கங்கையில் புனித நீராடுவோர் பற்றி பார்வதி கேள்வி!

கும்ப

கும்பமேளா, பிரயாகை படம்

Written by London swaminathan

Article no. 1715; dated 14 March 2015

Up loaded at 12-10 London time

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் புத்தகத்தில் அன்னதானத்தின் பெருமையை ஒரு அழகான கதை மூலம் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா விளக்கியதை முன்னர் கண்டோம். இதோ அவர் சொல்லும் இன்னும் ஒரு சுவையான கதை (சொற்கள் என்னுடையவை. ஆகவே பிழை இருப்பின் மன்னிக்க):

பார்வதியும் பரமசிவனும் உலகைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். கங்கை நதிக் கரையில் ஒரே கூட்டம். கோடிக் கணக்கான மக்கள் கும்பமேளா விழாவை ஒட்டி கங்கையில் குளித்துக் கொண்டிருந்தனர். பார்வதிக்கு ஒரே வியப்பு. ஆனால் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அருகிலேயே பிறவா யாக்கைப் பெரியோன், நீல மணி மிடற்று முக்கண்ணன் இருந்ததால் தொடுத்தாள் கேள்விக் கணைகளை,

“நாதா! கங்கையில் குளித்தால் பாபங்கள் எல்லாம் அடியோடு போய்விடும் என்பது உண்மையா?அப்படி உண்மையானால் கோடிக் கணக்கான மக்கள் இப்படிக் குளித்து பாபங்களைப் போக்கிவிட்டால் எல்லோரும் சொர்க்கத்துக்ப் போய்விடுவார்களே! நரகம் காலியாகி விடாதா?”

OLYMPUS DIGITAL CAMERA

படம்: கங்கைக் கரையில் சிவன்

சிவன் சிரித்துக் கொண்டே சொன்னார்,

“அன்பே! என் ஆருயிரே! அப்படியெல்லாம் கவலை கொள்ளாதே. சுவர்க்க லோகம் என்றும் நிறைந்ததாக—நிரம்பியதாக—(கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் கூட படிக்க முடியாது. இதை நிரூபிக்க வேண்டுமா?” என்றார்.

ஆமாம், சுவாமி! எனக்கு ப்ரூப் (ஆதாரம்) வேண்டும் என்றாள் உலகாளும் அம்மை.

உடனே சிவன் சொன்னார்,” நான் என்னதான் சொன்னாலும் உனக்கு நம்பிக்கை வராது. சந்தேகம் தெளியாது. ஆகையால் ஒன்று செய். நீ போய் பூலோகத்தில் இரு. நான் ஒரு பயங்கர குஷ்ட ரோகி போல வருவேன். நீ என்னை கணவன் போல பின் தொடர்ந்து வா. நான் கீழே விழுந்து உயிர் விடுகிறேன். நீ கதறி அழுது உதவி கோரு. யார் உதவி செய்ய வந்தாலும் — பாவம் கொஞ்சம்கூட இல்லாத ஆட்களே சடலத்தைத் தொடலாம் — என்று கூறு.

அவர்கள் திட்டப்படியே சிவன் குஷ்ட ரோகியா கவும்,பார்வதி பேரழகியாகவும் சென்றனர். எல்லோரும் பார்க்கையில் அவர்கள் முன்னிலையில் சிவன் திடீரென்று கீழே விழுந்தார்; மூர்ச்சையானார். பார்வதி அழுது புரண்டாள். எல்லோரும் உதவிக்கு வந்தனர். ஆனால் பார்வதியோ பாவமே இல்லாதவர் மட்டும் சடலத்தைத் தொடலாம், மற்றவர்கள் தொடாமல் விலகிப் போங்கள் என்றார். கூட்டம் மெதுவாக நழுவிட்டது.

