Compiled by Santanam Nagarajan
Article no. 1701; dated 9 March 2015
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
उष्ट्रकण्टकभक्षणन्यायः
ustrakantakabhaksana nyayah
உஷ்ட்ரகண்டகபக்ஷண நியாயம்
உஷ்ட்ரம் – ஒட்டகம்; கண்டகம் – முள்; பக்ஷணம் – உணவு
ஒட்டகமும் முள்ளும் பற்றிய நியாயம் இது.
தாவரங்களுள் முள் என்றால் ஒட்டகத்திற்கு அதிகம் பிடிக்கும். ஆனால் அதைச் சாப்பிடும்போதோ அதன் வாயிலிருந்து ரத்தம் ஒழுகும். அதன் வாயில் முள் குத்தலினால் ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்று! என்றாலும் கூட அது முள் சாப்பிடுவதை விடுவதில்லை!
என்ன கஷ்டம் வந்தாலும் சரி தான், தான் செய்வதை ஒருவன் விடுவதில்லை என்னும் சமயத்தில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். நியாயமாகப் பார்த்தால் அவன் செய்வது சரியில்லை என்றாலும் கூட தனக்குப் பிடித்ததை ஒருவன் செய்யும் போது அது ஒட்டகம் சாப்பிடும் முள் போல என்று சொல்லப்படும்.
एकसम्बन्धिदर्शने अन्यसम्बन्धिस्मरणम्
ekasambandhidarsane anyasambandhismaranam
ஏகசம்பந்திதர்ஷனே அன்யசம்பந்தி ஸ்மரணம்
ஒன்றை இன்னொன்று தொடர்பு படுத்துவது பற்றிய நியாயம் இது!
ஒரு சம்பந்தியைப் பார்க்க்கும் போது இன்னொரு சம்பந்தியின் ஞாபகம் ஏற்படுகிறது.
ஒன்றை இன்னொன்று ஞாபகப்படுத்தும் போது அல்லது அதே போல இருக்கும் இன்னொன்றைச் சுட்டிக் காட்டும் போது தொடர்பைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சொல்லப்படும்.
काशकुशावलम्बनन्यायः
kasakusavalambana nyayah
காஷகுஷாவலம்பன நியாயம்
துரும்பைப் பிடிப்பது அல்லது புல்லைப் பிடிப்பது பற்றிய நியாயம் இது.
கப்பல் ஒன்று நீரில் மூழ்குகிறது. பயணிகள் நீரில் மூழ்குகின்றனர். அப்போது எப்படியேனும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் கையில் கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்ப அனைவருமே நினைப்பர். கரை ஓரமாக வளர்ந்திருக்கும் நாணலாகவோ அல்லது தர்ப்பைப் புல்லாகவோ இருந்தாலும் சரி, அதைப் பிடித்து நதியின் வெள்ளத்திலிருந்து தப்ப நினைப்பதே மனித இயல்பு.
இந்த நியாயம் பட்டிமன்றம் அல்லது விவாத மேடையில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு விவாதத்தில் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையில் சிறிய முக்கியமற்ற ஒரு விஷயம் கைக்குக் கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு (தொங்குவது போல) விவாதத்தைத் தொடர முயலும் ஒருவரின் நிலையை இந்த நியாயம் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது! ஆனால் இப்படி (விதண்டா) வாதம் புரிவோர் அனைவரின் ஏளனத்திற்கும் இலக்காவர்.
Birmingham Donkey Sanctuary, UK
गर्दभरोमगणनन्यायः
gardabharomaganana nyayah
கர்தப ரோம கணன நியாயம்
கர்தபம் – கழுதை; ரோமம் – மயிர் அல்லது ரோமம்
கழுதையின் ரோமம் பற்றிய நியாயம் இது.
கழுதையே பொதுவாக அசுத்தம் என்று அனைவரும் நினைக்கும் ஒரு பிராணி.
அதனுடைய ரோமமும் கூட யாருக்கும் பிடிக்காது. ஆக அதை வெட்ட நினைக்கும் ஒருவனை என்ன சொல்வது? அந்த ரோமத்தால் அவனுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை!
பயனற்ற ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும் போது இந்த நியாயம் சுட்டிக்காட்டப்படும்.
चक्रभ्रमणन्यायः
cakrabhramana nyayah
சக்ர ப்ரமண நியாயம்
சுழற்றி விடப்படும் சக்கரம் பற்றிய நியாயம் இது.
ஒரு சக்கரத்தைச் சுழற்ற அதை இயக்கும் விசை வேண்டும். விசை இருக்கும் வரை அது ஓடிக் கொண்டிருக்கும். அந்த விசை நிறுத்தப்பட்டு விட்டால் அது அந்த விசையின் விளைவு இருக்கும் வரை ஓடும். பின்னர் நின்று விடும்.
ஒரு இயக்கமானது அதை ஆரம்பித்து அதை இயக்குபவர் இயக்கும் வரை நன்கு இயங்கும். அது நிறுத்தப்பட்டு விட்டால் இயக்கும் தளர்வடைந்து விடும்.
சமூக இயக்கமாக இருந்தாலும் சரி, ஒரு மத ரீதியிலான இயக்கமாக இருந்தாலும் சரி அதை ஊக்கப்படுத்தி செயல்படுத்துபவர் இருக்கும் வரை உற்சாகமாக இயங்கும். ஆனால் அந்த ஊக்கம் அதை இயக்குபவர் இல்லாத போதோ அல்லது அவர் செயல்படாத போதோ தானே நின்று விடும்.
இதைக் குறிக்கும் நியாயம் இது.இடைவிடாத ஊக்கமூட்டும் ஆற்றல் இருந்தால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் வெற்றியைக் கொண்டிருக்கும்!
*******************





You must be logged in to post a comment.