
WRITTEN BY S NAGARAJAN
Date: 30 November 2016
Time uploaded in London: 4-56 AM
Post No.3402
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
புத்த தரிசனம்
நல்ல கர்மங்களும் தீய கர்மங்களும் – அரசனின் கேள்வியும் ஆனந்தரின் பதிலும்!
ச.நாகராஜன்
நல்ல கர்மங்கள் எவை? தீய கர்மங்கள் எவை?
கோசல நாட்டு அரசன் பசநாடிக்கு சந்தேகம் வந்தது. அவன் புத்தரின் சீடரான ஆனந்தரின் காலில் அடி ப்ணிந்து விழுந்து கேட்டான்.
மன்னன்: பூஜ்யரே! முட்டாள்களும் புத்தியற்றவர்களும் மற்றவர்களைப் புகழ்கின்றனர் அல்லது இக்ழ்கின்றனர். அவர்கள் சொல்வதை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. பண்டிதர்களும் புத்திசாலிகளும் மற்றவர்களைப் புகழும் முன்னர் அல்லது விமரிசிப்பதற்கு முன் எதையும் ந்னகு ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்க்கின்றனர். அவர்கள் சொல்வதை நான மதிக்கிறேன். பூஜ்யரே! எந்த கர்மங்கள் அல்லது செயல்கள் துறவிகளாலும் பிராமணர்களாலும் இகழப்படுகின்றன? அதை எனக்குச் சொல்லி அருளுங்கள்!
ஆனந்தர்: மன்னனே! உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை திறமையற்று இருக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்.

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு, மனம் ஆகியவற்றால் திறமையற்ற செயல்கள் என்று கருதப்படுகின்றன?
ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை தீமை விளைவிக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்
மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு, மனம் ஆகியவற்றால் தீமை விளைவிக்கும் செயல்கள் என்று கருதப்படுகின்றன?
ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை அடக்கி ஆளும் கொடுமையைச் செய்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்
மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு மனம் ஆகியவ்ற்றால் அடக்கி ஆளும் கொடுமையைச் செய்வதாகக் கருதப்படுகின்றன?
ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவை எவை துன்பத்தை விளைவிக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்.
மன்னன்: எந்தச் செயல்கள் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் துன்பத்தை விளைவிப்பதாகக் கருதப்படுகின்றன?
ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எந்தச் செயல்கள் தன்க்கோ அல்லது பிறருக்கோ கடும் தொல்லையைக் கொடுக்கிறதோ அல்லது தனக்கும் பிறருக்கும் சேர்ந்து தொல்லை கொடுக்கிறதோ எது திறமையற்ற செயல்களைக் கூட்டி திறமையுள்ள செயல்களைக் குறைக்கிறதோ அவையே அந்தச் செயல்களாகும். மன்னா!இவையே துறவிகளாலும் பிராமணர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன.
பின்னர் மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் போதனையின் சாராம்சத்தை ஆனந்தர் சுருக்கமாக இப்படி விளக்கி அருளினார்:
“எந்தக் கருமங்கள் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் சந்தோஷத்தைத் தருகிறதோ, எவை ஒருவருக்கும் கடும் தொல்லையை உருவாக்காமல் இருக்கிறதோ எவை திறமையுள்ள செயல்களைச் செய்ய வைக்கிறதோ அவையே துறவிகளாலும் பிராமணர்களாலும் விரும்பப்ப்டுகிறது. வெறுக்கப்படுவதில்லை!
நல்ல கர்மம் எது, தீய கர்மம் எது என்ற ஐயத்திலிருந்து மன்னன் தெளிந்தான். அன்றிலிருந்து பிறருக்கு துன்பம் தருவதை உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் தவிர்த்தான். சந்தோஷம் தருவதை ஊக்கமுடன் செய்தான்.
புத்தரின் போதனையை மற்றவர்களுக்குச் சொல்ல ஆனந்தர் கோசல நாட்டை விட்டுக் கிளம்பினார்.
*****


You must be logged in to post a comment.