mahakumbh-13_021013051606

மஹா கும்ப மேளா படங்கள்

அப்போது ஒருவன் மட்டும் வேகமாக முன்னால் வந்தான். அம்மையே நான் இந்த சடலத்தை கங்கையில் எறிந்து அடக்கம் செய்கிறேன் என்றான். அவனைப் பார்த்தாலே படிப்பறிவும் நாகரீகமும் இல்லாதவன் என்று தெரிந்தது. பார்வதியோ எல்லோருக்கும் இட்ட நிபந்தனையையே அவனுக்கும் இட்டாள். அதைக் கேட்ட அவன் அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டே கங்கையில் பாய்ந்தான், குளித்தான், வெளியே வந்தான். அம்மையே நான் சிறிதும் பாபமற்றவன் என்று சொல்லி சடலத்தின் அருகில் வந்தான். சிவனும் பார்வதியும் மறைந்தனர்!!

பல கோடிப் பேர்களில் ஒருவனுக்குத் தான் “கங்கா ஸ்நானம் பாபத்தைப் போக்கும் ” என்ற நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள் கங்கையில் குளிப்பதை ஒரு சடங்கு போலச் செய்தனர். அவர்களிடம் முழு நம்பிகை இல்லை. இப்பொழுது புரிந்தது பார்வதிக்கு! சொர்க்கம் என்றும் நிரம்பாது; நரகம் என்றும் குறைவு படாது!!

வளர்க சுவர்கம்!! தேய்க நரகம்!!

kumbh-6-photo

கோடிப் பேர் புனித நீராடும் கங்கை நதி

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் பேரரசனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு அவனுடைய ஆதிக்கம் இரு கடல் எல்லையைத் தொடும் அளவு பரவியிருந்ததாகவும் கவுதமி புத்ர சதகர்ணியின் ஆட்சி முக்கடல் இடைப்பட்ட பகுதி முழுதும் நிலவியதாகவும் கல்வெட்டுகள் கூறும்.

பராந்தக வீரநாராயண ப ண்டியனின் தளவாய்புரம் செப்பேடு:

“ஹரிச்சந்திரன் நகரழித்தவன் பரிச்சந்தம் பல கவர்ந்தும்

நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன்னியதி நல்கி

நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடாயிரம் வழங்கியும்”

என்று கூறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டு செப்பேடு.இன்னும் பல நூல்களிலும் இவ்வாறு ஒரே நாளில் 4 கடல் நீறைக் கொண்டுவந்து குளித்ததாகவும் முக்கடல் நீரில் நீராடியதாகவும் படிக்கிறோம். ஏன் இப்படிச் செய்தார்கள் ,இப்படிச் செய்ய முடியுமா? என்ற சுவையான விஷயத்தை ஆராய்வோம்.

இது உண்மைதான். ஆனால் தினமும் அவர்கள் இப்படிக் குளித்தார்களா என்பதைச் சொல்லமுடியாது. இப்போதும் கூட பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கும், பெரிய சந்யாசிகள், குருமார்கள் பிறந்ததின வைபவங்களுக்கும் பல புண்ய தீர்த்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.நாம் கூட வீடுகளில் கங்கை நீரை அவ்வப்போது பயன்படுத்துகிறோம்.

மன்னர்கள் இப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தங்களுடைய ஆட்சி எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்திப் பெருமைப் பட இது உதவியது 2. கடல் நீராடல் புனிதம் என்பது புராண இதிஹாசங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மிகத் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நம்பிக்கை.

பல்யானை செல்கெழு குட்டுவன் யானைகளை வரிசையாக நிறுத்தி அவைகளின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நீராடினான் என்று பதிற்றுப் பத்து (3ஆம் பத்து) பதிகம் கூறுகிறது.. போர்ப் படைகள் பல பெரிய நதிகளைக் கடக்க அந்தக் காலத்தில் யானைகள வரிசையாக நிறுத்தி அதன் மீது சென்றனர். இதை காளிதாசனும் (ரகு. 4-38, 16-33) கூறுவான். அலெக்சாண்டரும் இப்படிச் செய்தான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூர் கோவில் தீபாராதனை நடந்த பின்னர்தான் சாப்பிடுவானாம். தீபாராதனை முடிந்ததை அறிய அவன் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை நிறைய மணிக் கூண்டு கோபுரங்களை நிறுவினான். கோவில் மணி அடித்தவுடன் ஒவ்வொரு மணிக் கூண்டாக ஒலிக்கும். ஒரு மணிக்குண்டு ஒலியைக் கேட்டவுடன் அடுத்த மணியை தொலை தூரத்திலுள்ளவன் கேட்டு மணி அடிப்பான். இறுதியில் பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஓசை வந்தவுடன் கட்டபொம்மன் சாப்பிடுவான். இந்த மணிக்கூண்டுகளின் மிச்ச சொச்ச இடிபாடுகள் இப்பொதும் இருக்கின்றன.

