நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை! (Post No.5032)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 10-31 AM (British Summer Time)

 

Post No. 5032

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

அஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.

 

கண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.

 

இதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

தண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-

1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.

 

2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.

 

  1. தண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது

 

4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது

 

  1. அல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது

 

  1. மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.

 

ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.

 

புத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்கடல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்

 

ஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.

 

இப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.

 

ஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.

 

ரிக்வேதக் கவிதை 3-33

 

விபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

 

விஸ்வாமித்ரர்–

அடடா! என்ன அற்புதம் ! மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு! போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.

 

இந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள்  போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள்! அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே!

 

தாய் போன்ற சுதுத்ரி நதியே! சௌபாக்கியவதியான விபாஸையே! கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே!

 

 

இரண்டு நதிகளும் சொல்லுகின்றன

நாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ?

விஸ்வா:-

 

நான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது  ஓடாமல்தான் நில்லேன்.

 

நதிகள் பதில்

விருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

 

விஸ்வா

நல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்

 

நதிகள் பதில்

 

ஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.

விஸ்வா:

சஹோதரிகளான நதிகளே! நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்

நதிகள் பதில்

ஓ, கவிஞரே! நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.

விஸ்வா:–

நதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்

 

பரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர்.  உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்;  உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.

 

எங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.

 

 

இது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)

இந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது?

விஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும்  கடந்து சென்றனர்.

 

பாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்

நதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.

காளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு  இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.

 

‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.

 

-சுபம்-

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 1 (Post No.4150)

Written by S.NAGARAJAN

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 6-01 am

 

Post No. 4150

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

4-8-2017 பாக்யா வார இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை (ஏழாம் ஆண்டு 24வது கட்டுரை)

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 1

 ச.நாகராஜன்

 

“இரஸவாதம் பற்றிச் சொன்னவர்களுடைய கொள்கை இரசாயனத்தின் அடிப்படையிலான ஒரு அதீத கற்பனை அல்ல என்பதை எனது ஆரம்ப கால் ஆராய்ச்சிகளில் நான் தெரிந்து கொண்டேன். அது உலகத்திற்கும் மூலக்கூறுகளுக்கும் ஏன் மனிதனுக்கே கூடப் பொருந்தும் ஒரு தத்துவம் என்பதைக் கண்டு கொண்டேன்: – இரஸவாதம் பற்றி டபிள்யூ.பி. யேட்ஸ்

 

 

    இரஸவாதம் என்றும் அல்கெமி (Alchemy) என்றும் அனைவரும் அறிந்திருக்கும் வார்த்தையின் அர்த்தம் ஈயத்தை எப்படித் தங்கம் ஆக்குவது என்பதற்கான வழியைக் கூறும்  வித்தையாகும்!

 

   பல சித்தர்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாகும் இரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பதாக வழிவழியாக கர்ண பரம்பரைக் கதைகள் பல உண்டு.

     மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் கூட ஈயத்தைத் தங்கமாக்கும் முயற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டதுண்டு. சிலர் வெற்றியையும் பெற்றிருப்பதாக சில நூல்கள் கூறுகின்றன.

 

 

     விஞ்ஞானிகளும் இந்த இரஸவாத வித்தைக்கு விலக்கல்ல. உலகின் மிகப் பிரபல விஞ்ஞானியும் பேரறிஞருமான சர் ஐஸக் நியூட்டன் விஞ்ஞானத்தில் பல விதிகளைக் கண்டு உருவாக்கியவர். இது அவரது ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு பக்கத்தில் அவர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி; அத்துடன் மட்டுமல்லாமல் இரஸவாதத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்டு பல்லாண்டுக் காலம் தன் கவனத்தையும் ஆராய்ச்சியையும் அதில் செலுத்தியவர்.

அவரது விஞ்ஞான விதிகள் பிரசுரிக்கப்பட்டாலும், அவரது இரஸவாத ஆராய்ச்சிக் குறிப்புகள் பெரிய அளவில் வெளி உலகிற்குத் தெரியவில்லை; அந்தக் குறிப்புகள் பிரசுரிக்கப்படவும் இல்லை.

 

 

        இரஸவாதக் கல்லைத் (Philosophers Stone) தேடி அவர் அலைந்தார். இந்தக் கல்லை சிந்தாமணி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஸ்பரிசவேதி – அதாவது தொட்டதெல்லாம் தங்கமாக்கும் கல் என்றும் சொல்வர்.

