவுரை

 

இதுகாறும் இருபது அத்தியாயங்களில் சங்க இலக்கிய நூல்களில் அந்தணரும் வேதமும் சொல்லப்படும் இடங்களின் ஆய்வுத் தொகுப்பைக் கண்டோம்.

 

சங்க காலத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தைத் தெளிவாக இப்பகுதிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில் அந்தண்ர் என்போஈர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்  செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

 

. என்ற குறளைப் பார்த்தால் அந்தணர் என்போர் மற்ற அனைத்து உயிர்களிடமும் அருளுடன் நடக்கும் தன்மை கொண்டிருக்கும் அறவோர் என்பது பெறப்படுகிறது.

 

தன்னலம் பாராமல் பிறர்க்குரியாளராக அவர்கள் திகழக் காரணம் அவர்கள் ஓதும் வேதமும் அதில் கூறப்பட்டுள்ள அற வாழ்க்கையுமே காரணம் என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

காழ்ப்புணர்ச்சியற்ற ஒன்று பட்ட தமிழகத்தில் வேதத்தின் இடம் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதை ஓதும் அந்தணர் அந்த வேதச் சிறப்பால், அதை ஓதி அதன் படி நடந்ததால் சிறப்பினைப் பெற்ற்னர். இமயம் முதல் குமரி வரை பரவியிருந்த ஒரே பண்பாடு வேதப் பண்பாடே என்பதையும் இந்தப் பாடல்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 

பின்னாளில் ஏற்பட்ட ஏராளமான படையெடுப்புகள் – கிரேக்கப் படையெடுப்பு, முகலாயரின் படையெடுப்பு, வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் கொண்ட படையெடுப்பு என பல படையெடுப்புகளும் இந்த ஒன்று  பட்ட வாழ்க்கையைக் குலைக்க ஏராளமான முயற்சிகளை எடுத்தன. என்ற போதிலும் அடிப்படைப் பண்பு குறையாமல் இன்றும் பாரதப் பண்பாடு ஒன்றெனத் திகழ்கிறது.

 

என்ற போதிலும் இடைவிடாது பல நூற்றாண்டு தொடர்ந்த கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் பாரத சமுதாயம் சற்றே இரையாகி விட்டதை நிரூபிக்கும் வகையில் இன்றைய சில பிளவுகள் நம்மிடையே ஊடுருவி இருக்கின்றன.

அவற்றைக் களைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பண்பாடு  ஒன்றே என எடுத்துக் காட்ட இந்த வேதமும் அந்தணரும் என்ற பொருள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

இனி அடுத்த பகுதியில் பழக்க வழக்கங்கள், இறை வழிபாடு, நம்பிக்கைகள் எப்படி நம் தேசத்தில் ஒன்றாகவே விளங்கின என்பதை ஆராய்வோம்.

இதுவரை இதைப் படித்தவர்களுக்கு நன்றி. இனி அடுத்த பாகத்தைத் தொடர்வோம்.

                முதல் பாகம் முற்றிற்று