
Compiled by London swaminathan
Date: 16 December 2016
Time uploaded in London:- 19-57
Post No.3455
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! — என்றெல்லாம் ஒலி பெருக்கி அலறும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
–என்று பாரதியார் பாடுவார்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் — என்று அப்பர் பெருமான் பாடுவார்; ஆடுவார்.
ஆனால் மாணிக்க வாசகரும் வள்ளுவரும் மட்டும் “பயப்படுங்கள்” என்று அறிவுரை வழங்குவர்!
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (குறள் 428)
பயப்படவேண்டியதைக் கண்டு பயப்படாமல் இருபது முட்டாள்தனம். பயப்பட வேண்டிய பழி,பாவங்களுக்கெல்லாம் அஞ்சுவது புத்திசாலிகளின் செயல் என்கிறார் வள்ளுவர்.
இதே கருத்தை புத்தரும் தம்மபதத்தில் (317) சொல்கிறார். சங்க இலக்கியத்தில் கலித்தொகையிலும் புற நானூற்றிலும் புலவர்கள் பாடுகின்றனர்:-

அஞ்சுவதஞ்சா அறனிலி ( கலித்தொகை 42-26)
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் — புறம் 182
வள்ளுவர், கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி (புறம் 182) ஆகியோர் பொதுப்படையாக பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.
ஆனால் பயப்பட வேண்டிய விஷயங்கள் என்ன என்று சொல்லி பட்டியல் ஏதும் தரவில்லை. மாணிக்கவாசகர் மட்டும் ஒரு பட்டியல் தருகிறார்.
நமக்குத் தெரியும்: எதை நாம் நாலு பேருக்கு முன்னால்,குறிப்பாக, தாய் தந்தையருக்கு முன்னால் செய்ய அஞ்சுவோமோ அவை எல்லாம் பயப்பட வேண்டிய விஷயங்கள். ஆயினும் மாணிக்கவாசகர் பட்டியல் கொஞ்சம் விளக்கமாகவே அமைந்துள்ளது.
மாணிக்கவாசகர் இதற்காக தனியாக பத்துப் பாடல்களே பாடிவிட்டார். அவை திருவாசகத்தில் அச்சப்பத்து என்ற பகுதியில் உள்ளன.
“பாம்புக்குப் பயப்ப்ட மாட்டேன்; சிவன் திருவடிகளை அடைந்தும் வேறு ஒரு தெய்வம் உண்டு என்று கருதி சிவன் புகழைப் பாடாமல் இருக்கிறார்களே அவர்களைக் கண்டு அஞ்சுவேன்; அதாவது மதம் மாறிய சைவர்கள் அச்சத்திற்குரியோர்.
ஆசை எழுந்தாலும் வினைக்கடலில் அழுந்தினாலும் பயப்பட மாட்டேன்; ஆனால் சிவனைத் தவிர மற்ற தேவர்களைக் கொண்டாடுவோரைக் கண்டால் அஞ்சுவேன்
வேலாயுதத்துக்கு பயப்பட மாட்டேன். வேல் விழியாளுக்கும் பயப்படமாட்டேன். ஆனால் சிவனை வெறுப்போரைக் கண்டால் பயப்படுவேன்

மாதர்களை கண்டு அஞ்சேன். சிவனைத் தொழாதவரைக் காணின் அஞ்சுவேன்
நோய்களுக்கு அஞ்சேன்; பிறப்பு-இறப்புச் சுழலுக்கு அஞ்சேன்; சிவனடியார்களில் திருநீறு அணியாதோரைக் கண்டால் அஞ்சுவேன்
நெருப்புக்கு அஞ்சேன்; பெரிய மலைகளே பெயர்ந்தாலும் அஞ்சேன்;
திருநீறு அணியாதவர்கலைளைக் கண்டால் பயம் வந்துவிடும்.
பழிகள், மரணம் இவைகளுக்கெல்லாம் பயமில்லை. சிவனடிகளைப் பெரிய தாமரைப்பூக்களைக் கொண்டு அர்ச்சிக்காதோரைக்கண்டு அஞ்சுவேன். தில்லைக் கூத்தனின் நடனத்தைப் பார்காதவரைக் கண்டால் அஞ்சுவேன்
யமனுக்கோ கூரான ஆயுதங்களுக்கோ அஞ்சமாட்டேன். ஆனால் சிவ பெருமானைத் தியானித்து நெஞ்சம் உருகாதோரைக் கண்டு அஞ்சுவேன் என்று கூறி அச்சப்பத்து பாடல்களை முடிக்கிறார்.
–சுபம்–