     தனக்கு முன்னால் இது பற்றி ஆராய்ச்சி செய்த அனைவரது ஆய்வையும் நியூட்டன் சேகரித்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் சங்கேதமாகக் குறிப்பிட்ட குறிப்புகளிலிருந்து இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் முயன்றார்.

 

 

தமிழில் சித்தர் பாடல்களில் ‘இரு குரங்கின் கை என்று மூலிகையின் பெயரைச் சங்கேதமாகச் சொல்வர். அது உண்மையில் ‘முசுமுசுக்கையைக் குறிப்பிடுவதாகும். இதே போல ஆங்கிலத்திலும் சங்கேத வார்த்தைகள் இருந்தன.

‘அது வெள்ளி அல்ல; டயானா டவ்ஸ்,(Not silver but  Diana’s Doves) ‘இழிவான வேசியின் மாதவிலக்கு உதிரம் (Menstrual  blood of the sordid whore) போன்ற இரகசிய வார்த்தைகள் அவரைக் குழப்பின. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு குறியீட்டு பாஷையில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். இவற்றை ஆராய்ந்த நியூட்டன் தனது குறிப்புகளைத் தனியே எழுதலானார்.

 

 

   நியூட்டனின் குறிப்புகளை வைத்து இந்தியானா பல்கலைக்கழகத்தினர் அதை சரளமான இன்றைய ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய முயன்றனர். சாடர்ன் (சனி கிரகம்) என்ற வார்த்தை காரீயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நியூட்டனின் ஆதாரமான உலோகம் ஸ்டிப்னைட் (Stibnite) என்பதாகும். பிரகாசிக்கும் ல்யூனா ( Luna ) பற்றியும் க்ரீன் லியான் ( Green Lyon – stibnite) பற்றியும் அவர் விளக்கமாக எழுதியுள்ளார். சுமார் 30 ஆண்டுக் காலம் அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

 

 

    1669ஆம் ஆண்டிலிருந்து 1693 முடிய அவர் செய்த ஆராய்ச்சிகளும் அதைப் பற்றிய குறிப்புகளும் கைப்பிரதியில் எழுதப்பட்டு இருந்த, 348 பழுப்பேறிய காகிதங்கள் அப்படியே பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேறியிருந்தாலும் அவர் ஈயத்தைத்  தங்கமாக்குவதில் வெற்றி அடையவில்லை.

ஆரம்ப காலத்தில் அறிவியல் அறிஞர்கள் எந்த உலோகத்தையும் தங்கமாக்குவது சாத்தியம் இல்லை என்றே கருதினர். என்றாலும் கூட இப்படி ‘மாற்றும் வித்தை இரசாயனத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தத் துறையில் இருந்தவர்கள் அதில் அதிகம் ஈடுபாடு காட்டினர்.

இப்போது நவீன அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் இப்படி ஈயத்தை தங்கமாக்குவது சாத்தியம் தான் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

 

 

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் லாரன்ஸ் பிரின்ஸிப் (lawrence Principe) என்ற ஒரு விஞ்ஞானி கெமிகல் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் பழைய இரசாயன புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஆச்சரியகரமான ஒரு விஷயம் அவருக்குக் கிடைத்தது. ஆம், சர் ஐஸக் நியூட்டன் தன் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள் அவருக்குக் கிடைத்தது. இதை அனைவரும் மறந்தே விட்டார்கள்.

 

இந்தக் கைப்பிரதி ‘தங்கத்திற்குச் சமானம் என்று அவர் ‘எடை போட்டார்.

 

உண்மை தான், எதையும் தங்கமாக ஆக்குவது எப்படி என்ற நியூட்டனின் குறிப்புகள் அல்லவா அது?! ‘தங்கமான நோட்ஸ் தானே! அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் (Johns Hopkins University)  கெமிஸ்டாகவும் வரலாற்றாசிரியனாகவும் பணியாற்றுபவர்.

 

தன் கையில் மஞ்சள் நிறமாக பழுப்பேறிக் கிடந்த பேப்பர்களை அதிசயமாக அவர் பார்த்தார். உலகின் தலை சிறந்த ரகசியம் தன் கையில் கிடைத்திருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.

 

இரஸவாதக் கல் என்று உலகமெல்லாம அதிசயமாகப் பேசப்படும் கல்லை எப்படிச் செய்வது என்பதை அதில் நியூடன் எழுதியிருந்தார். அந்தக் கல் இரும்பு, ஈயம் போன்றவற்றைத் தங்கமாக மாற்றி விடும்!

