
Date: 6 JANUARY 2018
Time uploaded in London- 6-13 am
Compiled by S NAGARAJAN
Post No. 4586
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 23
பாடல்கள் 137 முதல் 141
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதிதாசன் பாடல்கள்
பாரதியார் நாமம் வாழ்க
வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
தாளேந்திக்கா த்த நறுந் தமிழ் மொழியைத்
தாய்மொழியை உயிரை இந்த
நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?
என அயலார் நகைக்கும் போதில்
தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்
போல் நல்லின்பத்தை
விளைத்திடு தீந் தமிழிருந்தும் வேறு மொழியே
வேண்டி வேண்டி நாளும்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
கனிந்தபடி தோலுரித்துச்
சுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை
சுவையூட்டம் தந்து சந்த,
அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
நற்காதல் ஆழம் காட்டித்
தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
தமிழறிவில் தறுக் குண்டாக்கிச்
சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு
விடுதலையை மறுத்திருக்கும்
துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்
பெண்மை தன்னில்
தக்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலை காட்டி
உயிர் தளிர்க்கும் காதல்
துய்க்கும் விதம் எழுத்தளித்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்
பெரியாரின் துணையும் வேண்டும்
விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே
உறக்கமில்லை கட்டாயத்தால்
வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்
சுவைக் கவியால் மனத்தை அள்ளித்
தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
(கவிதை தொடரும்)
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
*****