
Written by London Swaminathan
Date: 21 November 2016
Time uploaded in London: 20-23
Post No.3376
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
இந்த உலகம் இன்ப ஊற்று, இன்பக் கேணி என்று வேதங்கள் சொல்வதாக பாரதி பாடினான்.
எங்கள் லண்டனில் வெளியாகும் மெற்றோ METRO பத்திரிக்கையை நான் ஒவ்வொரு நாள் காலையிலும் படிக்கும்போது பாரதி சொன்னது “வேத வாக்கு” என்பதை உணர்கிறேன்.
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக்கேணியென்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
தேவி தன் திருக்கை (பாரதியார்)
பெரும்பாலான பத்திரிக்கைகளை காலையில் எடுத்தவுடன் முதல் பக்கத்தில் குத்து, வெட்டு, கொலை, களவு, கொள்ளை, கற்பழிப்பு, விவாக ரத்து, வன்முறை, தீ வைப்பு, லஞ்சம், குற்றச் சாட்டு, விபத்து, மரணம், சாவு என்று ஒரே எதிர்மறைச் செய்திகளாக வரும். லண்டன் பத்திர்க்கைகளும் அப்படித்தான். ஆனால் இவ்வளவு கெட்ட செய்திகளிடையே METRO மெற்றோ பத்திரிக்கை நடு,ப் பக்கத்தில் யார் யார் நல்ல காரியம் செய்தனர் என்று பொது மக்கள் எழுதும் நன்றிச் செய்திகளைப் பிரசுரிக்கிறது. அதன் அருகிலேயே ரயிலிலும், பஸ்ஸிலும் ஸ்டேஷன்களிலும் சந்திக்கப்பட்ட ஆணழகன் பெண்ணரசிகளுக்கு சிலர் அனுப்பும் காதல் மொழிகளும் இடம் பெறும். அதற்குப் பின்பக்கத்தில் 60 வினாடிப் பேட்டி ஒன்று வெளியாகும். யாராவது ஒரு பிரமுகரை பேட்டி கண்டு வெளியிடுவர். அதைப் படிக்க ஓரிரு நிமிடங்கள் போதும்.
மெற்றோ என்னும் பத்திரிக்கை காலையில் ஸ்டேஷன் வாசல்களில் குவிக்கப்படும் இலவசப் பத்திரிக்கை. பல ஆண்டுகளாக அது இந்த நற்பணியை— நல்ல செய்திகளை வெளியிட ஓரிரு பக்கங்களை ஒதுக்குகிறது.
இந்திய நாளேடுகளும் இதைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!!

