


Written by london swaminathan
Date: 2 February 2016
Post No. 2501
Time uploaded in London :– 14-06
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact

இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.
சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.
சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.

பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்
சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.
இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.
கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.







–சுபம்–
You must be logged in to post a comment.