என் அம்மாவிடம் கற்றது!

Santanam Rajalakshmi 2

Sri V Santanam and Srimati Rajalakshmi Santanam

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
அனுபவக் கட்டுரை எண்:1327; தேதி:– 4 அக்டோபர் 2014.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு! இதையே திருப்பியும் போடலாம். காக்கா போல இருந்தாலும் அம்மா, அம்மதான் என்று. எல்லோருக்கும் அவரவர் தாயார் கற்றுத் தந்த விஷயங்கள் பல இருக்கும். ஆயினும் நான் சொல்ல வருவது மிகவும் பொதுவான விஷயம். எல்லா பெண்களுக்கும் பலன் தரும் விஷயம்.

என் அம்மாவும் செட்டியாரும் ஒன்று! “இல்லை” என்று சொல்லக்கூடாது என்ற ‘’பாலிசி’’யை Policy (இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்கள். செட்டியார் கடையில் போய் ஒரு பொருள் இருக்கிறதா என்று கேட்டால் ‘அங்கே இல்லாவிட்டாலும் ’இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.

அரை கிலோ சர்க்கரை கொடுங்கள் என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் அன்று சர்க்கரை ‘’ஸ்டாக்’’ இல்லாவிடில் ‘’வெல்லம் இருக்கிறது அரைக் கிலோ போடட்டுமா?’’ என்பார். சிறுவயதில் இருந்து அவருடைய அப்பா கற்றுக் கொடுத்தது என்றும் எதிர்மறை எண்ணம் (Negative Thinking) கூடாது. இது தான் என் அம்மாவின் பாலிசியும்!!

அம்மா, கொஞ்சம் ரசம் போடு என்றால், இன்னும் ஒரு முறை சாம்பார் போடுகிறேனே மிக நன்றாக இருக்கும் என்பாள். அதாவது ரசம் இல்லை என்று பொருள். எங்களுக்கோ பயங்கர கோபம் வரும். இல்லை என்று சொல்லித் தொலையேன் என்போம். கொஞ்சமும் கோபிக்காமல் இதோ சாம்பார் என்று கொண்டு வருவாள். இப்போது பெரிய சொற்பொழிவு களுக்கும் பயிற்சிகளுக்கும் பணம் கட்டி ஒரு நாள் முழுதும் உடகார்ந்த பின்னரும் அந்த சொற்பொழிவாளர் கற்றுத் தருவது இது தான்: No Negative Thinking நோ நெகட்டிவ் திங்கிங்.

ஆண், பெண் ஜாதகம் வரும்போது யாராவது நெகட்டிவாக (Negative remarks) ஏதேனும் சொல்லிவிட்டால் பலர் ஜாதகத்தை விலக்கி வைத்து விடுவார்கள். ஏனெனில் அசரீரி கேட்டுவிட்டது என்பதால்!!

இன்னும் கொஞ்சம் போடட்டுமா?

சாப்பாடு பரிமாறும்போது, வந்த விருந்தாளிகளிடம் போதுமா? போதுமா? என்று கேட்டுக்கொண்டே பரிமாறக் கூடாது. இன்னும் கொஞ்சம் போடட்டுமா? என்று கேட்டுக் கொண்டே பரிமாற வேண்டும். அப்போதுதான் சாப்பிடுவர்களுக்கு இன்னும் சமையல் அறையில்—பாத்திரத்தில்– நிறைய இருக்கிறது என்ற நம்பிக்கை வரும்.

கல்யாணம் ஆன கொஞ்ச நாளில் என் மனைவி போதுமா, போதுமா? என்று கேட்டுக் கொண்டே எனக்குப் பரிமாறியதை பார்த்துக் கொண்டிருந்த அம்மா, வெடுக்கென்று சொல்லிவிட்டார், “இதோ பார், இப்படி பரிமாறக் கூடாது. இன்னும் கொஞ்சம் போடுகிறேன் என்று சொல்” – என்றார்.

சாப்பாடு பரிமாறும் பெண்கள் சமைத்த பெரிய சோற்றுப் பானையை பரிமாறும் இடத்துக்குக் கொண்டுவர முடியாது. ஒரு சின்னத் தட்டில்தான் கொண்டு வரமுடியும். சாப்பிடும் விருந்தாளிகளுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் எல்லா பெண்களும் இதைக் கடைப்பிடிக்கலாம். இன்னும் கொஞ்ச போடுகிறேனே என்று சொல்லிப் பரிமாறுங்கள்!!

காட்டில் தவம் செய்து ஆப்பிள் பழம் போன்ற சிவந்த கன்னங்கள் — நிலத்தில் பல அடி தூரத்துக்குப் புரளும் ஜடா முடி — நீண்ட நெடிய உருவம் — ஆகியவற்றுடன் வெளியே வந்த சாந்தானந்த சுவாமிகளை புதுக்கோட்டையில் இருந்து சிலர் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

என் தந்தை தினமணி பொறுப்பாசியராக ( V Santanam, News Editor, Dinamani, Madurai) இருந்ததால், அவர் செய்யவிருக்கும் யாக யக்ஞங்கள், புவனேஸ்வரி கோவில் திட்டங்களுக்குப் பத்திரிக்கையின் ஆதரவு நாடி அவரைச் சிலரழைத்து வந்தனர். வெளுத்தது எல்லாம் பால் (All that is white is Milk, All that glitters is God) என்று கருதும் என் தந்தை காவித்துணி போர்த்திய எல்லோருக்கும் உடனே ஆதரவு கொடுத்து பெரிய செய்திகள் போட்டுவிடுவார். இதில் பல மோசடி (Frauds) மாதாஜி, ஆனந்தாக்களும் அடக்கம். ஆனால் சாந்தானந்த சுவாமிகள் உலகமே அறியாத ஒரு உத்தமர் என்பது அவர் பேச்சிலிருந்தே தெரிந்தது. அடிக்கடி ‘’நான் சொல்வது எல்லாம் ஸத்யமான வார்த்தைகள்’’- என்பார்.

‘’இன்று அவருக்கு பிட்சை (Biksha) உங்கள் ஆத்தில்தான்’’ (பிராமணர்கள் பேசும் தூய தமிழ் — அகத்தில் ) என்று பக்தர்கள் சொல்லவே என் அம்மாவும் தடபுடலாக பாயசம் வடை, அப்பளம், கறி, கூட்டு என்று சமைத்து விட்டார். சுவாமிகளோ சமையல் அறைக்குள் நுழைந்தவுடன் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மூன்றே கவளங்கள் கையில் போடுங்கள் என்று வாங்கிச் சாப்பிட்டார். என் அம்மாவுக்குக் கண்களில் இருந்து பொலபொல என்று கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு சுவையான சமையலை ருசி பார்க்காமல் சாப்பிடுகிறாரே என்று!! அவர் முற்றும் துறந்த முனிவர்!

அதனால் என்ன? அத்தனை வகைகளையும் நாங்களும் சாமியாருடன் வந்த பக்தர்களும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்டுவிட்டோம்! தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயாதா?

முந்தைய அனுபவக் கட்டுரைகள்:
1.என் அப்பாவிடம் கற்றது (posted on 8-9-14)
2.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் (posted on 9-9-14)