நான் பெருந்தமிழன்: பூதத்தாழ்வார் பெருமிதம்!! (Post No.3080)

IMG_5568

Written by London swaminathan

Date: 21 August 2016

Time uploaded in London: 20-06

Post No.3080

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

பன்னிரு ஆழ்வார்கள் பாடியது நாலாயிர திவ்யப்பிரபந்தம். 12 ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய மூவரும் முதல் மூவர் ஆவர். காலத்தாலும் மூத்தவர்கள். முதல் மூவரும் அந்தாதிகளாகப் பாடியுள்ளனர்.

 

பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியில் ஒரு நல்ல பாசுரம். அதில் அவர் தன்னை “பெருந்தமிழன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். இதோ பாருங்கள் பாடலை:–

 

யானே தவம் செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்

யானே தவம் உடையேன்; எம் பெருமான்! யானே

இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன்

பெருந்தமிழன் நல்லேன், பெருகு.

 

பாடலின் பொருள்:–

என் தலைவனே! எல்லாப் பிறவிகளிலும் தவம் புரிந்தவன் நான். அந்தத் தவத்தின் பயனைப் பெற்றவனும் நானே. சிறந்த தமிழ் மொழியால் சொல் மாலைகளை உன் திருவடிகளில் சூட்டினேன்; கலைகள் வல்ல பெருந்தமிழனும் அடியேனே.

நாயன்மார்களும் ஆழ்வார்களும் தாங்கள் செய்த பணிகளையெல்லம் தமிழின் பெயரால் செய்ததாகவே சொல்லுவர். அது மட்டுமல்ல. தமிழி ல் பாடியதைப் பெருமையாகச் சொல்லுவர். ஆண்டாள் “சங்கத் தமிழ் மாலை” முப்பதும் செப்பியவர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன்” என்று மற்ற அடியார்கள் அவரைப் போற்றுவர். சுருக்கமாகச் சொன்னால் தமிழும் தெய்வீகமும் ஒன்று.

IMG_5567

திருக்குறளும் பூதத்தாழ்வாரும்

திருக்குறளில் காணப்படும் ஒரு கருத்தும் பூதத்தாழ்வார் பாடலில் காணப்படுகிறது. ஒருவரை ஒருவர் பார்த்து எழுதினார் என்றோ பாடினார் என்றோ கருதத் தேவை இல்லை. இது குமரி முதல் இமயம் வரை உள்ள கருத்து.

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு — குறள் 247

 

“பொருள் இல்லாதவர்கு இவ்வுலத்தில் இன்பம் கிடைக்காதது போல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதோருக்கு சுவர்க்க லோகம் கிடைக்காது” –என்பான் வள்ளுவன்.

 

இதோ பூதத்தாழ்வார் பாடல்:-

பொருளால் அமர் உலகம் புக்கு இயல் ஆகாது;

அருளால் அறம் அருளும் அன்றே; அருளாலே

மா மறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே

நீ மறவேல் நெஞ்சே நினை

–இரண்டாம் திருவந்தாதி

IMG_5391

பொருள்:-

செல்வத்தால் சுவர்க்கம் செல்ல முடியாது; எம்பெருமான் அருளால், அறம் பொருள் இன்பம் கிடைக்கச் செய்வான். தனது அருளாலேயே வேதம் வல்லார்களுக்குத் தன்னைக் கொடுக்கும் நீலமணிவண்ணன் திருவடிகளை, நெஞ்சமே! நீ மறவாதே நினைத்துக் கொண்டிரு.

–subham–