
Compiled by London swaminathan
Date: 21 December 2015
Post No. 2411
Time uploaded in London:- 9-35 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்ததேயில்லை என்று பல அரைவேக்காடுகள் அவ்வப்பொழுது தனது அறியாமைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இவை எவ்வளவு தவறு என்பதற்கு வேத காலம் முதல் இன்றுவரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள.
சிலப்பதிகாரத்தில் வைஸ்ய ஜாதியைச் சேர்ந்த கோவலன், தெருவில் கதறி அழுத ஒரு பார்ப்பனப் பெண்ணின் சம்ஸ்கிருத ஓலைச் சுவடியைப் படித்தது, “த, த, த” கதையில் (பிருஹத் ஆரண்யக உபநிஷத்) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசியது, கும்பகர்ணன் சம்ஸ்கிருதத்தில் தவறான வரம் கேட்டது, விருத்ராசுரன் கதையில் ஒரு அசுரப் பிராமணன் தவறாக சம்ஸ்கிருதம் பேசியது, அகஸ்தியர்-வாதாபி கதையில், அகஸ்தியர் சம்ஸ்கிருதம் பேசியது, மஹாபாரத யுத்தத்தில் தர்மன், சம்ஸ்கிருதத்தில் பொய் சொன்னது (அச்வத்தாமா இறந்தான்), ஹாலன் என்ற மன்னன், அவனுடைய மனைவி சம்ஸ்கிருதத்தில் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவுடன் அவள் ‘கொல்’ என்று சிரித்தது – இப்படி நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளை அவ்வப்பொழுது காட்டி வந்துள்ளேன். இதோ மேலும் ஒரு சுவையான கதை.
ஒரு அரசன் பல்லக்கில் பவனி வந்தான். அந்தப் பல்லக்கைப் பலர் தூக்கி வந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து, இந்த பாரம் மிகவும் வலிக்கிறதா? என்று கேட்டான். அதை சம்ஸ்கிருத்தில் கேட்டான். அதையும் பிழைபடக் கேட்டான். உடனே பல்லக்குதூக்கி சொன்னான். உன் உடல் பாரம் வலிக்கவில்லை. நீ பேசிய சம்ஸ்கிருதத்தில் உள்ள இலக்கணப் பிழைதான் பொறுக்கமுடியாத வலியைத் தருகிறது என்றான்.
ஒவ்வொரு மொழியிலும் சில குறிப்பிட்ட முறையில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்கால வினைச் சொற்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக தமிழில் இறந்த கால வினைச் சொற்கள்தான் மிகவும் சிக்கலானவை. கிட்டத்தட்ட பத்துவகைகள் உள்ளன. நான் வெளி நாட்டுக்காரர்களுக்குத் தமிழ் சொல்லித் தருவதால் இதை அவர்கள் புரிந்துகொள்ளப் படும் சிரமம் எனக்குத் தெரியும். வா என்பதன் இறந்த காலம் வந்தான். போ என்பதன் இறந்தகாலம் போந்தான் இல்லை! சாப்பிடு என்பதன் இறந்த காலம் சாப்பிட்டான். ஆனல் சா என்பதன் இறந்த காலம் செத்தான்! தமிழ் தெரியாத வெளி நாட்டுக்கார்கள் சா என்பதன் இறந்த காலத்தை சாப்பீட்டான் என்றும், சாத்தான் என்றும் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வரும். வில் என்ற வினைச் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் விற்றான், விற்கிறான், விற்பான் என முக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம் (கல்= கற்றான், கற்கிறான், கற்பான்). சொல் என்பதை சொற்றான், சொற்பான், சொற்கிறான் என்று சொல்ல மாட்டோம் இது போல எல்லா மொழிகளிலும் உண்டு. இப்படி சம்ஸ்கிருதத்திலும் உண்டு. இது தெரியாமல் ஒரு மன்னன் ஒரு தப்பு- இலக்கணத் தப்பு- விட்டான்.
பல்லக்கில் பவனி வந்த மன்னன்:
பாரம் பாததி வா? (என் உடல் பாரம் வலிக்கிறதா) என்றான். இது தவறு.
பல்லக்கு தூக்குபவன் சொன்னான்: “பாரம் ந பாததே யதா தவ பாததி”.
அதாவது பாரம் வலிக்கவில்லை. நீ (தவறாக) சொன்னாயே “பாததி” என்று அதுதான் வலிக்கிறது.

இதிலிருந்து அக்காலத்தில் ராஜா முதல் பல்லக்கு தூக்கிவரை எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசியது தெள்ளிதின் விளங்கும். இதை ஒரு வேளை கற்பனைக் கதை என்று கருதினாலும், மஹாபாரத (அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது), ராமாயண (கும்பகர்ணன் நித்திரை கேட்டது), உபநிஷத (த, த, த கதை) கதைகளை யாரும் பொய்யென்று சொல்லமுடியாது. பிருஹத் ஆரண்யக உபநிஷதம் (பெருங்காட்டு உபநிஷதம்) காமாலைக் கண் படைத்த வெள்ளைக்காரன் கணக்கிலும் கூட மிகப் பழைய நூல். அதாவது இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இந்த த, த, த கதையை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு, ஐ.நா.சபையில் பாடுவதற்கு எழுதிக்கொடுத்த மைத்ர்ரிம் பஜத – என்ற சம்ஸ்கிருதப் பாடலில் எழுதியுள்ளார். ஆக 2800 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பேச்சு மொழி நமது காலத்தில், ஐ நா. சபையிலும் ஒலித்து, அதை ஒலிபரப்பிய 100+ நாடுகளிலும் ஒலித்தது.
வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!
You must be logged in to post a comment.