
Research article written by London Swaminathan
Date: 12 November 2016
Time uploaded in London: 18-12
Post No.3348
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
வரி விதிப்பது பற்றி காளிதாசன், மனு, திருவள்ளுவர் ஆகியோர் கருத்துகளை நேற்று கண்டோம். புறநானூற்றில் (பாடல் 184) பிசிராந்தையார் கூறும் புத்திமதி நல்லதொரு உவமையுடன் வருகிறது.
பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் சொன்ன புத்திமதி:-
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடியாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
பொருள்:-
ஒரு ‘மா’ அளவைவிடக் குறைந்த நிலமாயினும் அதில் விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாக யானைக்கு ஊட்டினால் பலநாட்களுக்கு அது வரும்.; யானையும் பல நாட் பசியடங்கி இன்புறும். அல்லாது, நூறு “செய்” நிலமாயினும், தன் போக்கிலே யானை சென்று தின்னுமானால், அது சாப்பிட்ட நெல்லைவிட அதன் காலடியில் பட்டு அழியும் நெல்லே மிகுதியாகிவிடும். இதே போல, அறிவுள்ள ஒரு அரசன் தர்ம நியாயத்தை உணர்ந்து மக்களிடம் வரி வசூலித்தால் கோடிக்கணக்கில் அவனுக்கு வருவாய் வருவதுடன் நாடும் செழிக்கும். அஃதன்றி, அவனுடைய மந்திரிகளும் புத்திமதி சொல்லாமல், அவனும் குடிகளை வருத்தி அதிக வரி வசூலித்தால், அவனுக்கும் நாட்டுக்கும் கேடே விளையும். (மா, செறு=செய் என்பன பழங்கால நில அளவைகள்)

குடிகொன்று இறை கொள்ளுங் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பாலகொளலும் மாண்பே – குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல –நீதிவெண்பா
குடிமக்களை வருத்தி வரிவாங்கும் அரசன் செயலைவிட, கன்றையுடைய பசுவின் மடியை வருத்திப் பால் கறப்ப்து நல்ல செயல் ஆகும். குடிகளைப் பாதுகாக்கும் அளவுக்கு வரி வாங்கும் அரசர்களுக்கு வெள்ளம் அளவைவிட செல்வம் சேருவதைக் காணலாம்.
வெள்ளம்= 57, 000 000 000 000 00
(14 zeroes)

உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரி
யாவரும் கேளிர் என்ற நூலில் டாக்டர் இரா.நாகசாமி எந்தந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டது என்ற பட்டியலைத் தந்துள்ளார். இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டிலிருந்து எடுக்கப்பட்ட செய்தி. உப்புக்கும் நெல்லுக்கும் ஒரே அளவு வரி விதிக்கப்பட்டது நெல்லைப் போல இரு மடங்கு வரி அரிசிக்கும், பருத்தியைப் போல இருமடங்கு வரி, நூல்களுக்கும் விதிக்கப்பட்டது. நூலுக்கும் இரும்புக்கும் ஒரே வரி!. வாசனைப் பொருள்களான சந்தனம், அகில், பன்னீர், சவரிமயிர் ஆகியவற்றுக்குத்தான் அதிகமான வரி.
ஒரு சில எடுத்துக்காட்டுகள்:-
உப்பு தலைச் சுமை ஒன்றுக்கு அரைக் காசு
உப்பு பாக்கம் ஒன்றுக்கு அரைக் காசு
உப்பு பொதி ஒன்றுக்கு ஒரு காசு
உப்பு வண்டி ஒன்றுக்கு பத்து காசு
சந்தனம் பொதி ஒன்றுக்கு 30 காசு
வரி, இறை, சுங்கம், உல்கு, திறை முதலிய பல பொதுப் பெயர்களும் பின்னர் ஒவ்வொரு வரிக்குமுள்ள சிறப்புப் பெயரும் பயன்படுத்தப் பட்டன.
-subham–