A few days ago London Newspapers published a photo of a five hour fight between a crocodile and a snake in Queensland, Australia. Needless to say that the snake won the fight.
கட்டுரையாளர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 892 தேதி:– 7 மார்ச் 2014
சங்க இலக்கியத்தில் மலைப் பாம்புகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த தமிழ்ப் புலவர்கள், அவைகள் யானைகளை விழுங்கியது பற்றிப் பாடி வைத்திருக்கின்றனர். யானையை மலைப் பாம்பு விழுங்க முடியுமா? இதோ முதலில் சில உண்மைச் சம்பவங்கள்:—
கனடாவில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி நல்ல உள்ளங்கள் எல்லாவற்றையும் உலுக்கிவிட்டது. உள்ளத்தை உருக்கியும் விட்டது. கண்ணீரை உகுக்கவும் வைத்தது. இரண்டு சிறுவர்கள், ஒரு நண்பர் வீட்டில் தூங்கப் போனார்கள். ஒரு மலைப் பாம்பு, கூரையில் காற்று வருவதற்காக வைத்த துளை மூலமாக வந்து அவர்கள் மீது விழுந்தது. அடுத்த கணம் அவர்கள் இருவரையும் நசுக்கிக் கொன்றுவிட்டது. யமன் எப்படி எல்லாம் வருவான் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
(வெளிநாடுகளில் வசிப்போர் மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகள் பழகுவதற்காகவும் சுயமாக வாழக் கற்பதற்காகவும் “ஸ்லீப் ஓவர்” என்று பரஸ்பரம் அனுப்புவார்கள். ஆனால் இறந்து போன குழந்தைகள் 6 வயதுக்குட்பட்டவர்கள். இவ்வளவு சிறிய வயதில் அனுப்புவது பொதுவாக நடை பெறாது.)
அந்த மலைப் பாம்பு கீழே கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது எப்படியோ தப்பித்து, ‘‘வெண்டிலேஷன் சிஸ்டம்’’ வழியாக உள்ளே வந்து விட்டது. கனடாவில் நியூபிரன்ஸ்விக் பகுதியில் கேம்ப்பெல்டன் என்னும் இடத்தில் 2013 ஆகஸ்டில் இந்த துயர சம்பவம் நடந்தது.
இன்னொரு சம்பவம்
அமெரிக்காவில் ப்ளோரிடாவில் ஒரு காதலன் — காதலிக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. காரணம்? ஜரேன் ஹேர் என்ற பெண்ணும் அவளுடைய பாய் Fரெண்டும் வளர்ப்பு மிருகங்களை விற்கும் தொழில் நடத்திவந்தனர். அவர்கள் கூட்டில் அடைத்து வைத்திருந்த மலைப் பாம்பு தப்பித்து வந்து அவர்களுடைய இரண்டு வயதுப் பெண்ண நெரித்துக் கொன்றுவிட்டது. இது நடந்தது 2011 ஆகஸ்ட் மாதம்! ஆக இருவருக்கும் அலட்சியக் கொலைக்காக 12 ஆண்டு சிறைத் தண்டனை.

I the jungles of Africa it is always an antelope the python attacks. Probably it likes venison.
பாலி தீவில் மூன்றாவது சம்பவம்:
மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மலைப் பாம்பு ஒரு மனிதனை நசுக்கிக் கொன்ற சம்பவம் 2013 டிசம்பரில் இந்தோநேஷியாவில் பாலி தீவில் நடந்தது. 13 அடி நீள மலைப் பாம்பு ஒரு ஹோட்டல் பக்கம் அடிக்கடி நடமாடவே சுற்றுலாப் பயணிகள் கவலைப்பட்டனர். பக்கத்து ஹோட்டல் பாதுகாப்பு ஊழியர் அம்பர் அரியாண்டோ முல்யோ (59 வயது), ‘’நான் பிடிக்கிறேன்’’– என்று முன்வந்தார். பாம்பின் தலையையும் வாயையும் பிடித்த பின்னர் 13 அடி மலைப் பாம்பை தோளில் போட்டுக் கொண்டார். அடுத்த நிமிடம் அவருடைய உடலை வளைத்து நெருக்கியது. எல்லோரும் யாது செய்வதென்று அறியாமல் திகைத்துப் போலீசுக்குப் போன் செய்தார்கள். அவர்கள் வருவதற்குள் முல்யோ மூச்சுத் திணறி இறந்து போனார். இப்படி எத்தனையோ சம்பவங்கள்.
அமெரிக்காவில் மலைப் பாம்பை வளர்த்துவந்த ஒரு ஆஜானுபாகு உடலுடைய பல பீமன், கார் கராஜில் நுழைந்தபோது மலைப் பாம்பு வளைத்துப் பிடித்துக் கொன்றுவிட்டது. இது எப்படி நடந்தது என்பது மர்மமாகவே இருக்கிறது. கூட்டிற்குள் இருந்த மலைப்பாம்பு எப்படி அவரை நசுக்கியது என்பது புரிபடவில்லை.ஒருவேளை அவர் அதை வெளியே எடுத்துக் கூண்டை சுத்தம் செய்ய முயன்றிருக்கலாம்.அப்போது மரணப் பிடியில் சிக்கி இருக்கலாம்.
