பாரதி போற்றி ஆயிரம் – 31 (Post No.4637)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6-31 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4637

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 31

  பாடல்கள் 174 முதல் 179

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும்

 

களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக்

களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!

களைநீக்கித் தந்த கழனியிற் பலவாய்

கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்!

இருள்சூழ்ந் திருந்த இவ்வைய முழுதும்

எழக்கதி ரான இளைஞன் பாரதி!

எழுந்த கதிர்முன் மானிடச் சாதிக்கு

இரத்தம் ஊட்டினர் பாரதி தாசன்!

ஆதி பத்திய வேரறுக் குந்திறன்

ஆக்கித் தந்த வல்லவன் பாரதி!

அந்த வேரை அறுத்தபின் மறுவேர்

அண்டாது காத்தவர் பாரதி தாசன்!

நிலைகுலைந் திருந்த நெஞ்சினைத் தூக்கி

நில்லெனச் சொன்ன வல்லோன் பாரதி!

நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி

நிலைக்க வைத்தவர் பாரதி தாசன்!

எங்கள் நாடுஎங்கள் மொழியென

இயம்புந் திறனைத் தந்தவன் பாரதி!

இயம்ப மறுத்து ஏளனம் செய்தோர்

எலும்பை முறித்தவர் பாரதி தாசன்!

முன்னவர் சொன்ன பண்பா டனைத்தும்

முறையாய்த் தந்த மூத்தவன் பாரதி!

முறையாய்த் தந்ததை வகைவகை யாக்கி

முளைக்க விட்டவர் பாரதி தாசன்!

செந்தமிழ் மலரின் தேனுண்ண வாசலைத்

திறந்து விட்ட தலைவன் பாரதி!

திறந்த வாசலின் வழிப்புறம் மாடுகள்

செல்லாது காத்தவர் பாரதி தாசன்!

வகுத்தவன் முன்னோன்; காத்தவன் பின்னோன்!

வாழும் தமிழன் காவலர் இவர்கள்!

 

(வேறு)

 

பாருக்குள் ளேசம தர்மமும்ஒன்றிப்

      பற்றுஞ்ச கோதரத் தன்மையும்சொல்லி

யாருக்கும் தீமைசெய் யாமலேஎன்றும்

      அன்பு கொளுந்திறந் தந்தவன் முன்னோன்!

 

 

உண்மையின் பேர்தெய்ம் என்போம்அன்றி 

       ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம்பிறி(து)

      உள்ளமறைகள் கதையெனக் கண்டோம்!

 

 

கடலினைத் தாவும் குரங்கும்வெங்

       கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலேதெற்கில்

      வந்து சமன்செயும் குட்டை முனியும்

 

நதியினுள் ளேமுழு கிப்போய்அங்கு

       நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுறவே மணம் செய்ததிறல்

       வீமனும் கற்பனைஎன்றவன் முன்னோன்!

 

அன்னவன் கைகளிற் பட்டால்பிள்ளை

       அழுதகண் ணீரிலும் உதிரங் கொதிக்கும்

கன்னியர் நன்னெறி வீழமறம்

       காட்டு பவர்க்கவன் காட்டு விலங்காம்!

                         (நீண்ட கவிதை தொடரும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***