
Written by S.NAGARAJAN
Date:10 October 2017
Time uploaded in London- 6-47 am
Post No. 4287
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நான்காவது குண்டு!
ச.நாகராஜன்

1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மாலை மஹாத்மா காந்திஜி கோட்ஸேயினால் சுடப்பட்டார்.
ஹே ராம் என்று ராம நாமத்தை உச்சரித்த அவரை மரணம் தழுவியது.
வரலாறு நமக்குத் தரும் இந்தச் செய்தியைத் “தட்டிக்” கேட்கிறார் நவீன அபிநவ் பாரத்தின் தலைவ்ரான டாக்டர் பங்கஜ் பட்னிஸ்.
கோர்ட்டின் வாசலைத் “தட்டி” நீதி கேட்ட அவரை ஹை கோர்ட் நிராகரித்து விட்டது – அவரது கேஸை டிஸ்மிஸ் செய்து.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு 8-10-2017 அன்று அவர் அளித்த பேட்டியில் பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.
அவர் தந்த விவரங்களின் அடிப்படையிலான ஒரு சுருக்கம் இதோ:
- காந்திஜி கோட்ஸேயின் குண்டுகளால் சுடப்பட்டு இறக்கவில்லை.
- நான்கு குண்டுகள் சுடப்பட்டன. கோட்ஸே சுட்டது மூன்று குண்டுகளே.
- நான்காவது குண்டு தான் அவர் மரணத்திற்குக் காரணம்.
- இரண்டாம் உலகப் போரில் இயங்கிய பிரிட்டிஷாரின் சதிகார கவிழ்க்கும் பிரிவான ஃபோர்ஸ் 136 க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று ஆராய வேண்டும்.
- ம்ஹாத்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
- சம்பவத்தை அருகில் இருந்து நேரில் பார்த்தவரான மனுபென் காந்தியை பிராஸிக்யூஷன் தரப்பு விசாரணையின் போது அழைக்கவே இல்லை.
- ஜனவரி 30ஆம் தேதியன்று மதியம் மூன்று மணிக்கு அயல்நாட்டு சாது ஒருவர் மஹாத்மா கொலை செய்யப்பட்டது பற்றிய துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்.
(மஹாத்மாஜி மரணம் அடைந்ததோ மாலை 5.12க்கு!)
- மஹாத்மா பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் மரணம அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜின்னாவும் அவர் வருவதை ஏற்றுக் கொண்டார். இது பிரிட்டிஷாருக்குப் பிடிக்கவில்லை.
- நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது. பிரிட்டிஷாரின் சதி வேலையினால் தானா என்பதை ஆராய வேண்டும்.
- கோட்ஸே சுட்ட மூன்று குண்டுகள் காந்திஜியின் உடலில் இருந்தன. துப்பாக்கியில் மொத்தம் ஏழு குண்டுகள்.
நான்கு குண்டுகள் துப்பாக்கியிலிருந்து கைப்பற்றப்பட்டன.
கணக்கு சரியாகி விட்டது. ஆதலால் நான்காவது குண்டைச் சுட்டவன் யார் என்பதை ஆராய வேண்டும்.

- இது தவிர இந்த சதியின் அம்சமாக வேறு பல விஷயங்களும் அரங்கேற்றப்பட இருந்தது. ஆகவே விஜயலக்ஷ்மி பண்டிட், மற்றும் புனே கலெக்டரின் மனைவியான சரளா பாவே ஆகியோர் கூறியதைப் பற்றியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி வாதங்களை அடுக்குகிறார் பங்கஜ். ஆனால் அவரது கேஸ் தள்ளுபடியாகி விட்டது.
நமது கேள்வி: தேசத்தையே எழுப்பி, விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசத்தின் மாபெரும் மஹாத்மாவின் மரணம் குறித்து ஒரு அறிக்கை மூலம் பரபரப்பான வாதங்களுக்கு முற்றுப்புள்ளியை நமது அரசு வைக்கலாமே என்பது தான்!
எதிர்காலத்திலும் வேறு யாரும் வேண்டுமென்றே பரபரப்பான செய்திகளை பரப்பாமல் இருக்கவும் இது துணை புரியுமே!
நான்காவது குண்டு புரளிக் குண்டா, பிரிட்டிஷ் குண்டா, தெரியவில்லை!
***