
PICTURE OF ACTORS FROM BHARATIYAR DRAMA (ACTED BY RAMANAN AND DIRECTED BY RAMAN)
Date: MARCH 23, 2018
Time uploaded in London- 7-36 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4842
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 464 முதல் 475
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.
மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி
10 முதல் 21 வரை உள்ள பாடல்கள்
பக்தி யிலக்கியம் என்றே தமிழைப்
பாரே போற்றிடினும்
சக்தி என்புகழ் பாடிய நூல்கள்
சாற்றும் படியில்லை
இக்க ணம்வரையில் எனக்கோர் காவியம்
ஏனோ எழவில்லை
தக்கநற் பட்டியல் இட்டுப் பார்த்தால்
தமிழ்நூல் அதிகமில்லை
சங்க இலக்கியத்துள் – சிவத்தைச்
சார்ந்தெனைச் சிலவரிகள் பாடிவைத்தார்
தங்கும் சிலம்பினிலே – இளங்கோ
தகவறு கொற்றவைத் துதியுரைத்தான்
கலிங்கத் துப்பரணி – கூத்தன்
கவித்துவ தக்கயா கப்பரணி
வலிமையைத் தருகின்ற – காளியாய்
வடித்தென் பெருமையைச் சாற்றினவே
குமர குருபரனோ – என்னைக்
குழந்தையாய் கண்டினிய கவிபாடினான்
அமர்ந் ததனைப்போலே – புலவோர்
அரும்பிர பந்தங்கள் சிலபாடினார்
தாயுமா னவனென்மேல் – செய்ய
தமிழ்ப்பதி கம்சில வடித்திட்டான்
ஏயும் வடிவுடைமாலை – வடலூர்
இராம லிங்கமும் கொடுத்திட்டான்
அபிராமி பட்டன்தான் – அரிய
அந்தாதி ஒன்றினைச் சூட்டிநின்றான்
அபிமானத் துடனதனை – இந்நாள்
அனைவரும் ஒருமனதாய் ஓதுகிறார்
என்புகழ் பாடயிவை போதுமோ?
இனியொரு வரைத்தமிழ் காணுமோ?
என்றயென் ஏக்கத்தைத் தீர்க்கவே
இங்குவந் தாய்நீயும் பாரதி
உன்செயல் யாவுமென் செயலதாய்
உரைத்திட்ட நீசக்தி தாசனாய்
என்றுமென் புகழ்தனைத் தீட்டினாய்
எண்ணற்ற கவிமலர்கள் சூட்டினாய்
எந்தன்மேல் அரியநற் காவியம்
ஏதும்நீ இயற்றாமல் போயினும்
செந்தமிழ்க் கூறிடும் பிரபந்தம்
சிறப்பாக உருவாக்கா திருப்பினும்
சந்தங்கள் நிறைந்தநற் பாக்களால்
சக்தியென் புகழ்நாளும் பாடினாய்
இந்நாளுக் கேற்றபடி தந்ததால்
எல்லோரும் என்புகழைப் பாடினார்
தேசவிடு தலைக்குந்தன் பாடல்கள் யாவும்
தேவையென்ற நிலை தொடர்ந்திட்ட போதும்
நேசமுடன் தேவியாவும் தனக்கெனவே கேட்டாள்
நறுமலர்கள் நாளுமிங்கு சூட்டிடுவேன் என்றாய்
பாசமுள்ள நின்வாழ்வில் சோதனைகள் யாவும்
பதைத்திடவே வந்திடினும் பலகவிதை தந்தாய்
பூசலற இக்கவியைச் செய்ததுநா னல்ல
புகலரும் பராசக்தி தானென்று சொன்னாய்
மூன்றுகா தலெனும் அரியநற் பாட்டில்
முளரிமா திருவரை முன்னுரைத் தாலும்
தோன்றிடும் காளியே அருளுவாள் யாவும்
தோத்திரம் செய்வமென என்திறம் கண்டாய்
ஆயிரம் தெய்வமென அறிவிலிகள் செல்வார்
அறிவொன்றே தெய்வமென சொன்னாய்நீ என்பார்
ஆயினதை பராசக்தி பூணுநிலை யென்றே
அறுதியிட்டுத் தெளிவுறவே ஆங்கதனில் சொன்னாய்
பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி
–Subham–