 

தனது ஆராய்ச்சியின் மீது நியூடனுக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது. நியூடனுக்கு இந்த இரஸவாதக் கல் பற்றிய நம்பிக்கை பிரபலமான பிரிட்டிஷ் கெமிஸ்டான ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவரால் வலுப்பட்டது. பாயிலும் இரஸவாதக் கலையில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் நியூட்டனின் சம காலத்தவர்.

 

 

லாரன்ஸ் பிரின்ஸிப்புடன் இன்னொருவரும் இந்த அபூர்வ ஆய்வில் இணைந்தார். அவர் பெயர் வில்லியம் நியூமேன். (William Newman)

 

இந்த இருவரும் இணைந்து யோசித்தனர்.இரு பெரும் விஞ்ஞானிகளான ஐஸக் நியூட்டனும் ராபர்ட் பாயிலும் மிகத் தீவிரமாக இரஸவாதத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்டனர் என்றால் அது நம்பக்கூடாத விஷயமல்ல; மிகவும் முக்கியமான விஷயம் என்று அவர்கள் தீர்மானித்தனர்.

புதிய அல்லாய்கள் உருவாகி இருப்பது எதனால்? ஏராளமான அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுவதும், பிக்மெண்ட் எனப்படும் வண்ணமூட்டும் பொருளூம் உற்பத்தி செய்யப்படுவதும் புதிய அறிவியலினால் தானே! வடிகட்டல் எனப்படும் புதிய செய்முறை விஞ்ஞான முன்னேற்றத்தினால் அல்லவா ஏற்பட்டது. புதிய ஃபெர்ஃப்யூம்கள் உற்பத்தி செய்யப்படுவதும் அறிவியல் முன்னேற்றத்தினால் அல்லவா! ஆக இப்படி பல வித மாற்றங்களை ஏற்படுத்தும் செய்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டபோது ஈயத்தை தங்கமாக மாற்ற முடியாதா என்ன என்று அவர்கள் இருவரும் விவாதித்தனர்.

ஆகவே திரும்பத் திரும்ப புது மாதிரியான முறைகளாலும் சோதனைகளினாலும் தங்கள் ஆய்வைத் தொடர்வது என்று தீர்மானித்தனர்.

 

 

பழைய கால இரஸவாத புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து 15, 16, 17ஆம் நூற்றாண்டில் எந்த மாதிரியான சோதனைச்சாலைகள் இருந்தனவோ அதே மாதிரியான சோதனைச்சாலைகளையும் அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளையும், பாத்திரங்களையும் அப்படியே உருவாக்கி சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தனர்.

 

                     (தங்கமாக்கும் இரகசியம் தொடரும்)

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ல்யூதர் பர்பாங்க் (luther Burbank 1849-1926) என்பவர் பிரபலமான தாவர இயல் விஞ்ஞானி. அவர் புதுப்புது தாவர வகைகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார். அவர் உருவாக்கியவை அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்று அவருக்கு வெற்றியைத் தந்தன. ஆனால் ஒரே ஒரு தாவர வகையில் மட்டும் அவர் தோற்றுப் போனார்.

 

புது வகையான வால்நட்டை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்போது இருக்கும் வால்நட்டை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துச் சாப்பிடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. காரணம் அதன் கடினமான மேல் ஓடு தான். அதை மட்டும் மெல்லியதாக மாற்றி விட்டால் பருப்பை எடுப்பது சுலபமாயிற்றே என்று அவர் நினைத்தார்.

 

தான் நினைத்தபடியே அப்படி ஒரு வால்நட்டையும் உருவாக்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. அதற்கான காரணம் விசித்திரமானது.

 

சந்தையில் அதை வாங்க ரெடியாக ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். அவர் உருவாக்கிய மரத்தை வளர்க்க ஏராளமானோர் முன் வந்தனர்.

 

என்றாலுன்ம் கூட பருப்பை உடைப்பது முன்பு கடினமாக இருந்தது; இப்போதோ வெகு எளிது என்பதால் பறவைகளும் அணில்களும் ஒரு பருப்பை கூட மரத்தில் விட்டு வைக்கவில்லை.

 

இதைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தத் தாவரத்தில் மட்டும அவர் தோல்வியுற்றார்.

 

அவர் ஒன்று நினைக்க பறவைகளும் அணில்களும் வேறு மாதிரியாக நினைத்து விட்டன!

***

.