
Written by S NAGARAJAN
Date: 30 December 2016
Time uploaded in London:- 10-25 AM
Post No.3497
Pictures are taken from different sources; thanks.
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 17
இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் மூன்றாம் பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.
பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3
ச.நாகராஜன்
பரிபாடல்
பரிபாடலின் மூன்றாம் பாடல் 94 அடிகளைக் கொண்டுள்ளது.
இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். பரிபாடலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும் ஒரு பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. மூன்றாம் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்டன் நாகனார். அழகுற அமைந்துள்ள இந்தப் பாடலில் பல பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்துடன் திருமாலின் பெருமையையும் அறியலாம்.
இந்தப் பாடல் திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள், முனிவரும் தேவரும், பாடும் வகை, வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும், வனப்பும் வலியும், சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள், நூல் வகை, யுக்ங்களிலும் ஆராயப்படும் சிறப்பு, நால் வகை வியூகம், பல திறப் பெயரியல்புகள் ஆகிய தலைப்புகளில் பிரிக்கப்பட்டு பொருளுரை வழங்கப்படுகிறது.

மா அயோயே! மா அயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி, விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்
திதியைன் சிறாரும் விதியின் மக்களும்
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலத்து
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும்,
நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை
;ஏஎர்,வ்யங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை,
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை 20
தீ செங் கனலியும் கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூவும்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்; எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள, அன்னச்
சேவலாய் சிறகாப் புலர்த்தியோய்’ எனவும்
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நூல் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை 30
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின், கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய் நயம் இல் ஒரு கை
இரு கை மாஅல்!
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணாதியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ?
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம்
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ:
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்
ந்ன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும். ‘செங் கண் மாஅல்! 60
ஓ! ‘எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;
உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே
பறவாப் பூவைப் பூவினோயெ!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமு
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை 80
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
இட வல! குட வல்! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!
தொல் இயல் புலவ! நல் யாழிப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்னை!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொரு மலர்ந்த
தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே!
அருமையான இந்தப் பாடலின் சிறப்பைச் சொல்லி மாளாது. படிக்கப் படிக்கத் தமிழ் இன்பம்; சொல்லச் சொல்ல சொல் இன்பம். நினைக்க நினைக்க பொருள் இன்பம் ஊறும்.
அமுதூறும் சொற்களில் மனம் ஆழ்ந்து பதிய பல முறை படித்த பின்னரே மனம் இதன் சிறப்பை உணரும். அப்படி ஒரு அழகிய பாடல்.
இதில் ஹிந்து மத தத்துவங்கள் ஏராளம் சொல்லப் படுகின்றன.
அதை ஆய்வது தனிப் பெரும் கட்டுரையாக அமையும்
நம் ஆய்வுக்கான பொருளான அந்தணரும் வேதமும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் பாடலில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அந்தணரும் வேதமும் பல்வேறு விதங்களில் புகழப்படுவதைப் பார்க்க முடியும்.
அவையாவன:

1)‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும் (வரிகள் 12,13)
இங்கு வாய் மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது
2) நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை (வரி 14)
இந்த வரியில் அந்தணரும் அவர் ஓதும் அரு மறையும் குறிப்பிடப்படுகிறது.
3) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! (வரி 42)
இந்த வரியில் வேதம் முதுமொழி என்று குறிப்பிடப்படுகிறது. திருமால் முதுமொழி முதல்வன் என விளிக்கப்படுகிறான்.
4 & 5) முன்னை மரபின் முதுமொழி முதல்வ?
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், (வரிகள் 47,48) இங்கு முதுமொழி என்றும் கேள்வி என்றும் வேதம் கூறப்படுகிறது.
6) ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம் (வரி 62)
இங்கு ஏஎ என்று சாம வேதத்தின் இசை இனிமை கூறப்படுகிறது.
7) வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; (வரி 66)
இங்கு வேதம் குறிப்பிடப்பட்டு வேதத்து மறை நீ என திருமால் போற்றப்படுகிறார்.
8) வாய்மொழி மகனொரு மலர்ந்த
தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே! (வரிகள் 93,94)
இங்கு வாய்மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது.
ஆக இப்படி எட்டு இடங்களில் அந்தணரும், வேதமும் குறிப்பிடப்ப்டுவதைக் காண்பதோடு மட்டுமின்றி ஹிந்து தத்துவங்கள் பல அழகுற அடுக்கப்படுவதையும் காண்கிறோம்.
இந்த ஒரு பாடல் மட்டுமே விரித்து உரைக்கப்பட்டால் சங்க காலத்தில் வேரூன்றி இருந்த ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை அறியலாம்.
அத்தோடு இந்தத் தொன்ம நம்பிக்கைகள் பாரத நாடு முழுவதற்கும் பொதுவான ஒன்றாக இருந்ததும் தெரிய வருகிறது
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;
உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே
என்று இந்த வரிகளில் சாம வேதத்தின் திரண்ட பொருள் கூறப்படுவதை வியப்புடன் பார்க்க முடிகிறது
இதைப் பாடிய புலவர் இளவெயினனார் அந்தணராக இருந்தால் சாம வேதத்தில் விற்பன்னராக அவர் இருந்ததோடு, அதை முறைப்படியும் இசைப்படியும் ஓதிய உத்தமர் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.
அவர் அந்தணர் இல்லை என்றால் அந்தணர் இல்லாத ஒருவரும் கூட வேதத்தின் உட்பொருளை அறிய முடியும், அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை பாடலிலிருந்து அறியலாம்.
சங்க காலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை என்பது தெளிவாகிறது.
ஒன்று பட்ட ஒரு ஹிந்து சமுதாயத்தையே சங்க இலக்கியத்தில் நாம் காண முடிகிறது.
**********

