
Compiled by London swaminathan
Date: 14 December 2015
Post No. 2388
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
This article was published in English
எனது மும்பை யாத்திரை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை சென்றபோது நான் பார்த்த இரண்டே இடங்கள் மஹாலக்ஷ்மி கோவிலும், சித்தி விநாயகர் கோவிலும்தான். இம்முறையாவது ஜுஹு பீச்/கடற்கரை, பயங்கர வாதிகள் தாக்கி நூற்றுக் கணக்காணோரைக் கொன்ற தாஜ் ஹோட்டல், இந்தியா கேட் (இந்தியாவின் நுழைவாயில்), விக்டோரியா டெர்மினஸ் (ரயில் நிலையம்), பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஆகியவற்றைக் காண வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். ஆயினும் எனது சம்பந்தியின் வலியுறுத்தலின் பெயரில், விமானத்திருந்து இறங்கிய நாளன்றே மீண்டும் சித்தி விநாயகர் கோவிலுக்கே சென்றோம். ஒரே கூட்டம், அரை நிமிட தரிசனம். கையில் பூ, வாயில் கொழுக்கட்டையுடன் திரும்பினோம். தமிழர்களுக்கு முருகன் எப்படியோ அப்படி மஹாராஷ்டிரர்களுக்கு கணபதி. நாம், அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது போல, அவர்கள் விநாயகரின் எட்டு தலங்களுக்குச் சென்று வருவர். விநாயக சதுர்த்தி அங்கு தேசிய தேசிய திருவிழா!

வெளியே வந்தவுடன் கடைகளில் இருந்த, தமிழ் நாட்டில் காணக்கிடைக்காத பூ வகைகளையும், சிறிய கொழுக்கட்டை முதல் மிகப்பெரிய ராட்சதக் கொழுக்கட்டைகள் (மோதகம்) வரையும் போட்டோ எடுத்தேன்.
நாசிக்கிலிருந்து திரும்பிவந்து மூன்று நாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்ட பின்னர் ஒரு நாள் ‘ஷாப்பிங்’ சென்றோம். பின்னர் ஒரு டாக்ஸியில் விக்டோரியா டெர்மினஸ் சென்றோம். இந்தியா கேட்டுக்கு எதிரே புகழ்மிகு டாஜ் ஹோட்டல் இருக்கிறது. அதில் நைசாக உள்ளே நுழைந்தோம் ரிசப்ஷன் வரை சென்று வழ வழ தரையில் நடந்தோம். எல்லா இடங்களிலும் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி கேட்டுகள் உள்ளன. நம்மைச் சோதித்தே அனுப்புகின்றனர். காரணம்—எதிரேயுள்ள கடல் வழியாக ரப்பர் படகில் வந்த பயங்கர வாதிகள் சுமார் 300 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதே. இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

தாஜ் ஹோட்டலுக்கு எதிரேயிருந்த இந்தியா ‘கேட்’டருகே அன்று கடற்படை விழா நடந்ததால், பக்கத்தில் அனுமதிக்கவில்லை. தூரத்தில் கப்பல்கள் மட்டும் விளக்கொளியில் ஜொலித்தன. தொலைவிலிருந்து இந்தியா கேட்டையும், கப்பல்களையும், நூற்றுக் கணக்கான மின் விளக்கு பொருத்தப் பட்ட அலங்கார குதிரை வண்டிகளையும் பார்த்தோம். நல்ல கூட்டம். குழந்தைகளுடன் வந்தோரும், வெளி நாட்டினரும், அலங்கார குதிரை வண்டிகளில் ஏறி பவனி வந்தனர். ஒரு புறம், சுண்டல், பொறி கடலை விற்பனை நடந்து கொண்டிருந்தது. மறு புறம் இளம் சிட்டுகள் ‘செல்பி’ படம் எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வியாபாரி ஐம்பது ரூபாய் விலையுள்ள ராட்சத பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்!
வீர சிவாஜி வாழ்க (ஜய ஜய பவானி: பாரதி பாட்டு)
மஹாராஷ்டிரத்தில் விநாயகருக்கு அடுத்தபடியாக போற்றப்படுபவர் வீர சிவாஜி! பல இடங்களில் இவரது சிலை உண்டு. இந்தியா கேட் வீர சிவாஜி, ஏர்போர்ட் வீர சிவாஜி ஆகியவற்றை காரிலிருந்தே படம் எடுத்தேன். சாண்டாக்ரூஸ் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி விமான நிலையம். இப்படி ரயில் நிலையம், விமான நிலயம், மியூசியம் எல்லவற்றின் பெயர்களையும் சிவாஜியின் பெயரில் மாற்றிவிட்டனர். மொகலாய சாம்ராஜ்யத்தை விழுத்தாட்டி, முஸ்லீம்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த சிவாஜியின் பெயரை நம் நாட்டிற்கே சூட்டினாலும் அது போ.ற்றப்பட வேண்டியதே.