உயிரியல் நிபுணர்களுக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். மலைப் பாமபு யானை பலத்தில் ஒருவரை நெருக்கி மூச்சுத் திணறச் செய்ய சில நிமிடங்கள் போதும்! மிகக் கொடிய விஷம் படைத்த ராஜநாகம் தன் விஷத்தின் மூலம் பெரிய யானையையும் கொன்றுவிடும். ஆனால் மலைப் பாம்புகள் பெரிய மிருகங்களைக் கொல்வது அவைகளைச் சாப்பிடுவதற்காகத்தான். அவைகளின் தாடை எலும்புகள் எவ்வளவு வேண்டுமானாலும் விரிந்து கொடுக்கும். மிருகத்தை மூச்சுத் திணறச் செய்தவுடன் சூடாகச் சாப்பிட்டுவிடும். அது வயிற்றுக்குள் போய் ஜீரணமாகப் பல மாதங்கள் ஆகும். அது வரை அது இரை தேட வேண்டியதில்லை!!
மஹாபாரதத்தில் அகத்திய மாமுனியை எட்டி உதைந்த, தற்காலிக இந்திரப் பதவி வகித்த, நகுஷனை அவர் மலைப் பாம்பாகப் போகச் சபித்ததும், அவன் பூமியில் விழுந்து நெளிந்ததும் நினைவுகூறத் தக்கது.பாகவத புராணத்தில் வரும் காளீய நர்த்தனக் கதையும் ஒப்பிடற்பாலது.
காடுகளில் ஏராளமான மிருகங்களை மலைப் பாம்புகள் இப்படித்தான் கொல்கின்றன. மேலை நாடுகளில் வசிப்போர் இது போன்ற செய்திகளை அடிக்கடி படங்களுடன் பார்க்கிறோம். இந்தியக் காடுகளிலும் இது போன்ற சம்பவங்களைக் கானகவாசிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு எழுதிவந்த ஜியாவுடீன் என்பவர் தேக்கடிப் பகுதி காடுகளில் நடக்கும் விஷயங்களை, மதுரையில் எங்கள் வீட்டுக்கு வரும்போது கதை கதையாகச் சொல்வார்.

This is a python that was caught in Kerala,India
தமிழ்ப் புலவர்கள் கண்ட காட்சி
இந்தப் பிண்ணனியில் தமிழ்ப் புலவர் பாடல்களை ஆராய்ந்தால் உண்மை விளங்கும்:
அகநானூறு 68, நற்றிணை 14 மற்றும் 261, மலைபடு கடாமில் வரி 259 ஆகியவற்றில் சங்கப் புலவர்கள் இதைப் பாடினர். பிற்காலத்தில் நக்கீரதேவ நாயனார் அருளிய பதினோராம் திருமுறையில் இந்தக் காட்சியைக் காணலாம். இன்னும் பல சிற்றிலக்கியங்களிலும் காணப்படும்.
நற்றிணைப் பாடலைப் (261) பாடியவர் சேந்தம் பூதனார். குறிஞ்சி நில வருணனை:–
நெடும் பல் குன்றத்துக் குறும்பல மறுகி.
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை
பொருள்: நெடிந்து உயர்ந்த மலையில் இரவு நேரத்தில் மழை கொட்டுகிறது. அப்பொழுது ஒரு பெரிய மலைப் பாம்பு (மாசுணம்) ஒரு யானையை விழுங்கிக் (களிறு அகப்படுத்த0 கொண்டிருக்கிறது. அது மரத்தில் தொங்கியவாறு யானையின் உடலை வளைத்துப் பின்னிப் புரட்டி விட்டது. ஒருபுறம் சந்தன (சாந்தம்) மரத்தில் இருந்து நல்ல வாசனை வருகிறது.
This is anaconda snake. Pythons and Anacondas grow up to 20 feet long.
மலைபடுகடாம் பாடிய பெருங் கௌசிகனார் என்ற புலவர்,
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
கயங்கண்டன்ன வகன்பை யங்கண்
மைந்திமலி சினத்த களிறுமத னழிக்குங்
தஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி
பொருள்: காட்டு வழியாகப் போங்கள். (ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள்). பாம்புகள் கீழே கிடக்கும். அவைகள் மரக் கட்டைகள் போலத் தோன்றும். அவைகள் அழகிய கண்களையும் ,அகன்ற படத்தினையும் உடைய பெரிய பாம்புகள் ஆகும். அவை யானையையும் விழுங்கும்.
இதே போல அகநானூற்றில் (68), “வெண் கோட்டி யானை விளிபடத் துழவு, மகல் வாய்ப் பாந்தள்” என்றும் காணலாம்.
திருஞான சம்பந்தரும் தேவாரத்தில்
பரிய களிற்றை யரவு விழுங்கி மழுங்க – என்று பாடுவார்.
களிறென்று பெரிய மாசுணம்……பெயர்தரு பிருதியெம் பெருமானை – என்று பெரிய திருமொழியில் (1. 2:10) பெரியாழ்வாரும் பாடுகிறார்.
கம்ப ராமாயணத்தில்,
பெரிய பாந்தள், மறங்கிளர் மான யானை வயிற்றின வாக வாய்சோர்ந்துறங்கின — (கம்ப.தாடகை.11, சித்திர கூட 4-35, சேது பந்தன 20).
ஆதாரம்: மகா மகோபாத்தியாய தக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த பத்துபாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்.
contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.