சென்னை வானொலி நிலயம் A (அலைவரிசை 720 Hz))யில் 21-5-2015 முதல் 30-5-2015 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு காலைமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள். உரைகளில் ஒன்று
Compiled by S NAGARAJAN
Article No.1914; Dated 6 June 2015.
Uploaded at London time: 5-16 am
காற்றைப் போற்றி ஒரு கவிதை
SCRIPT BY: ச.நாகராஜன்
உலகப் புகழ் பெற்ற கவிஞரான சைமன் ஆர்மிடேஜ் (Simon Armitage) காற்றைப் போற்றி ஒரு கவிதை எழுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தக் கவிதை சாதாரணமான பொருள் சார்ந்த சொல்லடுக்கு கவிதை மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் அறிவியல் உத்தியுடன் கூடிய கவிதையாகவும் அமைகிறது என்பதே இதன் சிறப்பு.
இந்தக் கவிதை 10 மீட்டர் நீளம் 20 மீட்டர் உயரமுள்ள ஒரு விசேஷப் பொருளில் சித்தரிக்கப்பட்டு நுண்ணிய மாசு நீக்கும் துகள்களினால் ஆன டைட்டானியம் ஆக்ஸைடால் பூசப்பட்டுள்ளது. டைட்டானியம் ஆக்ஸைடால் ஆன இந்த நுண்ணிய துகள்கள் சூரிய ஒளியையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தி நைட்ரஜன் ஆக்ஸைடு மாசுகளுக்கு எதிராகச் செயல்பட்டு காற்றைச் சுத்தப்படுத்துகிறது. இந்த விசேஷமான அமைப்பை ஷெபீல்டு பல்கலைக்கழகம் (SHEFFIELD UNIVERSITY) அமைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் 20 கார்களிலிருந்து வெளியாகும் மாசை இது நீக்க வல்லது.
2014ஆம் ஆண்டு மே மாதம் பல்கலைக் கழகத்திற்கு அருகே இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்பட்டது. இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இதன் அடுத்த பதிப்பு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
‘நான் காற்றின் புகழைப் போற்றி எழுதுகிறேன்’ என ஆரம்பிக்கும் இந்தக் கவிதை, ‘காற்று ஒரு பெரும் கடவுள் ஆகட்டும்’ என்று கூறுவதோடு, ‘எனது முதல் வார்த்தையும் ஒவ்வொருவருடைய முதல் வார்த்தையும் காற்று தான்’ என்று காற்றைப் போற்றி முடிகிறது.
இந்த அறிவியல் ரீதியிலான அமைப்பை விஞ்ஞானிகள் பலரும் இணைந்து செய்து முடித்தனர். உலகம் முழுவதற்கும் அற்புதமான செய்தியைத் தரும் இந்தக் கவிதையை படிக்கும் யாருக்கும் சுற்றுப் புறச் சூழல் கேட்டைப் பற்றியும் அதை நீக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஆழ்ந்த சிந்தனை எழும். அதையே தான் இதை எழுதிய கவிஞரும் விரும்புகிறார்.
மாசான நைட்ரஜன் ஆக்ஸைடை நீக்கும் இந்தக் கவிதை அமைப்பைப் பற்றி ஷெபீல்டு பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் டோனி ரையான் கூறுகையில், “அறிவியலும் கலையும் இணைந்த வேடிக்கையான இணைப்பு இது. நமது நகர்களின் சூழ்நிலையில் இருக்கும் மிக மோசமான காற்றின் தரத்தை உலகிற்கு இது எடுத்துக் காட்டும்” என்று கூறியுள்ளார்.
கவிஞரோடு சேர்ந்து நம்மில் ஒவ்வொருவரும் தூய்மையான காற்றின் புகழைப் பாடுவோம்! காற்றின் மாசை நீக்குவோம்!
*****************




You must be logged in to post a comment.