பம்பாய் ஐடியா/ யோஜனை
சுவிடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ், அமெரிக்கவிலுள்ள நியூ யார்க், இதாலியிலுள்ள ரோம் ஆகிய இடங்களுக்குச் சென்றவுடன், சின்னச் சின்ன பயனுள்ள விஷயங்களை எழுதி இவைகளை ஏன் மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாதென்று கேட்டிருந்தேன். பம்பாயிலும் ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டேன்.
பட்டுப்போன மரங்களுக்கு பல வண்ணப் பெயிண்ட் அடித்து அதில் கண் காது மூக்கு வரைந்து அழகு செய்துவிட்டனர். இதுபோல வைரம் பாய்ந்த மரங்களை நாமும் அலங்கரிக்கலாமே!
பல இடங்களில் மரத்தின் உச்சியில் மஞ்சள் நிற டயர்கள் தொங்கின. முதலில் அவை ஆபத்துக்கு உதவும் லைப் போட் ( உயிர் காக்கும் படகுகள்) என்று நினைத்தேன். மூலைக்கு மூலை அவைகலைக் கண்டவுடன் டிரைவரிடம் கேட்டேன். அவை எல்லாம் டயர்களுக்கு பங்க்சர் ஒட்டும் கடைகளாம். அதை எளிதில் காட்ட மரங்களின் கிளைகளிலிந்து மஞ்சள் நிற டயர்களைத் தொங்க விட்டுள்ளனர். இது போல ரயில் நிலையங்களைக் காட்டவும் பஸ் ஸ்டாப்புகளைக் காட்டவும் நாமும் சில அடையாளங்களை — தொலைவிலிருந்து எளிதில் காணும் அடையாலங்களைத் தொங்கவிடலாமே.

லண்டன் ஐடியா
லண்டனில் பல்வேறு மொழிகள் ( 130 மொழிகள்) பேசுவோர் வாழ்கின்றனர். ஆகையால் செண்ட்ரல் மிடில்செக்ஸ் ஆஸ்பத்தியில் ரிசப்ஷன் பகுதிலிருந்து பல்வேறு வண்ணக் கோடுகள் செல்லும். யாரேனும் பிளட் டெஸ்ட் (ரத்த பரிசோதனை) எங்கே என்றால், சிவப்பு நிறக் கோட்டைக் காட்டி அதைப் பின்பற்றும்படி சைகை காட்டுவர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் FOLLOW THE RED LINE, PLEASE என்பர். இப்படி எக்ஸ்ரே என்றால் நீல நிறம் – என்று முக்கிய டிபார்ட்மெண்டுகளுக்கு கலர் கோடிங் (COLOUR CODING வண்ண அடையாளம்) வைத்துள்ளனர். இதைப் பின்பற்றும்படி வேறு சில மருத்துவ மனைகளுக்கும் நான் எழுதினேன்.
சமீப காலமாக லண்டன் விக்டோரியா (VICTORIA STATION) ரயில் நிலயம் போன்ற பெரிய ஸ்டேஷன்களும் பயணிகளுக்கு இந்த கலர் லைன்களப் போட்டு, பஸ், டாக்ஸி டாய்லட் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி கலர் கோடிங் பின்பற்றலாம். பிளட் டெஸ்ட் BLOOD TEST என்றால் உலகம் முழுதும் சிவப்பும், எக்ஸ் ரே X RAY என்றால் உலகம் முழுதும் நீல நிறமும் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குM? இதே போல டாக்ஸி, ரயில், பஸ் ஆகிய நிலையங்களுக்கும் உலகம் முழுதும் ஒரே நிற சைகைகள் இருந்தால் நலம்.

