
Written by S NAGARAJAN
Date: 25 JULY 2018
Time uploaded in London – 16-04 (British Summer Time)
Post No. 5257
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் இடம் பெறும் உரைகளில் முதலாவது உரை கீழே தரப்படுகிறது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!
ச.நாகராஜன்
நமது உடல் 60 சதவிகித நீரைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள திரவங்களை சமனப்படுத்துவது, ஜீரணத்திற்கு உதவுவது, உடல் உஷ்ணநிலையைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஏராளமான பயன்களை நாம் அருந்தும் நீரே தருகிறது.
இன்றைய நாட்களில் பயணத்தின் போதும், வெளியிடங்களுக்குச் சாதாரணமாகச் செல்லும் போதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
இவை சுத்திகரிக்கப்பட்டவை என்ற எண்ணத்துடன் எடுத்துச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக இதைப் பயன்படுத்துவோர் உலக சுகாதார நிறுவனம் எனப்படும் World Health Organization இடம் தெரிவித்துள்ளனர்.
இதைப் பற்றி அக்கறை கொண்ட உலக சுகாதார நிறுவனம், பாட்டிலில் அடைத்து விநியோகிக்கப்படும் குடி நீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அபாயம் பற்றி ஒரு மதிப்பீட்டைச் செய்யப் பணித்திருக்கிறது.
மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் கலந்து உட்கொள்கையில் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அது ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறது.
வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பாட்டில் நீரை அருந்தி வருவதால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆராய்வது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் சுத்தம் பற்றிய ஒருங்கிணைப்பாளரான ப்ரூஸ் கார்டன் (Bruce Gordon) கூறியுள்ளார்.
பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப்பொருள்கள் எந்த அளவுக்கு தீமை பயக்கும், உடலுக்கென்று ஒரு பாதுகாப்பு அளவு இருந்தாலும் கூட இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பது அறிவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

உலக சுகாதார நிறுவனம் 9 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 11 வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 250 பாட்டில்களில் ஆய்வைச் செய்துள்ளது.
இந்தச் சோதனைகள் அனைத்தும் ஸ்டேட் யுனிவர்ஸிடி ஆஃப் நியூயார்க்கில் நடத்தப்பட்டுள்ளன.
ஆய்வின் முடிவில் ஒரு லிட்டர் குடிநீரில் சராசரியாக 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிக நுண்ணிய துகள்கள் பிளாஸ்டிக் என்று கருதப்படுபவை ஒரு லிட்டருக்கு சராசரியாக 314 இருக்கிறது.
உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் இந்த நுண்ணிய துகள்கள் வெளியேற வாய்ப்பு உண்டென்றாலும் பிளாஸ்டிக், சிதைவுறாத அபாயகரமான மாசு என்பது குறிப்பிடத்தக்கது காய்ச்சி ஆறிய நீர் எப்போதுமே நலம் பயக்கும் என்ற பண்டைய பழக்கம் இன்று அர்த்தமுள்ளதாக ஆகிறதல்லவா!
***
சுற்றுப்புறம் காப்போம்; எதிர்கால சந்ததியினரைக் காப்போம்!