இதோ கடந்த சில தினங்களில் வெளியான துணுக்குகள்! ஒரு சில துணுக்குகளை மட்டும் எடுத்துக் காட்டுக்காக வெளியிடுகிறேன்:-
திங்கட்கிழமை இரவில் கிழக்கு லங்காஸ்டர் ரோடில் நடந்த விபத்துக்குப் பின்னர் எனது உயிரைக் காப்பாற்றிய போலீஸ் அதிகாரி காரத் Gareth அவர்களுக்கும், மருத்துவமனை டாக்டர், நர்சுகளுக்கும் என் இதயங்கனிந்த நன்றி உரித்தாகுக இரத்தக் காயங்கள் ஏற்பட்டபோதிலும், ஹெல்மெட் இருந்ததால் பிழைத்தேன். எல்லோரும் தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்– நன்றியுள்ள சைக்கிள் ஓட்டி
xxxxx
லண்டன் ரீஜெண்ட் வீதியில் எனக்கு திடீரென்று வலிப்பு வந்ததை பார்த்தவுடன் டெலிபோனில் ஆம்புலன்ஸை அழைத்து, அவர்கள் வரும் வரை என்னுடன் இருந்து, அவர்களிடம் நடந்ததை விளக்கிச் சொல்லிவிட்டு போன யாரோ ஒருவருக்கு என் நன்றி- ஜூலியா, லண்டன்
xxxxxx
பஸ் நம்பர் 38-ல் பயணம் செய்தபோது நான் விட்டுச் சென்ற பையை பத்திரமாக ஒப்படைத்த நல்ல உள்ளத்துக்கு என் நன்றி. அதில் இழக்கமுடியாத, எனக்கு உணர்ச்சிபூர்வமாக உதவும் பல பொருள்களும் புத்தகமும் இருந்தன. நன்றி.
xxxxxxxx
டெம்பிள் மீட் ஸ்டேஷனுக்கு எதிரே திடிரென்று என் கார் பழுதடைந்து சாலையையே மறைத்துக் கொண்டு நின்றதைப் பார்த்து, உடனே எனக்கு வந்து உதவிய ஜெF முதலியோருக்கு என் நன்றி
xxxxxx
லண்டன் சாரிங் கிராஸ் ஸ்டேஷனிலிருந்து டார்ட்போர்ட் நோக்கிச் சென்ற ரயிலில் நான் மயக்கம் போட்டதைப் பார்த்து எனக்கு விசிறிக்கொண்டே வந்த நல்ல உள்ளம் படைத்த பெண்மணிக்கு என் நன்றி. ஆல்பனி பார்க்கில் நான் இறங்கியவுடன் எனது பைகளையும் தூக்கிக்கொண்டு வந்து உதவியதற்கு நன்றி
xxxxxx
நான் ஐந்ததுமாத கர்ப்பிணி. லிவர்பூல் ஸ்டேஷனில் என் பையை மறந்து வந்துவிட்டேன். உடனே என் பின்னால் ஓடிவந்து அதைக்கொடுத்த அன்புள்ளத்துக்கு நன்றி. கர்ப்பமான எனக்கு பெரும் துக்கமும் கவலையும் ஏற்படாமல் காப்பாற்றினீர்கள்
xxxxxxxxxxxxx

இதோ சில காதல் கிளிகளின் மொழிகள்
ஏய் நீலக் கண்கள், கருப்பு முடி, பச்சை ஜாக்கெட் அணிந்த இளைஞனே. சனிக்கிழமை இரவு ஜூபிளி லைன் ரயிலில் நாம் இருவரும் வந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையை நெளியவிட்டோம். உன்னுடன் பேசாமல் கேன்னிக் டவுன் CANNING TOWN ஸ்டேஷனில் இறங்கிவிட்டேன். இப்போது வருந்துகிறேன். அடுத்தமுறை சந்த்தித்தால் என் தவற்றைத் திருத்திக்கொள்ளுவேன்
–ப்ளு டிரவுசர் அணிந்த கருப்புமுடி பெண் Brunette in Blue Trousers
xxxxxxxxxx
ஏய் அழகிய கருப்புத் தோல் பெண்மணியே. ஷெப்பீல்டிலிருந்து லீட்ஸ் நகரம் செல்லும் 6-50 மணி ரயில் தாமதமாக வந்தது. அதில் உன்னுடன் நானும் பயணித்தேன். உன் கொள்ளை அழகில் சொக்கிவிட்டேன். என்னுடைய நா ளை பிரகாசமாக்கிவிட்டாய்- சக பயணி, பார்ன்ஸ்லி நகர்
cccc

இவ்வாறு ஆறு, ஏழு காதல் மொழிகளும் ஏழு, எட்டு நன்றிச் செய்திகளும் தினமும் வரும். இதுவும் ஆசிரியர் கடிதம் பகுதியும் நிறைய ஆக்கபூர்வ கருத்துகளுடன் மிளிரும்
இந்திய நாளேடுகளும் இப்படி உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு யாராவது, எங்கோ ஒரு மூலையில் நன்றி தெரிவிப்பதை வெளியிடலாம்.
கலி காலம் இன்னும் முற்றிவிடவில்லை. இந்த அழகான உலகத்தில் இன்னும் அன்பும் நேர்மையும் உடைய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன.
நாம் வாழும் இந்த பூமி மிக மிக அழகிய உலகம்! It’s a beautiful world!
–SUBHAM–