திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்! (Post No.5592)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 October 2018

Time uploaded in London – 6-41 AM (British Summer Time)

Post No. 5592

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்!

ச.நாகராஜன்

சீர்காழியில் அவதரித்து, தேவாரம் அருளிய திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.

ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும். அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.

அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.

அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.

 

அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.

இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டம் வருமாறு:-

1.116 திரு நீலகண்டப் பதிகம்  

பண் – வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.1
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.2
1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.3
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.4
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.5
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.8
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.9
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.10
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
1.116.11

(இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.) முதலாம் திருமுறை

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த திருக்கொடி மாடச் செங்குன்றூர் உள்ள மண்டலம் கொங்கு மண்டலமே என்று கொங்குமண்டலச் சதகத்தின் 48ஆம் பாடல் கொங்கு மண்டலத்தைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:-

திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்         பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்   திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்     வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே

இப்பாடலின் திரண்ட பொருள் : – சீர்காழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்த  மூர்த்தி நாயனார்  திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குத் திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியிருந்த சமயம் அவ்வடியார்களை நளிர் ஜுரம் தீண்டவே. “அவ்வினைக் கிவ்வினையாம்” என்ற பாடலைத் தொடக்கமாகக் கொண்டு பதிகம் அருளவே அவ்வூர் மட்டுமன்றி அந்நாடு முழுவதும் அந்நோய் தீர்ந்தது. அப்படி ஓதப்பெற்ற தலத்தைக் கொண்டது கொங்கு மண்டலமே.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

***