
Written by London Swaminathan
Date: 24 October 2016
Time uploaded in London: 6-35 AM
Post No.3282
Pictures are taken from various sources; thanks. They are used for representational purpose. They may not have direct connection to the article below.
Contact swami_48@yahoo.com
தமிழில் ஒரு பழமொழி உண்டு. பாத்திரம் அறிந்து தானம் செய்.
பாத்திரம் என்றால் நாம் உடனே எவர் சில்வர் பாத்திரம், அலுமினிய பாத்திரம், தாமிரப் பாத்திரம் என்று உலோகத்தால் ஆன பொருளை நினைப்போம். இதன் உண்மைப் பொருள் அதுவல்ல.
பாத்திரம் அறிந்து தானம் செய் என்பது பகவத் கீதையில் உள்ளது.
தானம் செய்வதிலுள்ள மூன்று வகைகளை கிருஷ்ணன் விவரிக்கிறான்.
இது புறநானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளது.

நல்ல தானம் (சாத்விகம்) எது?
தகுதியான இடத்தில், தகுதியான காலத்தில், தகுதியுள்ள ஆளுக்கு (பாத்ரம்) கொடுப்பதே உத்தம தானம்; உயர்ந்த தானம் (17-20)
தாதவ்யமிதி யத்தானம் தீயதே அனுபகாரிணே
தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் சாத்விகம் ஸ்ம்ருதம்
இந்த ஸ்லோகத்தில் இன்னொரு வரியையும் சேர்த்துள்ளார்
நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும்.
அதாவது ஏற்கனவே நமக்கு ஏதோஒரு வகையில் உதவி செய்தததால் அந்த நபருக்கு தானம் கொடுத்தால் அது தானம் இல்லை. அது நன்றிக் கடன் ஆகும்.
ராஜச தானம் எது?
யத் து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வாபுன:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத் தானம் ராஜசம் ஸ்ம்ருதம் —17-20
பின்னொரு காலத்தில் இவன் உதவி செய்வான் என்று கருதியோ பயனைக் கருதியோ செய்யப்படும் தானமும், மனவருத்தத்துடன் செய்யப்படும் தானமும் ராஜசம் என்று கூறப்படும்.
கடைசியாக மூன்றாவது வகை தானத்தைப் பற்றி கூறுவார் கிருஷ்ணன்:-
அதேசகாலே யத்தானம் அபாத்ரேப்யஸ்ச தீயதே
அசத்க்ருதம் அவக்ஞாதம் தத்தாதமச உதாஹ்ருதம் (17-22)
தகுதியற்ற இடத்திலும் காலத்திலும் தகுதியற்றவர்களுக்கும் (அபாத்ரம்)
மதிப்பின்றி, அவமானப்படுத்தும் வகையிலும் எது கொடுக்கப்படுகிறதோ அது தாமசம் என்று கூறப்படும்.
சிலர் அரசியல் கட்சிகளுக்கும் சிலர் பயங்கரவாத இயக்கங்களுக்கும் மிரட்டிப் பணம் பறிப்பர். குடி போதைக்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையானோர் பணம் கேட்பர். அவர்களுக்குக் கொடுப்பத எல்லாம் கொடை என்றாலும், கடைத்தரமான நன்கொடையாகும்.
இன்னும் சிலர் நல்ல காரியங்களுக்காக நன்கொடை வசூலிக்கப் போனால் நாக்கில் நரம்பின்றித் தூற்றுவர். இன்னும் சிலர் “இன்று போய் நாளை வா” என்று தினமும் சொல்லி காலம் கடத்துவர். இறுதியில் நாமே போகாமல் இருப்போம். இவை எல்லாம் கடைத்தர தானம்.
வள்ளுவனும் அழகாகச் சொல்லுகிறான்:
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுரைத்து (குறள் 221)
வறுமையில் வாடுவோருக்குக் கொடுப்பதே தாஅனம். மற்ற தானங்கள் எல்லாம் பலனை எதிர் பார்த்துக் கொடுப்பதே ஆகும்.

இப்பொழுது ஒருவருக்குக் கொடுத்தால் அது புண்ணியத்தைச் சேர்க்கும். அதுவே போகும் வழிக்குத் துணையாகும் என்று வேதம் சொல்லும். அதியே வள்ளுவனும் சொல்லுவான்:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
பிறருடைய பசியைத் தீர்ப்பதே பெரிய தருமம்/அறம். அப்பொருள் பிற்காலத்தில் தனக்குச் சேர்த்து வைக்கும் இடமாகும்.
ஆனால் இப்படிச் செய்வது இரண்டாம் வகை தானம் (தாமசம்).
புறநானூற்றில் தானம்
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணின்கன் ஆய் அல்லன்;
என்று ஆய் அண்டிரனை முடமோசியார் பாராட்டுகிறார் (பூரம் 184)
அதாவது அடுத்த ஜன்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக ஆய் அண்டிரன் தானம் செய்யவில்லை. பிறருடைய வறுமையைக் கண்ட மாத்திரத்தில் இயல்பாகப் பொங்கி எழும் மனிதாபிமான அடிப்படையில் வாரி வழங்குவானாம்! இது முதல் வகைத் தானம். ஆய் அண்டிரன், பேகன், கர்ணன், பாரி வள்ளல் போன்றோர் சாத்வீக (உத்தம) தானம் செய்தோர் ஆவர்.
பேகன் என்னும் குறுநில மன்னனை பரணர் பாடிய பாடலிலும் (புறம் 141) இக்கருத்து எதிரொலிக்கிறது.
எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே
மழை மேகத்தைக் கண்டு தோகை விரித்தாடிய மயில், குளிரால் நடுங்குகிறது என்று எண்ணி, மயிலுக்குக்குப் போர்வை அளித்தவன் பேகன்!
–subham–
You must be logged in to post a comment.