‘இனிய தமிழ்நாடு’ – கம்பன் பாராட்டு (Post No. 3510)

Written by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  7-58 am

 

Post No.3510

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழ் மொழியைப் பாராட்ட வாய்ப்பு கிடைத்தால் கம்பன் நழுவ விடுவானா? பால காண்டத்தில் அவன் துவக்கிய பாராட்டுரை கிஷ்கிந்தா காண்டம் வரை நீடிக்கிறது. அகத்திய மகரிஷியைக் குறிப்பிட்ட

போதெல்லாம் தமிழையும் சேர்த்தே பாடினான்.

 

இப்பொழுது, சீதையைத் தேடுவதற்குப் புறப்பட்ட வானரங்கள் ஒவ்வொரு திசையை நோக்கியும் பட்டாளம் பட்டாமாகப் புறப்பட்டார்கள். தென் திசை நோக்கிச் சென்ற வானரங்கள் குறித்து கம்பன் பாடுகிறான்:–

 

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ

மனையின் மாட்சிகுலாம் மலை மண்டலம்

வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்

இனிய தென்  தமிழ்நாடு சென்றெய்தினார்

-ஆறுசெல் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானர வீரர்கள், நீர்வளம் கொண்ட சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, இல்லறத்தின் சிறப்புமிக்க சேரநாட்டைச் சேர்ந்தார்கள். அங்கும் சீதையைக் காணாமல், இனிய தமிழ் வழங்கப் பெறுகின்ற தென் பாண்டிநாட்டைச் சேர்ந்தார்கள்.

அத்திருத் தகு நாட்டினை அண்டர்நாடு

ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ

எத்திறத்திலும் ஏழ் உலகும் புகழ்

முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்

 

பொருள்:_

ஏழ் உலகத்திலும் புகழப்படுகின்ற முத்துக்களையும் இயல்-இசை-நாடகம் என்ற மூன்று தமிழையும் தன்னிடத்தில் தோற்றுவித்து பெருமை பெறுவதால் செல்வத்தால் சிறப்பு பெற்ற அந்தப் பாண்டிய நாட்டை தேவர் உலகம் ஒத்திருக்கும் என்றால் அது ஏற்புடையதுதானே.

 

முத்தும் முத்தமிழும் தந்த நாடு பாண்டியநாடு!

 

இதைத் தொடர்ந்து வரும் மூன்றாவது பாட்டிலும்

 

என்ற தென் தமிழ்நாட்டினை எங்கனும்

சென்றுநாடித் திரிந்து திரிந்தினார்

பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்

துன்றல் அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்

 

பொருள்:

ஒழுக்கத்தில் சிறந்த அந்த வானரர்கள், அழகிய தமிழ்நாடு என்று மேலே சிறப்பிக்கப்பட்ட பாண்டிய நாட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். அடர்ந்த இருள் போன்ற கூந்தலை உடைய சீதையைக்  காணாமல்,  துன்பம் கொண்டவர்களாகி இறக்கும் நிலமைதனை எட்டிப்பார்த்து மேலே சென்றார்கள்.

 

இதை சங்க காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் 30,000 வரிகளில் ஏறத்தாழ 20 இடங்களில் மட்டுமே தமிழ் என்ற சொல்லைக் காணலாம்!

 

தமிழ்நாடு என்ற சொல் பரிபாடல் திரட்டில் (9-1) என்ற ஒரே இடத்தில் மட்டும் காணப்படும். பொதுவாகத் திரட்டில் வரும் விஷயங்கள் பிற்காலத்தியவை என்ற கருத்து உண்டு.

 

ஆனால் தமிழகம் என்ற சொல் மிகப்பழைய பகுதியான புறநானூற்றிலேயே (168-18) காணப்படுகிறது.

 

அந்த காலப் புலவர்கள், தமிழ்  வாழ்க என்று வெறும் கூச்சல் போடுவோர் அல்ல. ஆக்கபூர்வமான வேலைகள் செய்து தமிழை வளர்த்தவர்கள்!

 

—Subahm–