Compiled by London swaminathan
Article no. 1702; dated 9 March 2015
லண்டன் மாநகர நேரம் காலை 9-25
நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், 5 குருக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி செய்யுட்களை சிறு வயது முதலே போதித்து வந்தனர். சில செய்யுட்கள் பஞ்ச தந்திர, ஹிதோபதேசக் கதைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டன. இதனால் அவை சிறுவர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும். அது மட்டுமல்ல. ஏதேனும் வழக்கு வாய்தாவில் தீர்ப்புச் சொல்லவும் இவை பயன்பட்டன. இதோ பழங்காலப் பொக்கிஷம்:
தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:
- பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.
ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி
அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி
ஐந்து தாய்
ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–
ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச
பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி
இன்னொரு ஸ்லோகம் பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது: எந்த வீட்டில் தாய் இல்லையோ, மனைவி இனிமையாகப் பேசுவதில்லையோ அவன் காட்டிற்கு ஏகுவதே மேல்; ஏனெனில் அவனுக்குக் காடுதான் வீடு!
மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா ச ப்ரியவாதினீ
அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம்
–பஞ்சதந்திரக் கதைகள்
ஐந்து குரு
குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:
மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:
அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.
பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ
பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ
—மஹா பாரத – வன பர்வ – 204-27
யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:
அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.
குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா
மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா
–யோக வாசிஷ்டம் 1-60
உண்மை அன்பு
அம்மா, அப்பா, நண்பர்கள் ஆகியோருடைய உள்ளத்தில் உண்மையிலேயே கருணை இருக்கும். ஆனால் மற்றவர்களோ வெனில் காரியம் நடக்க வேண்டுமானால் (பொய்) அன்பை வெளிப்படுத்துவர்.
மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவத் ஹ்ருதயம் ஹிதம்
கார்ய காரணத்தஸ்சான்யே பவந்தி ஹித புத்தயஹ
இவை எல்லாம் காரண காரியங்களுடன் சொல்லப்பட்ட பொன்மொழிகள். சில இக்காலத்துக்குப் பொருந்தாவிடினும் அக்காலச் சிந்தைப் போக்கையும் சமுதாய நடைமுறைகளையும் அறிய உதவும்.
வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க பொது அறிவு!
-சுபம்-





You must be logged in to post a comment.