ஆல மரமும் கரும்பு ஜூசும்
மஹாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் உள்ளன. தென்காசி- செங்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதே போல கரும்புச் சாறும் பல இடங்களில் விற்கப்படுகிறது. இப்போது வெங்காய விலையேற்றமும், தட்டுப்பாடும் இருப்பதால், சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயம் விற்கப்படுவதையும் கண்டோம்.
அஞ்சல்தலைக் கண்காட்சி
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தினமும் இலவச ஆங்கில நாளேடுகள், அறையின் வாசலில் கிடக்கும். அதை எடுத்தபோது அதிலிருந்து விழுந்த நோட்டீஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நவி மும்பை (புதிய பம்பாய்) பகுதியில் ஒரு தபால்தலைக் கண்காட்சி- இலவச அனுமதி – என்று அச்சிட்டிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பன்று மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரில் விரைந்தேன். லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த எந்த தபால்தலைக் கண்காட்சியையும் நான் தவறவிட்டதில்லை. மேலும் சென்னை, மதுரை தலைமைத் தபால அலுவகங்களில் பிலாடெலிக் கவுண்டரில் தபால்தலைகள் வாங்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சென்னை வெள்ளத்தால் விமானங்கள் ரத்தாயின என்று கேட்டு என்ன செய்வதென்று திகைத்தபோது, “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – தபால்தலைக் கண்காட்சி நோட்டீஸ் வந்தது.

தபால்தலைக் கண்காட்சியில் பல இந்திய தபால்தலைகளை விலைக்கு வாங்கினேன். ஆனால் லண்டனில் 150 வியாபாரிகள் ஸ்டால்களில் தபால் தலைகள் விற்பார்கள். மும்பையில் வெறும் அரசு ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. ஆயினும் கும்பல் கும்பலாக பள்ளி மாணவ மாணவியர் வந்து அஞ்சல்தலைகளைத் ‘தரிசித்த’ வண்ணமிருந்தனர். அதைக் கண்டபோது மகிழ்ச்சி பொங்கியது.
தபால்தலை சேகரிப்பு உலகில் அழிந்துவருகிறது. காரணம்: இண்டர்நெட், பேஸ்புக், கம்ப்யூட்டர் கேம்ஸ். இதுதவிர அஞ்சல்தலைகளின் விலையேற்றம்– நான் பிரிட்டனில் ஆண்டுதோறும் வெளியிடும் தபாலதலைகளை வாங்க நூறு பவுண்டுகளுக்கு மேல் செலவிடுகிறேன். இன்னுமொரு காரணம் தபால்தலைகளை ஒட்டுவதற்குப் பதிலாக, போஸ்ட் ஆபீஸ்காரகளே அச்சு முத்திரை குத்தும் வழக்கம் மேலைநாடுகளில் பரவிவருகிறது

உலக அதிசய தபால் கார்டு!!
அஞ்சல்தலைக் கண்காட்சியில் தபால் கார்ட் (போஸ்ட் கார்ட்), உறை முதலியனவும் வாங்கியபோது வியப்பு மேலிட்டது. ஒரு கார்டின் விலை ரூ 2-50, உறையின் விலை ரூ.4. எங்கள் நாட்டு கணக்கில் இரண்டரை பென்ஸ், நாலு பென்ஸ்!! உலகிலேயே குறைந்த தபால் கட்டணம் இந்தியாவில்தான்! இமயம் முதல் குமரி வரையுள்ள பன்னிரெண்டரை லட்சம் சதுரமைல் பரப்பில் உள்ளோரைத் தொடர்புகொள்ள இரண்டரை ரூபாய் போதும்! ஐரோப்பாவில் 15 நாடுகளைக் கடக்கும் தூரம் 3500 மைல் (குமரி- காஷ்மீர்).இதற்கு நாங்கள் 60 பென்ஸ் முதல் ஒரு பவுண்ட் வரை ( ஒரு பவுண்ட்= 100 ரூபாய்) செலவிடுகிறோம்.
வாழ்க இந்தியா! வளர்க அஞ்சல் துறை!

விமானநிலயத்தில் ஒரு சர்ப்ரைஸ் !!
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமானநிலயத்தில் ட்யூட்டி Fரீ கடைப் பகுதியில் கோண்டு இனப் பழங்குடி மக்களின் ஓவியங்கள் கலைப் பொருட்களை விற்கும் இரண்டு கடைகளைக் கண்டேன். மிக அருமையான வண்ண ஓவியங்கள்; கலைப் பொருட்கள். ஆனால் விலையோ யானை விலை, குதிரை விலை!! பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவர்கள் அனுமதி கேட்டு புகைப் படமும் எடுத்தேன். நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்டுகள் வனம் என்பதே = கோண்ட்வானா லாண்ட்= காண்ட வனம் என்பதை நிரூபித்து இருக்கிறேன். காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது தென் அமெரிக்காவுக்குச் சென்றவர்களே மாயா இன மக்கள் என்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். ((காண்டவ = கோண்ட், காண்டவ வனம் = கோண்ட்வானா லாண்ட்.))
இப்பொழுது இந்தப் பழங்குடி மக்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.
வாழ்க காண்டவ வன கோண்ட் மக்கள்!
–Subham–
You must be logged in to post a comment.