சிவன் ‘இறந்தான்’- புலவர் விட்ட க(வி)தை!

 

 

 

Forms of Sankaranarayana and Ardhanari

போஜ ராஜன் என்ற மன்னன் மாபெரும் அறிவாளி. கற்றோரைக் காமுறும் பெரும் புலவன். புலவர்களுக்குப் புரவலன். காளிதாசன் போன்ற பெரும் புலவர்களின் இனிய நண்பன். இத்தகைய மன்னன் காலத்தில் ஒரு ஏழைப் புலவனும் வாழ்ந்தான். ஏதேனும் பாட்டு எழுதிச் சென்றால் போஜ மான்னன் தனது போஜனத்துக்கு வழி செய்வானே என்று பரிதவித்தான். அவனுக்கு கவிதை எழுதத் தெரியாது என்பதல்ல. கவி மழை பொழிய வல்லவனே. ஆனால் எல்லாப் புலவர்களும் எல்லாவற்றையும் பற்றி எழுதிப் பரிசு வாங்கிவிட்டார்களே, நான் எதைப் பற்றி எழுதுவேன் என்று அங்கலாய்த்தான். தருமி என்னும் ஏழை அந்தணனுக்கு கவிதை எழுதித்தந்த சிவ பெருமான் இவனுக்கு கவிதை எழுதித் தரவில்லை!

ஏழைப் புலவனுக்கு திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. அதுவும் சிவன் அருள்தான், ஏனெனில் அது சிவனைப் பற்றிய கவிதை! ஆனால் அரைத்த மாவையே அரைக்காத புதுக் கவிதை, அதாவது புது விதமான கவிதை. சிவன் இறந்த கவிதை. இதைக் கேட்டால் போஜன் கட்டாயம் பரிசு தருவான் என்ற நம்பிக்கை ஊட்டிய கவிதை.

இதோ அந்தக் கவிதை:

ஒரு பாதி மால் கொள மற்றொரு பாதி உமையவள் கொண்

டிருபாதியாலும் இறந்தான் புராரி இரு நதியோ

பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்திற் கற்ப

தருவான போச கொடையுடன் கையோடென்கை தந்தனனே (தனிப்பாடல்)

பொருள்:

சிவ பெருமானுடைய ஒரு பாதியை உமா கவர்ந்துவிட்டாள் (அர்த்தநாரீஸ்வரர்), மற்றொரு பாதியை திருமால் (சங்கர நாராயணன்) கவர்ந்துவிட்டார். இவ்வாறு இருவரும் உடலைப் பங்கிட்டதால் சிவ பெருமான் என்பவரே இல்லை என்றார்.

இதைக் கெட்ட அரசனுக்கு திருப்தி வரவில்லை. கேள்விகள்தான் வந்தன. போஜராஜன் கேட்டான்: புலவரே, சிவன் இறக்கவே முடியாது. அப்படியானால் சிவனின் தலை மீதிருந்த கங்கை எங்கே? தலையில் அணிந்த இளம் பிறை எங்கே? அவர் கழுத்தில் நிலவும் பாம்பு எங்கே? அவருடைய கையில் இருந்த திருவோடுதான் எங்கே? என்றான்.

முதலில் மன்னனின் கேள்விகளைக் கேட்டுவிட்டு திடுக்கிட்டுப்போன புலவன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு கதை, இல்லை, கவிதை, விட்டார். அடடா! சொல்ல மறந்துவிட்டேனே, அவர் மீதிருந்த பிறைச் சந்திரன் வானத்திற்கு ஓடிப் போய்விட்டான். பாம்போ பூமிக்குள் இருந்த துளையில் புகுந்துவிட்டது. கங்கை கடலில் கலந்துவிட்டாள். சிவன் கை திருவோடு என் கைக்கு வந்து விட்டது. சிவ பெருமானின் மாபெரும் கொடைத் தன்மை போஜராஜன் என்ற மன்னனிடம் போய்விட்டது என்று போட்டார் ஒரு போடு! போஜ மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி. ஏழைப் புலவன் திருவோட்டில் தங்கக் காசு மழை பெய்தான்.

 

இந்தியப் புலவர்கள் மேதாவிகள். சமயத்துக் கேற்றவாறு கவி மழை பெய்து, தங்க மழையில் நனைவார்கள். மற்றொரு புலவர் ராமநாத சேதுபதியிடம் பொன்முடிப்பு வாங்கச் சென்றார். அவர் தங்கத் தட்டில் பணமுடிப்பு வைத்துத் தந்தார். பண முடிப்பை எடுத்துக் கொண்டு தட்டைத் திருப்பித் தருவது வழக்கம். அவர் புத்திசாலித் தனமாக பணத் தட்டு மன்னனுக்கோ? ஏழைப் புலவருக்கோ? என்றார். மன்னன் சிரித்துக் கொண்டெ ‘உமக்கே’ என்றான். புலவருக்கு அன்று இரட்டை போனஸ்!

(பணத்தட்டு என்றால் பண முடை, பணம் போதாத நிலை என்ற அர்த்தமும் உண்டு).

 

Please read earlier Bhoja Raja stories in this blog:

1.Strange Link between Shiva, Socrates and Thiruvalluvar

2. Who is Dhananjayan?

3. World’s Largest Story Collection

4.போஜராஜன் செய்த தந்திரம் ( in Tamil)

contact: swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment