கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

Picture shows Egyptian Standards

(English version of this article is also available: London swaminathan)

சிந்து சமவெளி முத்திரை ஒன்றில் ஒரு ஊர்வலக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் என்னதென்று இனம் காணப்படாத ஒரு பொருளையும், ஒரு மாடு அல்லது கன்றின் உருவ பொம்மையையும், மூன்றாவதாக ஒரு துணியையும் தூக்கிச் செல்கின்றனர். இதே போல எகிப்திலும் ஒரு ஊர்வலக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டுக்கும் சில அதிசய ஒற்றுமைகள் இருக்கின்றன.

சிந்து சமவெளியில் தூக்கிச் செல்லும் முதல் பொருள் பற்றிப் பல கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் இதை சோமரசம் பிழியும் வடிகட்டிப் பாத்திரம் என்று நினைக்கின்றனர். இன்னும் சிலர் இந்த முதல் பொருள் ஒரு பறவைக் கூண்டு என்றும் அதற்குள் உயிருள்ள பறவையை எடுத்துச் சென்றனர் என்றும் கருதுகின்றனர். நடுவிலுள்ள கன்றுக் குட்டி பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லை. படம் தெளிவாகவே இருக்கிறது.

எகிப்தில் நரமேர் (நர மேரு) என்பவருடைய சின்னத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கிறது. அதில் நான்கு பேர் உயர்ந்த கொடிக் கம்பில் நான்கு உருவங்களைத் தூக்கிச் செல்கின்றனர். முதல் இருவர் இரண்டு பறவைகள் உடைய கம்பத்தைத் தூக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து தோரணம் போல ஏதோ தொங்குகிறது. மூன்றாமவர் ஓநாய் வடிவ தெய்வத்தைத் தூக்கிச் செல்கிறார். நாலாமவர் ஏதோ ஒரு மூட்டை மாதிரி ஒன்றத் தூக்கிச் செல்கிறார்.

நரமேருவின் மற்றொரு பெயர் மனு.அவர் 5000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட முதல் மன்னர். எகிப்திய ஒநாய் தெய்வத்தின் பெயர் வெபாவெட்.

Picture shows Indus Valley procession

முதல் இரண்டு கம்பங்களில் தொங்கும் தோரணம் அல்லது துணி போலவே சிந்துவெளி ஊர்வலத்திலும் உள்ளது. ஆனால் சிந்துவெளி ஊர்வலக் காட்சி முழுதாக இல்லை. ஆக முதல் கொடி எகிப்தைப் போலவே இருந்திருக்கலாம். இதை அடுத்து வருபவர் கன்றுக்குட்டியைத் தூக்கிவருவதை எகிப்தின் ஒநாயுடன் ஒப்பிடலாம். அடுத்ததாக வரும் சிந்துவெளி ஆள் ஒரு பொருளைத் தூக்கிவருவதை சிலர் சோம பானம் பிழியும் கருவி என்றும் மற்றும் சிலர் உயிருடன் பறவை உள்ள கூண்டு என்றும் கருதுகின்றனர்.

ரிக்வேதத்தில் ஒரு மண்டலம் முழுதும் சோமப்பானத்தைப் பற்றிய பாடல்கள் இருப்பதை அறிஞர் உலகம் அறியும். சரஸ்வதி நதியின் தடயங்கள் கண்டுபிடிப்பு, சோமபானப் பாத்திரம் ஆகியவை வேத காலத்தை நோக்கி சிந்துவெளி நாகரீகத்தைத் தள்ளுகிறது. ஒரு ஆள் தூக்கி வரும் இந்த சோமபான பாத்திரம், ஒரற்றைக்கொம்பு மிருகம் காணப்படும் நூற்றுக் கணக்கான முத்திரைகளில் காணப்படுகிறது. இதை ஊதுபத்தி அல்லது சாம்பிராணி ஸ்டாண்டாக இருக்கலாம் என்று முன்னர் கருதி வந்தனர்.

சிந்து சமவெளி மற்றும் எகிப்து-இந்திய கலாசார உறவு பற்றிய ஏனைய பத்து கட்டுரைகளையும்  இதே “பிளாக்” கில் படிக்கலாம்.

Contact for further information: swami_48@yahoo.com