
Written by London Swaminathan
Date: 11 NOVEMBER 2017
Time uploaded in London- 13-37
Post No. 4387
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும்? இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.
ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா? என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர் பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.

அப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–
உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை
உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி
எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற
கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே
–நாலாம் திருமுறை
பொருள்
தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.
அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என் உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

பதவுரை:
உள்குவார் உள்ளத்தான் =நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவன்;
உணர்வு என்னும் பெருமையானை = பரமசிவன் தலைசிறந்த பெருமையாகிய அருளை உடையவன்;
உள்கினேன் ஊறி ஊறி உருகினேன்; ஊறுவது அன்பு, உருகுவது உள்ளம்;
எள்கினேன் = அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன்;
இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு = இரு பக்கமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் நடுப்பக்கத்தில் நின்று கொண்டு போக வழி இல்லாமல் சிக்கிய எறும்பு போல;
எறும்பு= உள்ளத்துக்கு உவமை.
மாணிக்கவாசகரும் இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்– — என்று பாடியது காண்க.
–நீத்தல் விண்ணப்பம்



—சுபம், சுபம்–