மாயா இன மக்கள்

தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் 3000 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மாயா இன மக்களும் செய்திகளை அனுப்ப வேகமாக ஓடுபவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். மாயா இன மக்களுக்கு சக்கரம் பயன்படுத்தத் தெரியாததால் ஓட்டப் பந்தய வீரர்களை வைத்தே பல காரியங்களைச் சாதித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மராத்தன் ஓட்டப்போட்டியும் ஒரு வீரன் 26 மைல் ஓடிவந்து செய்தியைக் கொடுத்துவிட்டு இறந்துபோனதன் நினைவாகவே நடைபெறுகிறது. அவன் கிரேக்க வீரன்.

ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தால் இதன் பெருமையையும் அருமையையும் நாம் அறியலாம்:

மாரத்தன் ஓட்டம் (26 மைல்)- சுமார் 2 மணி நேரம் ஆகும்

ஒரு மணிக்கு 13 மைல் ஓடலாம்

10 மணி நேரத்தில் 130 மைல் ஓடலாம் (ஒரே ஆள் இப்படி ஓட முடியாது. மிகவும் தேர்ச்சி பெற்ற 10 ஓட்டக்காரர்களை அமர்த்தி ரிலே ரேஸ் ஓடச் செய்வார்கள் பழைய கால மன்னர்கள் ).

தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட கரூர், உறையூர், மதுரை ஆகியன இரண்டு கடல்களிலிருந்தும் 150 மைல்களுக்குள்ளாகவே இருந்தன. ஒருவர் காலை ஆறு மணிக்கு கடல் நீரை கலசத்தில் எடுத்துக் கொண்டு ஓடினால காலை 11 மணிக்கு 65 மைல் வந்து விடலாம். இதுவே குதிரையில் வந்தால் மூன்று மணி நேரத்தில் 75 மைல் வந்து விடலாம். ஆக காலை 6 மணிக்கு குதிரை வீரர்கள் கடல் நீர் கலசங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் காலை பத்து மணிக்குள் 100 மைல் வந்துவிடலாம். இதிலும் ஒரே குதிரையில் செல்லாமல் ரிலே ரேஸ் போல குதிரைகளை மாற்றினால் இன்னும் வேகமாக வரலாம். மதுரை பாண்டிய மன்னன் தளவாய்புரம் செப்பேட்டில் கூறியபடி நீராடலாம். நாலாவது கடல் என்று கூறுவது எது என்று தெரியவில்லை. ஒருவேளை வட திசையிலிருந்து வரும் நீராக இருக்கலாம்.

தமிழ்நாட்டுக் கோவிலகளுக்கு இன்றும் கூட சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கங்கை ஜலம் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. கன்யாகுமரி ஜில்லாவில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் இந்துக்கள் 12 சிவாலயங்களில் தரிசினம் செய்ய சுமார் 50 மைல்கள் சிவாலய ஓட்டம் ஓடுவதை இப்போதும் காணலாம்.ஆக புனித நீர், ஓட்டம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

காஞ்சி முதல் குமரி வரை புறா ரேஸ் வைத்தபோது அந்த தூரத்தை புறா 13 மணி நேரத்தில் கடந்துவிட்டது. ஆக தண்ணிரை இந்தக் காலம் போல பாலிதீன் பைகளில் அடைத்தால் புறாக்கள் கூட இன்னும் வேகமாகக் கொண்டுவந்து விடும்!!

***********